போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்த்தியை பாதிக்கின்ற விடயம். இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற கட்டாயதேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றை மூன்று வகையாக பிரித்து பார்க்கலாம்.
போதைப்பொருள் வருவதை தடுப்பது முக்கிய செயற்பாடு. அரச அதிகாரிகளோடு பொலிசாரோடு இணைந்து இதை செய்வதில் பாரிய இடர்பாடுகள் காணப்படுகிறது.
காரணம் அதிகாரிகள், பொலிசார், படைத் தரப்பினருக்கு போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
இதற்கான பல தகவல்கள் எங்களிடம் இருக்கிறது .இதனை தடுப்பதற்காக இதனை செய்பவர்களை காட்டிகொடுக்கின்ற போதேல்லாம் அவர்களோடு பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து செயற்படுவது அம்பலமாகி இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்தினால் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டும்
இதற்கான செயல்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் நாம் பாடசாலை ரீதியாக இதனை ஆரம்பிக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் ஐம்பத்திரண்டு வயதான வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் நேற்று பிற்பகல் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், மாலையில் இருந்து அவர் பதிலளிக்காததால், அவரது மனைவி ஜிபிஎஸ் மூலம் தொழிலதிபரை கண்டுபிடித்தபோது அவர் பொரளை கல்லறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரின் சாரதி இருக்கையில் கட்டப்பட்டிருந்த ஷாஃப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவரது கழுத்தில் கம்பியால் இறுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த வர்த்தகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான ரூபா பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்காத நபர் ஒருவருக்கு எதிராக குறித்த வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாங்கொட நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆளும் பொதுஜன பெரமுன 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் பதிவாகியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாக்களிக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ஜனதா விமுக்தி பெரமுனவின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை அளவில் ஏற்றுள்ளன என்று அறியமுடிகின்றது.
அத்துடன், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களுக்கும் உடனடி தீர்வுகளை வழங்குவது சம்பந்தமாக சாதகமாக ஆராயப்பட்டுள்ளன.
நல்லிணக்கத்துக்கான சர்வக்கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜே.வி.பி. என்பன சர்வக்கட்சி கூட்டத்தை புறக்கணித்திருந்தன. விமல், கம்மன்பில உள்ளிட்டோர் பங்கேற்காவிட்டாலும், அவர்களின் கூட்டணி பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.
சுமார் 2 மணி நேரம்வரை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாகவே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2023 பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், அரசமைப்பில் தற்போது ஓர் அங்கமாகவுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஆரம்ப புள்ளியாக கருதி, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முடிவும் எனவும் அவர் கூறியுள்ளார். மலையக தமிழர்களின் அபிலாஷைகள் பற்றியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு காலமெடுக்கும் என்பதால், என்ன அடிப்படையிலான தீர்வு என்ற இணக்கப்பாட்டுக்கு பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் வர வேண்டும் என ஜனாதிபதி தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முடியாத பட்சத்தில், இயலாமை தொடர்பில் அறிக்கையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
" புதிய அரசமைப்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்படக்கூடும், ஆனால் தீர்வு பற்றி இணக்கப்பாட்டு ஆவணத்தை வழங்கினால் அது நம்பகமாக இருக்கும்." என இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
" படையினர், வன திணைக்களம், மகாவலி அதிகார சபை என்பன ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களின் காணிகள், சுதந்திர தினத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும். காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை வரவேற்கின்றோம். ஏனையோரும் விடுவிக்கப்பட வேண்டும். " எனவும் சம்பந்தன் இடித்துரைத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பற்றி கருத்து வெளியிடுகையில்,
" காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள். தற்போது நாடகமாடவேண்டியதில்லை. எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பொறுப்புகூறப்பட வேண்டும் அதனை உடனடியாக செய்யலாம்." எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தான் இவ்வாறு கருத்து வெளியிட்டதை சம்பந்தன் உறுதிப்படுத்தினார்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உடனடியாக கோரப்பட்ட தீர்வுகளுக்கு, நிறைவேற்று அதிகாரத்துறையில் இடம்பெறவேண்டிய பொறுப்பு உரிய வகையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
அடுத்த சுற்று பேச்சை ஜனவரி முற்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
" தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதுபோல, படையினரையும் விடுவித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்." - என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
"இன்று எல்லா அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டுவருகின்றார். அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலையில் இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் இன்று வரிசை யுகம் முடிந்துவிட்டது எனவும், இயல்பு நிலை திரும்பிவிட்டது எனவும் சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல, பொருட்களின் விலைகள் எகிறிவிட்டன. மக்களின் கொள்வனவு சக்தி குறைந்துவிட்டது. அதேபோல எரிபொருள் உள்ளிட்டவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் வழங்கப்பட்டுவருகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டக்கல்லூரிக்கு சென்றிருந்தவேளை, அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக ஏற்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் தெரிவாகி இருந்தாலும், மக்கள் ஆணை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
என்னதான் அதிகாரம் இருந்தாலும் தர்மத்தின் பக்கம் நிற்பதே சரியான தீர்மானம். ஆனால் ஜனாதிபதி ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டு மக்களை ஒடுக்க முற்படுகின்றார்." என்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக்கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து நாம் அனைவரும் கவனம் செலுத்தி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச ஊடாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
கோதுவை மா கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோ வௌ்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.
அதேவேளை இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீனின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 490 ரூபாயாகும்.
இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (13) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (14) சில பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்கள் சிறிதளவு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் அல்ல, நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க யாருடைய ஜனாதிபதி வேட்பாளர் என ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் சொந்த வேட்பாளர் ரணில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகோட்டேவில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.