போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பாதாள உலகத்தை இலக்கு வைத்து விசேட நடவடிக்கையொன்று நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று காலை எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சமூக பொலிஸ் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இந்த பணிப்புரைகளை வழங்கினார். பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை எதிர்த்துப் போராடும் பொலிஸ் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் அலஸ் கேட்டுக் கொண்டார்.
ஜூன் 30ஆம் திகதி வரை பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளேன். ஜூன் 30ஆம் திகதிக்குள் இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் பூரண மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.
சொகுசு காரில் பயணித்த கணவன் , மனைவி இருவரும் மயிரிழையில் காயங்களின்றி உயிர்தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சென்ற சொகுசு கார் அதே வழியில் சென்ற வாகனம் ஒன்றில் ஓயில் சிந்தி காணப்பட்டமையினாலும் சீரற்ற காலநிலை காரணமாகவும் மிகவும் செங்குத்தான இவ்வீதில் ஓயில் வழுக்கியமையால் குறித்த சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துள்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு மக்கள் தம்மை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டால் அந்த கோரிக்கையை நிராகரிக்கப் போவதில்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (15) மல்வத்து அஸ்கிரி நா தேரர்களை வணங்கி ஆசி பெற்றதன் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் முதலில் மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் திம்புல்கும்பூர் விமலதம்ம நஹிமி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இன்று எங்கும் மோசடியும், ஊழலும் காணப்படுவதாக இரு பீடாதிபதிகளுக்கும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அஸ்கிரி மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
இன்று இந்த நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மோசடியும், ஊழலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நடைபெறுவதாகவும், மோசடி மற்றும் ஊழல்களை சுட்டிக்காட்டும் அனைவரின் கழுத்தையும் துண்டிக்கப்படும் நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கான தனது போராட்டத்தை தொடரவும், கிரிக்கெட் ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றவும், இந்த நாட்டில் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க கட்சியின் தேசிய மாநாடு தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேவை அக்கட்சியின் இறைமை மிக்க தலைவராக மஹிந்த ராஜபக்சவை முன்மொழிந்தார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த பிரேரணையை உறுதிப்படுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட தேசிய மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
அக்கட்சியின் சுமார் 5000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் இணைந்துள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பேமதாசவுடன் கலந்துரையாடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் கேட்பது தற்போதைய ஜனாதிபதியை எனவும் அதனால் எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு தனக்கு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேட்புமனுக்களை கையளிப்பது மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் கூறுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு அறுபது வயதில் ஓய்வு அளிக்கும் அரசாணையை எதிர்த்து மருத்துவர்கள் குழு தாக்கல் செய்த ரிட் மனு மீது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.
பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஜனவரி 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அமைச்சு கூறியுள்ளது.
இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இருவரும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான (2023) கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 04ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அனுமதி அட்டைகள் மற்றும் நேர தாள்கள் பாடசாலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தச் சீட்டுகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை ஒரு தடவை மாத்திரமே திருத்திக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க அண்மையில் தனது ஆலயத்திற்கு வருகை தந்ததாக மிஹிந்தலை விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அப்போது, பீரித் நூல் கட்டி, நாட்டை நன்றாக ஆள வேண்டும் என்று ஆசிர்வதித்து, உபதேசம் செய்ததாக தேரர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், விகாரையை விட்டு வெளியில் வந்த அநுர திஸாநாயக்க பிரித் நூலை அவிழ்த்து முற்றத்தில் வீசியதாக தம்மரதன தேரர் தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.
அதைப் பார்த்த மாணவர்களும், சாரதியும் நடந்த சம்பவத்தை தன்னிடம், “இவர்கள் ஏமாற்றுகாரர்கள். அவர்களுக்கு மதம் கிடையாது. கவலைப்படாதீர்கள்’ என்று கூறியதாக தம்மரதன தேரர் மேலும் குறிப்பிடுகிறார்.
யூடியூப் சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது தேரர் இவ்வாறு கூறினார்.
இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
எம்பிக்கள் ரவுப் ஹக்கீம், பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தவ்பிக் ஆகியோரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு பற்றி ஊடகங்களுடன் உரையாடிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,
சிங்கள-பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட தடையாக இருக்கிறது என சந்திப்பில் கலந்துக்கொண்ட தேரர்களை நோக்கி சிங்கள மொழியில் கூறினேன்.
அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும் என சந்திப்பில் கலந்துக்கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை நோக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறினேன். உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம்.
அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலத்தி வைத்து விட்டு நேரடியாக நீங்கள் இந்த முயற்சி செய்வதும் இந்த முதற்கட்டத்தில் சரிதான். முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வர வேண்டும். பாராளுமன்றத்தில்தான் இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது வரும்போது வரட்டும். ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும்.
இந்த அடிப்படை ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும். “76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி தம்நாட்டு பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” என்ற கேள்வியை முயற்சியில் ஈடுபடும் தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை.
ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.