10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறைக்கான ஆற்றல் பானங்கள், மரச்சாமான்களுக்கான MDF பலகைகள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட 10 பொருட்களில் அடங்கும்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (20) முதல் அமுலுக்கு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தோல்வியுற்ற ஸ்கிரிப்டை அடிப்படையாகக் கொண்ட நாடகம் என முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிடுகின்றார்.
இவர் கொலை செய்யப்பட்டு பொரளை மயானத்திற்கு கொண்டு வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த குற்றவாளி இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார்.
பிரையன் தாமஸ் சந்தேகப்படும்படி மற்றொரு குழுவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமரவீர அணி ஆகியன இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளார்.
சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, முதல் 30 அலகுகளுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான கட்டணமாக 1,500 ரூபாயும், மற்றும் கட்டணமாக 3,000 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித, ஞாயிற்றுக்கிழமை (18) தெரிவித்தார்.
“மின் கட்டண திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் அலகு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.
1,500 ரூபாய் நிலையான கட்டணங்களாகும். அதாவது 30 அலகுகளைப் பயன்படுத்துபவர் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்றார்.
நேற்று (18) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது எஹேடுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகள் இன்று (19) அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் ஐந்து வருடங்களுக்கு பயிர் செய்யப்படாத அனைத்து வயல் நிலங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுவரை 100,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், 2023 ஆம் ஆண்டு அனைத்து வயல் நிலங்களும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் விவசாயம் செய்யப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், தரிசு நிலங்கள் அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு விவசாய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரை உழவு செய்யப்படாத தரிசு நிலங்களின் உரிமையாளர்கள் மீண்டும் நடவு செய்தால் பிரச்சினை இல்லை என்றும், விவசாயம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஐந்தாண்டுகளின் பின்னர் அந்தந்த காணிகளில் பயிர் செய்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து நில உரிமையாளர்கள் தேவையானால் விவசாயம் செய்ய முடியும் எனவும், விவசாயம் செய்யாத பட்சத்தில் காணியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் குறித்த படகை கரை சேர்ப்பதற்காக கடற்படையின் டோரா படகுகள் அப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் தற்போது துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
படகில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக கப்பல் கரைக்கு வந்த பின்னரே மேலதிக விவரங்களை அறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் பதுங்கியிருந்து கைத்துப்பாக்கி மற்றும் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி , 12 தோட்டாக்கள், மக்னீசியம், 100,000 ரூபா, 6,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் பணிப்பெண்கள் இருவரும் வீட்டில் இருந்த போதே இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - பொரள்ளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, நேற்றைய தினம் தினேஷ் சாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
இதன்படி, கழுத்து நெரிக்கப்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பல விசேட போலீஸ் குழுக்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் படுகொலை விசாரணை பிரிவு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காணொளிகள் மற்றும் தொலைபேசி தரவுகளின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொது மயானத்தின் ஊழியர்கள், தினேஷ் சாஃடரின் மனைவி உள்ளிட்ட சுமார் 15 பேரிடம் போலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
தினேஷ் சாஃப்டர், பொரள்ளை பொது மயானத்திற்கு தனியாகவே வருகைத் தந்திருக்கலாம் என ஊகிப்பதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் சாஃப்டரின் கார், பொது மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில், நேற்று முன்தினம் இறுதிக் கிரியை ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த இறுதிக் கிரியைகளில் பங்குப்பற்றும் வகையில் சந்தேகநபர் வருகைத் தந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
தாம் ஒரு கோணத்தில் மாத்திரம் விசாரணைகளை நடத்தாது, பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
பிரையின் தோமஸிடம் மாத்திரமன்றி, தமக்கு கிடைத்த அனைத்து சாட்சியங்களின் ஊடாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
பிரையின் தோமஸிடம் விசாரணை
பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை, பிரையின் தோமஸ் பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து, தினேஷ் சாஃப்டர் ஏற்கனவே போலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.
தான் வழங்கிய பல கோடி ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, தான் செல்வதாக மனைவியிடம் தெரிவித்தே, தினேஷ் சாஃப்டர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, தனது நிறுவனத்தின் கடமையாற்றும் பணிப்பாளர் ஒருவருக்கும் இந்த விடயத்தை தினேஷ் சாஃப்டர் தெரிவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கொக்குணுவல முன்னிலையில் விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிற்கு, வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளார்.
பிரையின் தோமஸிடம் இரண்டு கடவூச்சீட்டுக்கள் உள்ளதாகவும் போலீஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, இரண்டு கடவூச்சீட்டுக்களின் ஊடாகவும் வெளிநாடு செல்ல குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தொலைபேசி தரவுகளின் ஊடாக விசாரணைகளை நடத்த போலீஸார் அனுமதி கோரிய நிலையில், தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து, பிரபல தொழிலதிபர் தினேஷ் சாஃப்டர், கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், உடனடியாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தான் கடனை பெற்றுக்கொள்வதாக தெரிவித்து, நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், தினேஷ் சாஃப்டர், கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.
இவ்வாறு வெளியேறிய தினேஷ் சாஃப்டரின் தொலைபேசிக்கு, அவரது மனைவி பல தடவைகள் அழைப்புக்களை மேற்கொண்ட போதிலும், தொலைபேசி செயலிழந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் ஊடாக தொலைபேசி அலைவரிசையை சோதனை செய்த நிலையில், அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்தை காண்பித்துள்ளதை அவரது மனைவி அவதானித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தினேஷ் சாஃப்டரின் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றுமொரு பணிப்பாளருக்கு அறிவித்த நிலையில், அவர் பொது மயானத்திற்கு சென்ற போதே, தினேஷ் சாப்டர், தனது காரிற்குள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்தே, மயான ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.