நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால் எதிர்காலத்தில் நாடு முழுவதும் போர்மலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மலர்சாலை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது போதுமான அளவு போர்மலின் மட்டுமே இருப்பதாகவும், இதனால் மலர்சாலை தொழில் எதிர்காலத்தில் சிக்கலுக்கு உள்ளாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போர்மலின் இறக்குமதி செய்யப்படுகிறது. எரிபொருட்களுக்கு டொலர் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் போர்மலின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.
உடல்களை எம்பாமிங் செய்வதற்கு மாற்று வழி இல்லை என்பதால் ஒரு மாதத்திற்குள் போர்மலின் இறக்குமதி செய்ய முடியாவிட்டால், உடலை எம்பாமிங் செய்யாமல் 24 மணி நேரத்தில் இறுதிச் சடங்கை முடிப்பதைத் தவிர உடலைப் பாதுகாக்க வழியில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார்.
இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
வாழ்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் எல்.ஐ.ஓ.சியின் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில் பாலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்கள் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 3 நாட்கள் ஆகிறது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்து கதறி அழுதது. இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா கூட அந்நாட்டுக்கு பெரிதாக உதவவில்லை.
இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டே செல்லும் நிலைதான் தற்போது வரையில் உள்ளது.
ஒன்றுபட்டிருந்த சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து சென்ற பிறகு அந்நாட்டுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்து வந்த மனக்கசப்புகளே தற்போது மோதலாக மாறி இருக்கின்றன.
இதனால் உக்ரைனில் போர் உக்கிரமாக உள்ளது. ரஷிய படைகளின் முன்னால் உக்ரைன் படையால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் உக்ரைனை ரஷியா முழுமையாக கைப்பற்றும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த போருக்கு முக்கிய காரணமாக கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கருங்கடல் துறைமுகமும் அமைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த வரலாற்று பின்னணியில் ரஷியாவின் பாதுகாப்பும் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ரஷியா உக்ரைன் மீது மிகவும் உக்கிரமாக போர் தொடுத்துள்ளது.
பறந்து விரிந்த கடல் பரப்பில் செவஸ்டபுல் துறைமுகத்துக்கு ரஷியா ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறது? அதன் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.
ரஷியாவின் நிலப்பரப்பு என்பது மிகவும் பெரியதாகும். 17 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்நாட்டின் நிலப்பரப்பு பறந்து விரிந்து கிடக்கிறது. 36 ஆயிரம் கிலோ மீட்டர் கடலோரத்தையும் அந்த நாடு பெற்றிருக்கிறது.
இப்படி ரஷிய கடல் பரப்பு மிக நீளமாக இருந்த போதிலும் அதனை ரஷியாவால் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது. ரஷியாவின் கடல் பரப்பு நீளம் வடதுருவம் வரை பரவி இருப்பதால் ஆண்டு முழுவதும் கடல் உரைந்தே காணப்படுகிறது.
இதனால் இந்த கடல் பரப்புகள் ரஷியாவின் வணிக பயன்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன் அற்றே உள்ளது.
கடல் வணிகத்துக்கும் தெற்கு பகுதிகளுக்கும் பண்டமாற்று தொடர்புகளுக்கும் உக்ரைனில் உள்ள செபஸ்டபுல் துறைமுகமே முழுமையாக கைகொடுத்து வருகிறது.
உருக்குலைந்த ரஷியாவின் வீழ்ச்சிக்கு பிறகு அருகில் உள்ள உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ரஷியாவுடன் நல்ல தொடர்பில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய பகுதிகளுக்கு அருகில் உள்ள ருமேனியா, லித்து வேனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய மேலைநாடுகள் மற்றும் நேட்டோவுடன் தொடர்பில் உள்ளன.
இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதி ரஷியாவையும், மேற்கு பகுதி ஐரோப்பா பகுதிகளையும் சார்ந்து செயல்பட்டு வருகிறது.
உக்ரைன் நாடு புவியியல் ரீதியாக தெற்கு பகுதியில் உள்ள கிரீமியாவில் செபஸ்டபுல் துறைமுகத்தை பெற்றுள்ளது. ரஷியா-உக்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த துறைமுகத்தை ரஷியா குத்தகைக்கு எடுத்துள்ளது.
