இன்று இடம்பெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் பாரிய நடவடிக்கைகள் இடம்பெறலாம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் நேற்றுமாலை தீடிரென 36 மணித்தியால ஊரடங்கை அறிவித்தது, அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு சில மணிநேரங்களின் பின்னர் நேற்று மாலை ஆறு மணிமுதல் நாளை காலை ஆறு மணிமுதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் பாரிய விலை அதிகரிப்பு சமையல் எரிவாயு எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு பல மணிநேர மின்துண்டிப்பு உட்பட பல விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதே இந்த ஊரடங்கின் நோக்கம்.
ஜனாதிபதியின் உத்தரவின் பின்னர் இராணுவத்தினரை அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக ஆரம்பமான போதிலும் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் படையினர் பொலிஸாருக்கும் இடையிலான மோதலுடன் முடிவடைந்தது.
முப்படையினரும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்,பொலிஸாரை போல கைதுகளை மேற்கொள்ளமுடியும் என சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை சட்ட ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலைமையை கையாள்வதற்கு பத்தாயிரம் பொலிஸார் தயாராக உள்ளனர் என தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சர்கள் அரசாங்க அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளாவிய ரீதியில் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
ஊரடங்கின் மத்தியில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை எனஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரிலும் ஏனைய முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்வதற்காக படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,
இதேவேளை 36 மணிநேர ஊரடங்கு உத்தரவு குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
மக்கள் பட்டினி கிடப்பதன் காரணமாகவே வீதியில் இறங்குகின்றனர்,மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்மை காரணமாக அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்,தங்கள் குரல்களை எழுப்பும் மக்களிற்கான அரசாங்கத்தின் பதில் அவசரகாலநிலையை அறிவிப்பதும் ஊரடங்கை பிறப்பிப்பதுமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கோரிக்கைக்கு அமைய சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முகப்புத்தகம், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) இரவு நுகேகொட மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் விரைவில் எடுக்கப்பட வேண்டிய விசேட தீர்மானம் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை (03) 6 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 1 மணிநேரம் 40 நிமிடங்களாக மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் மாலை 5.30 மணி தொடக்கம் 10.30 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஜனாதிபதியின் இந்தத் தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் கோட்டாபய அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது என தெரிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6 மணி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத நிலையம் , கடற்கரை போன்றவற்றிற்கு எவரும் செல்வதைத் தடை செய்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தும் உரிமை இலங்கை பிரஜைகளுக்கு உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தெரிவித்துள்ளார்.
ஜனநாயக வெளிப்பாட்டிற்கு இது அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகம் அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரும் நிதானமாக செயற்பட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, துன்பப்படுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் நம்புவதாக Julie Chung தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்திலுள்ள பிரபல ஜோதிடர் ‘ஞானக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று(சனிக்கிழமை) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்திலுள்ள ஞான அக்காவின் சோதிட நிலையத்திற்கு ஆதரவாளர்கள் குழுவுடன் சென்றுள்ளார். இதன்போது குறித்த குழுவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஞானா அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு பதற்றமான நிலை உருவானது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடராக ஞானக்கா இருந்து வருகின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது
உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வர்த்தகம் செய்து வரும் இரண்டு அந்நிய செலாவணி நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை வர்த்தகங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த நிறுவனங்கள் அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள சுவிஸ் பண பரிவர்த்தனை தலைமையகம் மற்றும் அதன் வெள்ளவத்தை கிளை மற்றும் வெள்ளவத்தையில் உள்ள வெஸ்டர்ன் மணி எக்ஸ்சேஞ்ச் பிரைவேட் லிமிடெட் ஆகியவை புதிதாக அடையாளம் காணப்பட்ட பணம் மாற்றும் நிறுவனங்களாகும்.
எச்சரிக்கை அறிவிப்புகள் மூலம் தமக்கு அறிவிக்கப்பட்ட பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் இடைநிறுத்தப்பட வேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.