web log free
April 16, 2024
kumar

kumar

கொழும்பு - கண்டி வீதியில் ரதாவடுன்ன 45 ஆம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனமும் இராணுவத்தினர் பயணித்த காரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், இவர்களில் சாரதி ஆபத்தான நிலையில் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டம் நேற்று (19) விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸின் முதல் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 78 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி நான்காம் நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.

முன்னணி ஆட்டக்காரர்களான லபுசாக்னே (13), ஸ்டீவன் ஸ்மித் (6) சொற்ப ஓட்டங்களில் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடு அதிர்ச்சியளித்தனர்.

இறுதியில் (18) ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்கள் குவித்தது.

ஐந்தாவது மற்றும் இறுதி நாளான (19) அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற 174 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதே சமயம் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டது, இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 92.3 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒன்பது HIV நேர்மறை ஓரினச்சேர்க்கையாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 165 எச்ஐவி HIV நேர்மறையாளர்கள் பதிவாகியுள்ளனர். 2009க்குப் பிறகு முதல் காலாண்டில் பதிவான அதிகபட்ச எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இதுவாகும்.

 

எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா கொரியா, மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருவதாகத் தெரிவித்தார். 

இந்த நோய் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் ஏற்படும் மெலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீரைக் குடித்தல் போன்றவற்றின் ஊடாக இந்த பாக்டீரியாக்கள் பரவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சேவை நீடிப்பில் உள்ள சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஜனாதிபதி, நாடு திரும்பிய பின்னர், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் தீர்மானம் எடுப்பார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

வீடு வாங்கித் தருவதாகக் கூறி 70 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புறக்கோட்டை தொழிற்சங்கத் தலைவர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 

கொம்பனித்தெரு வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீடமைப்புத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இரண்டு தடவைகள் காசோலைகள் மற்றும் பணத்தின் ஊடாக இந்த தொகையை சந்தேக நபருக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, கொம்பனித்தெரு பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் இன்று (20) கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கண்டியைச் சேர்ந்த ஜயந்த முனவீர என்பவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் பிரிவு 07க்கு முறைப்பாடு செய்திருந்தார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர்தான் தமது தலைவர் எனவும்  ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்  தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் நன்றாக இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதனைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8 மாதங்களில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்களில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு.

இதுதவிர மேலும் நான்கு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதில் அனைவருக்கும் சமூக தொடர்பு இல்லாததே காரணம் என உறுதி செய்யப்பட்டது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் முன்னாள் மனநல மருத்துவர் டாக்டர் டபிள்யூ.எல். விக்ரமசிங்க பொதுவாக, பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்களின் அனுபவம் குறைந்துள்ளதுடன், சகிப்புத்தன்மையும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

பாடசாலை பருவத்திலிருந்தே குழந்தைகளின் திறன்களைக் கண்டறிந்து, இலவச மன நிலையுடன் பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர்களை வழிநடத்த அனுமதிக்கவும், விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது முடிந்தவரை சமாளிக்க அனுமதிக்கவும் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று நிபுணர் மருத்துவர் கூறினார். 

பொதுவாகப் பல்கலைக்கழகங்களைப் பார்க்கும் போது, பெரும்பாலான மாணவர்கள் தனியாகச் செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், பரீட்சை குறித்த பயம் ஏற்கனவே உருவாகியுள்ளது என்றும், குழந்தைகளின் மன சுதந்திரத்தில் சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 53 வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று (19-06-2023) ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

அதேநேரம் இலங்கை தமிழர்களுக்கு நீதிகோரி அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் நிழற்பட ஆதாரங்களை ஜெனிவா முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கே வருகின்ற வெளிநாட்டினர், பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிழற்படம் குறித்து தமிழின செயற்பாட்டாளர் விளக்கமளித்து வருகின்றனர்.

கடந்த பல வருடங்களாக இந்த நிழற்படக் காட்சி இடம்பெற்று வருகின்றது. இன்று வெளிநாட்டவா்கள் பலா் இவற்றை பாா்வையிட்டுவருவதையும் அவதானிக்க முடிந்தது.