அதே நேரத்தில் உக்ரைனின் இறையாண்மையை எப்போதும் பாதுகாப்போம் என்று ரஷியா உறுதி அளித்து இருந்தது.
இந்த நிலையில்தான் உக்ரைன், ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக காய்களை நகர்த்தியது. அது போன்று நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணையக்கூடாது என்று ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால் ரஷியாவின் பேச்சை கேட்காமல் உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் இணைவதில் உறுதியாக இருந்தது. அதற்கான வழிமுறைகளையும் அது கையாண்டது.
இப்படி நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டதால் நேட்டோ படைகள் உக்ரைன் துறைமுகம் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடல்வழி வணிகத்துக்கு பெரும் துணையாக இருக்கும் செபஸ்டபுல் துறைமுகத்தை இழக்க நேரிடும் என்கிற கவலை ரஷியாவுக்கு ஏற்பட்டது.
அதே நேரத்தில் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ரஷியா கருதியது. இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது.
ரஷியாவுடன் உக்ரைன் மோதல் போக்கை கடைபிடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உக்ரைனின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும் ரஷிய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அப்போதுதான் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கிரீமியாவை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து செபஸ்டபுல் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தது.
அப்போதே புதின் உக்ரைனை எச்சரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அளவுக்கு மீறி ஒரு விசயத்தில் கால்பதித்தால் அது உங்களையே திருப்பி தாக்கும் என்று அவர் எச்சரித்து இருந்தார். அதுதான் இப்போது உக்ரைன் விவகாரத்தில் நடந்துள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட உக்ரைன் ஆதரவு நாட்டினர் தங்கள் எல்லை பகுதிகளுக்குள் வராமல் ரஷியா தங்களை உறுதியாக பாதுகாத்துக் கொள்ளவே போரை நடத்தி வருவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இலங்கை மின்சார சபையினால் தமக்கு வழங்கப்பட்ட முறைசாரா மற்றும் வழக்கத்திற்கு மாறான மின் கட்டணம் காரணமாக கட்டணம் அதிகரித்து உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சரண வீதியில் வசிக்கும் அமைச்சர் ஒருவரின் வீட்டில் 83 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததாக வெளியான செய்திகள் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தாம் 7 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணத்தை செலுத்தியதாகவும், தாம் பொறுப்புள்ள நபர் என்பதாலேயே குழப்பமான சூழ்நிலையிலும் இவ்வளவு தொகையை செலுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையற்ற மின்கட்டணம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
டீசல் லீற்றருக்கு 15 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபாவினாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுளளது.
ஐஓசி நிறுவனம் இவ்வாறு விலை உயர்த்தியுள்ளது.
புதிய விலையின்படி 92 ஒக்டேன் பெற்றோல் 204 ரூபா எனவும் ஒரு லீற்றர் டீசலின் விலை 139 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது.
இம்மாதத்தில் லங்கா ஐ.ஓ.சி மேற்கொள்ளும் இரண்டாவது எரிபொருள் விலை மாற்றம் இதுவாகும்.
ஶ்ரீ இராமர் ஜென்ம பூமியான இந்தியாவின் அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ஶ்ரீ ராமர் பாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
ஶ்ரீ ராமர் இலங்கையில் காற்தடம் பதித்த இடங்கள் தோறும் கொண்டு செல்லப்படவுள்ள இந்த புனித வௌ்ளிப் பாதங்கள் அயோத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
பாரதத்தை சேர்ந்த சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் அயோத்தியில் இருந்து ஶ்ரீ ராமரின் புனித பாதங்களை இலங்கைக்கு கொண்டுவந்தனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த யாத்திரிகர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கையில் ஶ்ரீ ராமர் பாதம் பதித்த இடங்கள் தோறும் இந்த புனித பாதங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
இதன்போது, சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், ஶ்ரீ ராமரின் புகழ் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போது அமைச்சுப் பதவி எதுவும் இன்றி ஏமாற்றத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு ஏமாற்றத்தில் உள்ளார்.
