web log free
May 02, 2024
kumar

kumar

அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை நிலைநிறுத்தும் நோக்கில், அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம், முட்டைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்க முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவில் உள்ள 03 நிறுவனங்களிடமிருந்து விலைமனுக் கோரல் விடுக்கப்பட்டுள்ளது.

போயா தினமான நாளை (30) அனைத்து அரச வங்கிகளும் திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் அரச வங்கிகள் திறக்கப்படவுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் (27) மாலை 15 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின், குறித்த சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலி கடற்பிராந்தியத்தில் 7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Mataram நகருக்கு வடக்கே 203 கிலோமீட்டர் தொலைவில் 516 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய - மத்தியதரை புவிசரிதவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

கைப்பேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) இரவு 07:00 மணியளவில் பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி அதே ரயிலில் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் உயிரிழந்ததாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 22 வயது மதிக்கத்தக்க யுவதி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ரயில் பல தடவைகள் ஹார்ன் அடித்த போதும் உயிரிழந்த யுவதிக்கு கேட்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தியாவின் சமீபத்திய ராக்கெட் ஏவுதல் தொடர்பான விவாதங்களுக்கு பதிலளித்தார், மக்கள் பெரும்பாலும் தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட்டுடன் அதை தொடர்புபடுத்துகிறார்கள் என்பதை வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் தன்னிடம் கேட்கப்பட்டதாகக் கூறினார்.

“தனியார் துறையின் திட்டமாக எனது சகோதரரால் ராக்கெட் அனுப்பப்பட்டது. அதில் அரசு முதலீடு இருந்தால் அதை கோப் குழுவின் முன் கொண்டு வர வேண்டும்.

“ஆனால் ஒரு தனியார் வர்த்தகர் செய்த முதலீட்டை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலீடு குறித்து விசாரிக்க விரும்பினால், அது அவரைப் பொறுத்தது, அது அவருடைய பார்வை.

“அரசு முதலீடு இருந்தால் அவர் சம்பவம் குறித்து விசாரணை செய்து கோப் குழுவின் முன் கொண்டு வரலாம்.

"இந்த அறிக்கைகள் அரசியல் சூழலில் சேறு பூசுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டவை, மேலும் இந்த சேறு சறுக்கினால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.

"அரசியல் தன்மையை சிதைத்து, அவர்களின் குழந்தைகளின் பெயர்களை சேதப்படுத்துவதன் மூலமும், அவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பதன் மூலமும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது" என எம்.பி. தெரிவித்தார். 

பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நாட்டில் பணிபுரிய அனுமதி இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு காலி உதவி மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்தார்.

மேலும், மாவட்ட செயலக அழைப்புகளில் கலந்து கொள்ளாத அமைப்புகளின் பதிவு இரத்து செய்வது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அரச சார்பற்ற நிறுவனங்கள் தேசிய செயலகத்திற்கு அறிவிக்க தீர்மானித்துள்ளதாக காலி உதவி மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான சிக்கல் நிலைகள் காரணமாக, பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நாட்டில் பணிபுரிய அனுமதியில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிலாவெளி கோகண்ணா விகாரை நிர்மாணப் பணிகளுக்கு ஆளுநரால் இடையூறு ஏற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோகண்ணா விகாரையை பாதுகாக்கும் அமைப்பினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பெருந்தொகையான தேரர்களும் வருகைதந்து பிரதான வீதியை மறித்து வீதியில் படுத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வணக்கத்திற்குரிய பொல்ஹேன்கொட உபரதன தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவொன்று இதற்காக ஒன்றிணைந்துள்ளது.

அவ்வேளையில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம்பெற்றதுடன் அந்தக் குழுவின் இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தகபில நுவன் அத்துகோரள திரும்பி வேறு வழியில் சென்றதால் அவரால் ஆளுநரின் அலுவலகத்திற்குச் செல்ல முடியாத நிலையில், குழுவின் மற்றைய இணைத் தலைவரான ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். 

சீன ஆய்வுக் கப்பலான Xi Yan 06 நாட்டிற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகமும் கப்பலை வரவழைக்க வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சீன ஆய்வுக் கப்பலைக் கொண்டு நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தக் கப்பல் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் வெறும் 238  சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 10 சிங்களர்களின் வழிபாட்டிற்கு தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தை சிங்களமயமாக்கும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு பௌத்த விகாரைகள் அமைத்து பயன்படுத்தும் சூழ்ச்சித் திட்டமே இங்கு அரங்கேற்றப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள்  ஆயிரக்கணக்கில் செறிந்து வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளே இல்லாத சூழ்நிலையில், நாட்டில் பல பகுதிகளில் புராதன பௌத்த விகாரைகள் சேதமடைந்து திருத்தப்படாமல் கைவிடப்பட்ட சூழ்நிலையில் சிங்கள மக்கள் மிகவும் குறைந்தளவில் வாழும் பகுதிகளில் புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் பின்னணியை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

குச்சவெளி பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்த புதிய விகாரைகளுக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் இன ஆக்கிரமிப்பு செய்யும் முகமாகவும் அமைந்துள்ளமை தெளிவாகிறது.

மற்றுமொரு வகையில் புனிதமான பெளத்த மதத்திற்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கீழே தரப்பட்டுள்ள புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 10 கிராம சேவகர் பிரிவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் 09 பௌத்த விகாரைகளும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 14 பௌத்த விகாரைகளும் புதிதாக அமைக்கப்படுகின்றன.

எந்தவொரு கிராம சேவகர் பிரிவிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இடம்பெறும் இன ஆக்கிரமிப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதன் பின்னணியில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அல்லது அதிகாரப் பகிர்வை தமிழ் பேசும் மக்கள் அடைய முடியுமா என்பது கேள்விக்குறியே!