வெளிநாடுகளிலும், பல்வேறு தொழில்களிடமும் பணத்தை வைப்புச் செய்து அதிக லாபம் தரும் தொகை தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய பெண்ணை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணை நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு - உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியை ஆடம்பரமான அலுவலகம் நடத்துவதற்காக வாடகை அடிப்படையில் சந்தேக நபர் எடுத்துள்ளார்.
அதற்காக மாதம் 16 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் பண டெபாசிட், ரத்தினம் மற்றும் நகைகளுக்கான டெபாசிட், வெளிநாட்டு கரன்சி முதலீடு போன்ற தொழில்களுக்கு அதிக லாபம் தரும் வட்டியை தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்தேக நபரின் நிறுவனத்தில் அதிக வட்டி பெறும் நோக்கில் கோடீஸ்வர தொழிலதிபர்கள், பலம் வாய்ந்த அரசியல்வாதிகள், பிரபல வைத்தியர்கள் உட்பட ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்காதது தொடர்பாக சுமார் 10 தொழிலதிபர்கள் புகார் அளித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் மோசடியில் பிரபல அரசியல்வாதி ஒருவரும் சிக்கியுள்ளதோடு, குறித்த பெண் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த பெண் 226 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்கள் மற்றும் தங்கப் பொருட்களை மோசடி செய்துள்ளதாக வர்த்தகர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த சந்தேகநபர் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றின் பாதுகாவலர்களை துப்பாக்கிகளுடன் பெற்றுக்கொண்டு அவர்களின் பாதுகாப்பில் பயணித்துள்ளார்.
இந்த பெண் நாட்டில் உள்ள பல பிரபல கோடீஸ்வரர்களுடன் டேட்டிங் செய்துள்ளதாகவும், அவர்களுடன் நேரம் செலவழித்த வீடியோக்களும் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த காட்சிகள் மூலம் குறித்த நபர்களிடம் கோடீஸ்வரர்கள் பணம் பெற்றுக்கொண்டார்களா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், சந்தேகநபருக்கு எதிராக தற்போது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.
மீண்டும் பணம் கோரிய வைப்பாளர்களுக்கு பெறுமதியான காசோலைகளை அவர் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்டாலும் சந்தேக நபரின் கணக்கில் ரூ.35,000 மற்றும் ரூ.65,000 சிக்கியதும் தெரியவந்துள்ளது.
உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கச்சா எண்ணெய்க்கான அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை இவ்வாறு மூட தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எனினும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது.
சீனா உட்பட பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி நடுநிலை வகித்துள்ளன.
அதன்படி, 13 மேலதிக வாக்குகளால் இலங்கைக்கு எதிரனா ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களினால் தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம்.
இதன்போது எம் இதுவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதனை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட ep bey 2600 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே எம்மை பின்தொடர்ந்து வந்தது. இதுதொடர்பில் எமது பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்திற்கு பின்னர் எங்களது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புலனாய்வாளர்களே எங்களை பின்தொடர்வதாக தெரிவித்தார்.
இந்த நேரத்தில் எங்கள் இருவர் சார்பிலும் நான் இந்த இடத்தில் முக்கிய கேள்வி ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன். எதிர்கட்சியில் உள்ளவர்களை ஏன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர்.
புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார்கள் சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்கின்ற கேள்வியினையும் நான் முன்வைக்கின்றேன்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளினால் எங்கள் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டோக்கியோவில் உள்ள அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இலங்கையின் கடன் வழங்குநர்களின் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு ஜப்பான் இன்னும் உடன்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடனாளிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் இணைத் தலைமை தாங்குவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் ஜப்பானின் இந்த நிராகரிப்பு ஏற்பட்டதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற இருதரப்பு கடன் வழங்குநர்கள் உட்பட சுமார் 30 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைப் பற்றி இலங்கை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அவர்களில் ஒருவர் பேச்சுவார்த்தையின் இணைத் தலைவராக இருக்கக்கூடும்.
பாராளுமன்ற கோப் குழுவின் தலைவராக மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு இன்று கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
அதற்கமைய அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடும்.
அரச நிறுவனங்கள் சிலவற்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை ஆகியன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மே 5, 2008 அன்று, சந்தேக நபரின் வீட்டில் சிறுமியை கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டப்பட்டு வன்புணரவுக்குள்ளாகியுள்ளார். இதன்படி, நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பை மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன ஜயவர்தன இன்று அறிவித்தார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, தனது வாடிக்கையாளரின் வயதை கருத்திற் கொண்டு அவருக்கு தண்டனை வழங்குமாறு நீதிமன்றில் கோரினார். ஆனால் சிறுமியொருவரின் இந்த வன்புணர்வை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையாகிய அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் தண்டனை வழங்குமாறும் அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார். அதன்படி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சிறுமிக்கு 150,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நிலைமை குறித்து அறிக்கை அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் கருத்துகளை முன்வைப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.