ஆளும் அரசாங்கத்துடன் இணைந்த பின் தனக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர், தான் அங்கம் வகித்த கட்சியை பகைத்துக் கொண்டு தனியாக தொழிற்சங்கம் ஒன்றை ஏற்படுத்தி ஏனைய கட்சிகளைச் சேர்ந்த அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரையும் தனது அணிக்குள் இணைத்துக் கொண்டார்.
ஆனால் இன்னும் இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்காத காரணத்தால் பெரும் ஏமாற்றத்தில் உள்ளதாகவும் அநியாயமாக தனது அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டதாகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.
ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்பில் பாரிய கேள்வி எழுந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (25) விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, மேலதிக விசாரணைகளுக்கு நம்பகமான மற்றும் பக்கச்சார்பற்ற குழுவொன்று தேவை என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
"இறுதியாக ஷானி அபேசேகரவின் வாக்குமூலம் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் தொடர்பு இருப்பதாக ஷானி அபேசேகர கூறுகிறார். அவர்களை ஏன் கைது செய்தீர்கள்? ஏன் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்? இந்த அம்பலப்படுத்தல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையா? இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அனைவரும் பக்கச்சார்பற்ற ஒரு குழுவை நியமிக்க வேண்டும்" என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க 18வது மைல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விமான நிலையத்தினால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு விமான நிலையத்தைத் தவிர, ஏனைய தனியார் வாகனங்களும் அந்த இடத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை குறித்த நிரப்பு நிலையம் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பரபரப்பாக நகரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தாலும், வயதை காரணம் காட்டி அதில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்கள்.
ஆனாலும் ஒரு சிலர் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் நிரூபித்து வருகின்றனர். இந்த நிலையில் 62 வயது மூதாட்டி ஒருவர் 6,129 அடி உயர மலையில் ஏறி சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் நாகரத்னம்மா (வயது 62). இளம்வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு மலைகளில் ஏறியுள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள், கணவரை கவனிக்கும் பொருட்டு அவர் மலையேற்றம் செல்வதை தவிர்த்து வந்தார். கடைசியாக தனது 22 வயதில் நாகரத்னம்மா மலையேற்றம் சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் மலையேற்றம் செல்லவில்லை.
இந்த நிலையில் மகன், மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதாலும், கணவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாலும் மீண்டும் மலையேற்றத்தில் ஈடுபட நாகரத்னம்மா விரும்பினார். இதுகுறித்து அவர் தனது மகனான சிவக்குமார் என்பவரிடம் தெரிவித்து இருந்தார். தாயின் ஆசையை நிறைவேற்ற சிவக்குமாரும் விரும்பினார். இந்த நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா-தமிழ்நாடு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 6,129 அடி உயர அகஸ்தியர் மலையில் மலையேற்றம் செய்ய நாகரத்னம்மா முடிவு செய்தார்.
இதையடுத்து மகன் சிவக்குமாருடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயில் மூலம் சென்று இருந்தார். இதன்பின்னர் அகஸ்தியர் மலையில் மலையேற்றம் மேற்கொள்ள இருந்த 13 பேர் குழுவுடன், நாகரத்னம்மாவும் இணைந்து கொண்டார். அவரை மற்றவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.
ஆனாலும் மூதாட்டி என்பதால் நாகரத்னம்மா மலையேறி விடுவாரா என்று வனத்துறையினர் யோசனையில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்களின் யோசனை தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்களுக்கு போட்டியாக நாகரத்னம்மா வேகமாக மலையேறினார். மலை உச்சிக்கு சென்ற அவர் குழந்தையை போல துள்ளி குதித்தார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நாகரத்னம்மா புடவை கட்டி கொண்டு மலையேறி உள்ளார்.
இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பார்த்த பலரும் நாகரத்னம்மாவை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து நாகரத்னம்மா கூறும்போது, எனக்கு மலையேற்றம் ஏறுவதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால் கணவர், மகன், மகளை கவனிக்கும் பொருட்டு கடந்த 4 தசாப்தங்கள் அதாவது 40 ஆண்டுகள் மலையேற்றம் செல்லவில்லை.
40 ஆண்டுகள் கழித்து மலையேற்றம் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களிலும் எனது மலையேற்ற பயணம் தொடரும் என்றார். அவரது லட்சிய பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்!