web log free
September 20, 2024
kumar

kumar

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் நிதி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நினைவு கூர்ந்தார். 

அத்துடன், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக பேணவும் இருவரும் கலந்துரையாடினர்.

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க நம்புகின்றேன் என்றார்.

கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில் மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியும் ஏற்படுகிறது என்றார். 

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பிரச்சினையை பேசித் தீர்மானிப்பதாக கம்பனிகள் கூறுகின்ற போதிலும் அவ்வாறு அந்தக் கம்பனிகள் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.டொலர் பெறுமதி அதிகரிப்பால் பெருமளவில் இலாபமீட்டிய பெருந்தோட்ட கம்பனிகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வைதையிட்டு கம்பனிகள், வெட்கித் தலைகுனிய வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள், ஆனால் பல ஆண்டுகளாக மோசமான உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர் என உலகளாவிய பாலின இடைவெளியின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கேற்ப, பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலகளவில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன, மேலும் கடந்த மூன்று தசாப்தங்களாக சுகாதார இடைவெளிகளை மூடுவதில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளதாக உலகின் 20 முன்னணி நோய்களின் தாக்கத்தை ஆராயும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கண்டுபிடிப்புகள் லான்செட் பப்ளிக் ஹெல்த் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளன.

இதழின் படி, குறிப்பாக பெண்களைப் பாதிக்கும் தசைப் பிரச்சனைகள், மனநலப் பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் தலைவலி போன்ற நோய்கள் மற்றும் கோளாறுகளை ஏற்படுத்தும் அபாயமற்ற நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதே நேரத்தில், இருதய நோய், சுவாச மற்றும் கல்லீரல் நோய், கோவிட்-19 மற்றும் சாலை விபத்துகள் போன்ற மரணத்தை ஏற்படுத்தும் நிலைமைகள் ஆண்களை விகிதாசாரமாக பாதிக்கின்றன.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான உடல்நல வேறுபாடுகள் வயதுக்கு ஏற்ப வளர்ந்து வருகின்றன, மேலும் பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்நாள் முழுவதும் அதிக நோய்கள் மற்றும் இயலாமை விகிதங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தில் (IHME) ஆய்வின் மூத்த ஆசிரியரான டாக்டர் லூயிசா சோரியோ ஃப்ளோர், கடந்த 30 ஆண்டுகளில் உலகளாவிய ஆரோக்கிய முன்னேற்றம் சீரற்றதாக இருப்பதை அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

பெண்களுக்கு நீண்ட ஆயுட்காலம் உள்ளது, ஆனால் மோசமான ஆரோக்கியத்துடன் ஆண்டுகள் வாழ்கின்றன, நோய் மற்றும் இயலாமைக்கு வழிவகுக்கும் நிலைமைகளின் சுமையைக் குறைப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்துடன், உடல் மற்றும் மன செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயகரமான விளைவுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.

இதேபோல், ஆண்கள் தொடர்ந்து அதிக மற்றும் வளர்ந்து வரும் நோய்களை அபாயகரமான விளைவுகளுடன் அனுபவிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 

கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப்பொதி ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்

எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீர் என்பவற்றின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்திய தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டு தேர்தல் கண்காணிப்பாளர்களாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதற்கு இந்த அழைப்பு வந்துள்ளது. 

இந்தியாவின் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் பற்றிய புரிதலை வழங்குவதற்காக இந்திய ஆளும் கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகையில் பத்து நாடுகளில் உள்ள பதினெட்டு பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

நிலவும் வெப்பமான வானிலை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பருவப்பெயர்ச்சி மழையும் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மாத்திரமே பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற்ற இ.தொ.காவின் பிரமாண்ட மேதினக் கூட்டத்திலேயே இவ்வாறு கூறினார். 

இந்த மே தின நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்,

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். இ.தொ.கா.வின் மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் எமக்கு கற்பித்ததும் அதுதான். 

எதிர்காலத்திலும் இ.தொ.கா சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கின்றனர். உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுக்கொடுத்ததே காங்கிரஸ்தான் என அவர்களுக்கு கூறுகிறோம். 

கம்பனிகளுக்கு ஆதரவாக காங்கிரஸை ஊடங்களில் குறை சொல்கின்றனர். தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தாத கம்பனிகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தைகூட நடத்துவதில்லை இவர்கள். ஆனால், மக்களுக்காக போராடும் இ.தொ.காவுக்கு எதிராக இல்லாதக் கதைகளையும் கூறுகின்றனர். இது ஒரு நாகரீமாகிவிட்டது. 

அதற்கு இன்று இந்தக் கூட்டத்தின் ஊடாக பதில் அளிக்கிறோம். இ.தொ.காவால் மாத்திரம்தான் இலங்கையில் மூன்று நாட்களில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை கூட்ட முடியும். வெறும் மூன்று நாட்களில்தான் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஏனையவர்கள் மாதக்கணக்கில் நோட் புத்தகத்தை வைத்துக்கொண்டு கூட்டத்தை எங்கு செய்வதென திட்டம் வகுத்துக்கொண்டிருக்கின்றனர். 

