web log free
October 24, 2025
kumar

kumar

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்வரும் ஜூன் மாதம் சரத் பொன்சேகா வெளியிடவுள்ளார்.

சரத் பொன்சேகா எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையாமல் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய கட்சிகளின் எம்.பி.க்கள் குழுவும் அவருடன் இணைந்து கொள்ள தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை அமைச்சரவை கூடிய போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்குப் பணம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

20 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப் பொருளை கடத்தி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து இந்த கொகெயின் சரக்குகளுடன் தனது பயணத்தைத் தொடங்கி கட்டாரின் தோஹாவை வந்தடைந்தார்.

அதன் பின்னர் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் ரொட்டி மாவு அடங்கிய 03 பார்சல்களையும், 02 கிலோ 861 கிராம் எடையுள்ள இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 03 பார்சல்களையும் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்தார்.

அவர் தனது நண்பர் மூலம் இந்த விமானத்தை ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இந்த விமானங்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் 05 நாட்கள் தங்குவதற்கு மேலதிகமாக இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்து வழங்க 1,000 அமெரிக்க டொலர்கள் பெண்ணுக்கு செலுத்தி இந்த போதைப்பொருள் சங்கிலிகளின் உரிமையாளர்கள் வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்ததாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த பெண் இதற்கு முன்பு மலேசியா மற்றும் இந்தியாவிற்கு மசாலாப் பொருட்கள் அடங்கிய பார்சல்களில் கொக்கைன் கடத்தியதாக சுங்க அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளினதும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக வெளிப்படுத்துமாறு கோரி அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் ஓமல்பே சோபித தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் தெரிந்தே அரசியலமைப்பை மீறி அந்த பதவியில் செயற்படுவது தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதனிடையே யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவிக்கின்றார்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையால் கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய டெங்கு அபாயத்தை குறைப்பதற்கான உடனடி தீர்மானத்தை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று (20) பணிப்புரை விடுத்துள்ளார்.

நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகளின் கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சர் மீளாய்வு செய்தார்.

இதன்படி, பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவுகளை போன்று ஒரே நேரத்தில் அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதுவரை 15,000 உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான காமினி திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபரின் திடீர் மரணம் காரணமாக நாளை (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படும் என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் ஆகியோர் வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான ஊடக விவாதத்தின் போது முரண்பாட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதம பீடாதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சமூகத்தில் இடம்பெறும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளை எச்சரிக்க ஞானசார தேரர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

அவரது நடவடிக்கைகள் அரச பாதுகாப்புப் படைகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்கியது, இலங்கையில் சில தீவிரவாதக் குழுக்கள் பரவுவதைத் தடுக்க உதவியது. 

இதன் விளைவாக, இலங்கை சமூகத்தில் பல சாத்தியமான தீவிரவாத மோதல்கள் தவிர்க்கப்பட்டதாக அவர்கள் குறித்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை ஜூன் 06ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளது.

நளின் பண்டாரவினால் நேற்றைய தினம் (19) அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கடிதம் தொடர்பில் நளின் பண்டார நேற்று (19) தேசிய மக்கள் சக்திக்கு அறிவித்தார், இரு தலைவர்களுக்குமிடையிலான விவாதம் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கும் 7ஆம் திகதிக்கும் இடையில் நடத்துவதற்குத் தயார் என்று கூறினார். 

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன ஒன்றிணைந்து ‘பௌத்த நலன்புரி நிதியம்’என்ற கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளன. 

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன ஒன்றிணைந்து சமூக அக்கறையை வளர்க்கும் நோக்குடன் ‘பௌத்த நலன்புரி நிதியம்’ என்ற கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

கொழும்பு 02 இல் அமைந்துள்ள மக்கள் வங்கி தலைமை காரியாலயத்தில் அண்மையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றதுடன், தியவனத நிலமே திரு. பிரதீப் நிலங்க தெல, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச மற்றும் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 

இத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதைக் குறிக்கும் வகையில் ‘பௌத்த நலன்புரி நிதியத்திற்கு’ நன்கொடையொன்றை மக்கள் வங்கி அளித்துள்ளதுடன், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களையும் வழங்கியுள்ளது. 

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன ஒன்றிணைந்து, 1995 ஆம் ஆண்டில் முதன்முதலாக பௌத்த நலன்புரி நிதியத்தை ஸ்தாபித்திருந்ததுடன், இன, மத பேதமின்றி, எதிர்காலத்தின் சிற்பிகளான சிறுவர்களின் எதிர்கால நலனுக்கு இது மாபெரும் உரமாக அமைந்தது. இத்திட்டத்தினூடாக பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை சிறப்பாக்கியுள்ளனர்.  

