ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி ‘த வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, போர் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதில் ஜோர்டான், குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் அமைந்த அமெரிக்க ராணுவ தளங்களைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் மட்டும் 9 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இப்போராட்ட நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இதுவரை 37.5 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ₹3,62,10,00,00,000) செலவிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள், உயிரிழப்புகள் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிதிச் சுமையால் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் இப்போரின் தாக்கம் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மே மாதம் கணக்கிடப்பட்ட நிதி மதிப்பீட்டை விட தற்போது வெளியான தொகை மிகவும் அதிகமாகும். ஒப்பீட்டளவில், கடந்த சில மாதங்களிலேயே இந்தச் செலவினம் சுமார் ரூ. 68,000 கோடி வரை அதிகரித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கூட்டியுள்ளது, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த ராணுவப் பங்களிப்பு அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பாத பட்சத்தில், வரும் மாதங்களில் இந்த ராணுவச் செலவினம் மேலும் பல பில்லியன் டாலர்களைக் கடந்து உயரும் எனப் பொருளாதார மற்றும் ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.