இ.தொ.காவுக்கான கட்டமைப்பை எமது முன்னாள் தலைவர்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். 1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தருணத்தில் உரிமைகளற்ற சமுதாயமாக நாம் இந்த நாட்டில் இருந்தோம். 

இதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பலத்தின் ஊடாக போராடி இன்று இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு சமமாக படி படியாக உரிமைகள் பெற்ற சமூகமாக மலையக மக்களையும் மாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானாகும். அனைவரும் வரலாறுகளை மறந்துவிடுகின்றனர். 

தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் தந்தை செல்வா தமது கட்சி இரண்டாக பிளவுபட்ட போதும் மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்க அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் கைகோர்த்திருந்தார். எவ்வாறு அனைவரது தியாகங்களுடனும்தான் இன்று நாம் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பெற்ற சமூகமாக மாறியுள்ளோம். 

அதன் பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் சௌமியமூர்த்தி தொண்டமான், கடமைகளை கையளித்திருந்தார். அந்தப் பொறுப்புகளை முழுமையாக முடிக்க முன் அவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும், சௌமியமூர்த்தி தொண்டமான், வழியில் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்த தலைவராக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார். குடியுரிமையை முழுமையாக எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது இவரது காலத்தில்தான். 

இன்று காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கலாம். காங்கிரஸ் என்ன செய்தது என நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் உங்களது தாத்தா பாட்டியை கேள்வி கேட்பதற்கு சமமானது. உங்களது தந்தையை கேள்வி கேட்பதை போன்றது. இவர்கள் இணைந்து என்ன செய்தார்களோ அதனைதான் காங்கிரஸ் செய்தது. 

சம்பளத்தை காங்கிரஸ் வாங்கிக்கொடுக்காது என கூறினர். ஆனால், கடுமையான போராட்டத்தின் ஊடாக நாம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சரவையில் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கும் அரசாங்கத்துக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்தார். 

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நாடாளுமன்றத்திலும் துறைசார் அமைச்சிலும் அழுத்தங்களை கொடுத்தார். பிரதி தலைவர்களான அனுசா சிவராஜாவும், கணபதி கணகராஜும் வாழ்வாதாரத்தை கணக்கிடுவதில் முன்னின்று செயல்பட்டனர். 

பிரதி தவிசாளர் மற்றும் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். பிரதி பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இந்தப் பணியை முன்னெடுத்தனர். இ.தொ.கா என்றால் மலையக மக்கள், மலையக மக்கள் என்றால், இ.தொ.கா.

நாங்கள் வரும் வழியில் இ.தொ.காவின் சுவரொட்டிகளை சிலர் கிழித்திருந்தனர். எமது சுவரொட்டிகளை பார்த்தால்கூட பயமாகவா இருக்கிறது. இதனை பார்த்தால் எமக்கு புதிதாக இருக்கிறது. 

இந்த சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு பல தொழிற்சங்கங்களும் பல சமூக அமைப்புகளும் உதவி செய்தன. இத்தருணத்தில் அவர்களுக்கு இ.தொ.கா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் இ.தொ.கா முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்காது.

அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் அதற்கு அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் அதற்கு அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் இ.தொ.காதான் பேசும். என்றைக்கும் இ.தொ.கா மாத்திரம்தான் பேசும். ஏனையவர்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் மாத்திரமே பேசுவார்கள். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குறுகிய காலத்தில் அதாவது கடந்த மூன்று மாதங்களாகதான் இந்த பேச்சுகள் இடம்பெற்றுவந்தன. ஆகவே, இந்த குறுகிய காலத்தில் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்கியமைக்கான அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்தருணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்ததை நினைவுக்கூறும் வகையில் முத்திரையொன்றை இ.தொ.கா முன்னிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் வெளியிட்டமைக்காக இந்த விசேட நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதேபோன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்த தருணத்தில் 40 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசியையும் 100 மெட்ரிக்தொன் மருந்துகளையும், 500 மெட்ரிக்தொன் பால்மாவையும் வழங்கி மக்களுக்கு உதவியளித்திருந்தார். எவர் உதவி செய்தாலும் அவருக்கு நன்றியை கூறுவது இ.தொ.காவின் மான்பு. 

“போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும்“ என்ற அடிப்படையில் எத்தருணத்திலும் எமது இலக்கில் இருந்து விடுபட மாட்டோம். இ.தொ.காவின் தலைவர் என்ற அடிப்படையில் கட்சியையும் மக்களாகியு உங்களையும் காப்பாற்றும் பணியில் ஒரு அடியேனும் பின்வைக்க மாட்டேன்.” என்றார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவுடன் (30) அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் 92 ஒக்ரெய்ன் ரூ. 3 விலை குறைப்பு புதிய விலை ரூ.368

பெட்ரோல் 95 ஒக்ரெய்ன் ரூ. 20 விலை குறைப்பு புதிய விலை ரூ.420

ஓட்டோ டீசல் ரூ. 30 விலை குறைப்பு புதிய விலை ரூ. 333

சுப்பர் டீசல் ரூ. 9 விலை குறைப்பு புதிய விலை ரூ. 377

மண்ணெண்ணெய் ரூ. 30 விலை குறைப்பு புதிய விலை ரூ. 215