இப்புதிய திட்டமானது 2024 ஜுன் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தற்போது வழங்கப்படுகின்ற நன்மைகளை அதிகரித்து, குறைந்த வருமானத்தை ஈட்டுகின்ற குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கும் பயனளிக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது.

அதற்கமையாக, தரம் 6 முதல் 11 வரை கல்வி கற்கின்ற 2,000 மாணவர்களுக்கு இத்திட்டத்தினூடாக மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், நாடெங்கிலுமுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மத்தியில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதே இதன் நோக்கம். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் மக்கள் வங்கியும் அதன் ஊழியர்களும் இந்நிதியத்திற்கு பங்களிக்கவுள்ளனர்.

தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “உலகெங்கிலும் பௌத்தர்களின் புனித தலமாகத் திகழ்ந்து வருகின்ற ஸ்ரீ தலதா மாளிகையில் சமய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமைக்குப் புறம்பாக, இன, மத பேதமின்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் நலன் சார்ந்த சமூகச் செயற்பாடுகளும் ‘எமது அக்கறை’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நோக்கத்துடன் பல்வேறு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஸ்ரீ தலதா மாளிகையுடன் மக்கள் வங்கி எப்போதும் கைகோர்த்து வந்துள்ளது. இந்த வகையில், இத்தேசத்தின் புதல்வர்கள் மற்றும் புதல்விகளின் நலனுக்கான 1995 ஆம் ஆண்டில் பௌத்த நலன்புரி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீ தலதா மாளிகையால் இந்த புலமைப்பரிசில் நிதியத்திற்கு இது வரை ரூபா 500 மில்லியன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கும் இப்புதிய திட்டத்துடன், ‘பௌத்த நலன்புரி நிதியம்’ இன்னும் வலுவானதாக மாறும். அறிவும், ஆற்றலும் நிறைந்த சிறுவர்களைக் கொண்ட தலைமுறையே இத்தேசத்தின் எதிர்காலத்தின் உரமாகத் திகழ்வுள்ளது. இந்த உன்னதமான முயற்சி உலகினை வெற்றி காண்பதற்கு அவர்களுக்கு உதவும்,” என்று குறிப்பிட்டார். 

மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “தேசத்தின் எதிர்கால தலைமுறைகளாகத் திகழும் சிறுவர்களுக்கு வாழ்வளிக்கின்ற வகையில், காலத்தின் தேவையாக அமைகின்ற ஒரு முயற்சியாகவே மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தும் இந்த பௌத்த நலன்புரி நிதிய கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தை நான் காண்கின்றேன்.

பல தசாப்தங்களாக, தேசத்தின் தங்கக்கிரீடத்தின் தாயகமான ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ வங்கியாளராக மக்கள் வங்கி திகழ்ந்து வருவதுடன், மிகவும் கௌரவமான உறவுமுறையையும் சிறப்பாகப் பேணி வந்துள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறுகின்ற வருடாந்த எசல பெரஹரா உற்சவத்திற்கு பல தசாப்தங்களாக மக்கள் வங்கி அனுசரணையளித்து வந்துள்ளது. இப்புதிய திட்டத்தினூடாக எமக்கு இடையிலான பிணைப்பு மேலும் ஆணித்தரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “அறுபத்தி இரண்டு ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு வங்கி மற்றும் நிதிச் சேவைகளை மக்கள் வங்கி தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளது. இலாபத்திற்கு முன்னுரிமையளிக்காது, நாட்டின் பொது மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள வங்கி என்ற அர்ப்பணிப்புடன் இது தொடர்ந்தும் பயணித்து வருகின்றது.

மக்கள் வங்கியின் சமூக நலன்புரித் திட்டங்கள் அனைத்தும் தற்சமயம் ‘மகாஜன மெஹெவர’ என்ற நாமத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் ஒரு அங்கமாகவே, நாட்டிலுள்ள குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வித் தேவைகளுக்கு உதவுவதற்காக ஸ்ரீ தலதா மாளிகையுடன் இணைந்து பௌத்த நலன்புரி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமூக நலன்புரிச் செயற்திட்டங்களுக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து பங்களிப்பதே எமது நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.

 

மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி நாலக விஜயவர்த்தன, பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) திரு. ரீ.எம்.டபிள்யூ சந்திரகுமார" பிரதிப் பொது முகாமையாளர் (கிளை முகாமைத்துவம்) நளின் பத்திரணகே, பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) மஞ்சுள திசாநாயக்க, ஸ்ரீ தலதா மாளிகையின் ஊடகம் மற்றும் விசேட செயற்திட்டங்களுக்கான பணிப்பாளர் கிறிஷாந்த கிஸ்ஸல்ல, மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிக்கையின் ஏனைய அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில்

சமூகமளித்திருந்தனர்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd