பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுடன் கூடிய காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு முழுவதிலும் முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பில் மீண்டும் மதிப்பாய்வு மேற்கொண்டு காணிகளை விடுவிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இங்கு பதிலளித்தார்.
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வணிகங்களை சுற்றுலாத் துறையில் மேலும் வினைத்திறன் மிக்க முதலீடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வினவினர். இதற்கமைய, எதிர்காலத்தில் இது தொடர்பில் ஆய்வு நடத்தி, பொருளாதார நன்மைகளுக்காக அவற்றைப் பயன்படுத்துவது குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சில வழிபாட்டுஸ்தலங்களை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மதவாதம் மற்றும் இனவாதம் என்பன அரசியலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். இந்தப் பகுதியில் உள்ள மக்களின் உண்மையான தேவைக்கு அமைய இந்த சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும், குறுகிய அரசியல் இலாபம் தேடும் குழுவினர் இதுபோன்ற சம்பவங்களை அரசியல் முரண்பாடுகளாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, இதுபோன்று குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், தேசிய அனர்த்தக் குழுவை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கையை விரைவில் பூர்த்திசெய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் (மேஜர் ஜெனரல்) அருன ஜயசேகர (ஒய்வுபெற்ற), கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற), முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
வரையறுக்கப்பட்ட நிதி இடைவெளிக்குள் மாநில வருவாயை வலுப்படுத்த மிகவும் பொருத்தமான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
நிலையான பொது நிதி நிலைமையை அடைய அரசாங்கத்திற்கு அவர்களின் சங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைந்த உண்மையான ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு நீதி வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது பாராட்டத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 - 8591727 அல்லது 071 - 8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணின் விபரங்கள் ;
பெயர் - பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
வயது - 25
தேசிய அடையாள அட்டை இலக்கம் - 995892480v
முகவரி - இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம
இந்த ஆண்டு இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் தாதியர் துறையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 18 ஆம் திகதி வரை 148 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 17 செவிலியர் நிபுணர்கள் பிப்ரவரி 24 அன்று இஸ்ரேலில் வீட்டு செவிலியர் வேலைகளுக்காகப் புறப்பட உள்ளனர்.
அவர்களில் 15 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலிய செவிலியர் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் செவிலியர் துறையில் 2,038 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் தாதியர் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இலங்கையர்களுக்கு உரிமை உள்ளதால், இஸ்ரேலில் தாதியர் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல் தலைவரான கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் நபர் இன்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் முகமது அஸ்மான் ஷெரிப்தீன், வயது 34.
அவர் ராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட் ஆவார். கடந்த சில வருடங்களாக சீதுவ மற்றும் கல்கிஸ்ஸை காவல் பிரிவுகளில் ஏழு கொலைகளைச் செய்த நபர் இவர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் சொகுசு வேனில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயர் பாதுகாப்பு கொண்ட கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளில், சந்தேக நபர் ஒரு வழக்கறிஞர் வேடமணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகிறது. தாக்குதலுக்குப் பிறகு அவர் தப்பிச் சென்றார்.
சந்தேக நபரைக் கைது செய்ய ஒரு பெரிய பொலிஸ் நடவடிக்கை நடந்து வருகிறது.
புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள்ளே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சஞ்சீவ சமரக்கோன் எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொல்லப்பட்டார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ இன்று(19) முற்பகல் வழக்கொன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு சாட்சிக்கூண்டில் நிறுத்தப்பட்ட போதே சுட்டுக்கொல்லப்பட்டார்.
சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நீதிமன்றத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்ததோடு, பலத்த காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 39 வயதுடைய தந்தையும், 6 வயதுடைய மகளுமே உயிரிழந்ததாகவும், இவர்கள் இருவரும் கல்பொத்த வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்திற்காக T56 ரக துப்பாக்கி பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு - செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த யோசனைகள் பின்வருமாறு :
⭕ இந்த வருடம் 5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைவதே எதிர்பார்ப்பு
⭕ மூலதனச் செலவுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 4%
⭕ தேசிய மேலாண்மை கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா
⭕ இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலாக டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை
⭕ இலங்கை பொருளாதார அதிகார சபை உருவாக்கப்படும்
⭕ கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை ஜப்பானின் நிதியுதவியுடன் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை
⭕ புதிய மற்றும் கண்டுபிடிப்பு நிதியத்தை ஸ்தாபிக்க 1,000 மில்லியன் ரூபா
⭕ அரசாங்கத்திற்கு சொந்தமான சகல சொகுசு வாகனங்களையும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஏலத்தில் விட நடவடிக்கை
⭕ MPக்களுக்கு வாகனமோ அல்லது வாகன அனுமதிப்பத்திரமோ கிடையாது
⭕ அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பலன்களை மதிப்பீடு செய்ய குழு
⭕ கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு சத்துணவு திட்டத்திற்காக 7,500 மில்லியன் ரூபா
⭕ சுகாதாரத் துறைக்காக 604 பில்லியன் ரூபா
⭕ தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா
⭕ பாடசாலைகளை அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,000 மில்லியன் ரூபா
⭕ முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை முதல் 1,000 ரூபாவால் அதிகரிப்பு
⭕ மஹபொல மாணவர் உதவித்தொகை 7,500 ரூபாவாக அதிகரிப்பு
⭕ தரம் 5 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1500 ரூபா நிதியுதவி
⭕ யாழ்.நூலகத்திற்கு கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க 100 மில்லியன் ரூபா, ஏனைய நூலகங்களின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா
⭕ திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளின் கூட்டு அபிவிருத்திக்கு நடவடிக்கை
⭕ பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்காக 5,000 மில்லியன் ரூபா
⭕ நெல் விநியோக சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை
⭕ நீர்ப்பாசனத்துறை அபிவிருத்திக்காக 78,000 மில்லியன் ரூபா
⭕ வடக்கு தெங்கு முக்கோணம் உள்ளிட்ட புதிய தென்னந்தோப்பு அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா
⭕ சமூக பாதுகாப்பு செலவு (இழப்பீடு) 232.5 பில்லியன் ரூபா
⭕ சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை 10,000 ரூபாவாக அதிகரிப்பு
⭕ முதியோர் உதவித்தொகையை ஏப்ரல் மாதத்திலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை
⭕ சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் புனர்வாழ்வு மையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், ஆதரவற்ற சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
⭕ இயற்கை அனர்த்தம் மற்றும் வனவிலங்கு பாதிப்பால் இடம்பெறும் உயிரிழப்புகள், அங்கவீனமடைவோருக்கான இழப்பீட்டு தொகை 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு
⭕ சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறப்பு வட்டி யோசனைத் திட்டம்
⭕ பண்டிகைக் காலத்தில் லங்கா சதொச ஊடாக உணவுப்பொதி
⭕ கொழும்பு நகரை சூழ வசதியான 100 பஸ்கள். 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
⭕ புதிய பஸ் நிறுவனத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை
⭕ ரயில் பெட்டிகளை மறுசீரமைக்க 500 மில்லியன் ரூபா
⭕ தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் ஒன்றிணைந்த நேர அட்டவணையில் பயணிக்க யோசனை
⭕ போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்ப 500 மில்லியன் ரூபா
⭕ ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு நாளாந்த நடவடிக்கைகளுக்காக திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படமாட்டாது
⭕ கிராமங்களில் வீதி அபிவிருத்திக்காக 3000 மில்லியன் ரூபா
⭕ வட மாகாணத்தில் கிராம வீதிகள் மற்றும் பாலங்களின் அபிவிருத்திக்காக 5,000 மில்லியன் ரூபா
⭕ பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
⭕ மலையக தமிழ் இளைஞர்களின் தொழில்பயிற்சி வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக 2,450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
⭕ மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக 866 மில்லியன் ரூபா
⭕கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக 750 மில்லியன் ரூபா
⭕ யானை - மனித மோதலை கட்டுப்படுத்த வரவு - செலவு திட்டம் 640 மில்லியனாக உயர்வு
⭕''இலங்கையர் நாள்'' தேசிய வைபவத்தை நடத்த யோசனை. அதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
⭕ அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 15,750 ரூபாவாக உயர்த்தப்படும்,
அரச சேவையின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக 15,750 ரூபாவால் அதிகரிப்பு
⭕ தனியார் துறையில் குறைந்தபட்ச மாத சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்
⭕ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தலையீடு செய்யும்
⭕ அரச ஊழியர்களுக்கு 8,250 ரூபா அதிகரிப்பை குறைந்தபட்ச மாத சம்பள அடிப்படையில் மேற்கொள்ள யோசனை