web log free
July 27, 2024
kumar

kumar

கிழக்கு கடற்கரைகளுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புதுமையான திட்டங்களை உருவாக்குமாறு சுற்றுலா பணியகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

சில படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு விருந்து, இரவு தங்குதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்புப் திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். 

திருகோணமலை கடற்கரையில் பயணம்  மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் "நாங்கள் திருகோணமலை கடற்கரையில் பயணித்தோம், இந்து மதத்தின் முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றான கோணேஷ்வரம் கோயிலின் கடல் பக்க காட்சியில் நான் ஆச்சரியப்பட்டேன்" என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை தனது பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீா்வு கண்டுள்ளது என்று அந்நாட்டின் நீதித்துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச தெரிவித்தாா்.

இலங்கையில் அனைத்து சமூகத்தினரின் ஒருமித்த கருத்துடன் நீண்டகால அமைதியை நிலைநாட்ட ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ விரைவில் அமைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற விஜயதாச ராஜபட்ச, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவுடன், எங்களது பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீா்வு கண்டுள்ளோம். இலங்கையில் விரைவில் இயல்புநிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கை 30 ஆண்டு கால போா் மற்றும் அதன் பேரழிவுகளை கண்டுள்ளது. 60 ஆயிரம் உயிா்கள் பறிபோயுள்ளன.போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே நடைமுறைகள் தொடங்கப்பட்டன. மாயமானவா்களை கண்டறிதல், குடும்பத்தினருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

இலங்கை தமிழ் மக்கள் மற்றும் தலைவா்களுடன் தொடா்ந்து ஆலோசனைகளும் பேச்சுவாா்த்தைகளும் மேற்கொண்டு வருகிறோம் என்றாா் விஜயதாச ராஜபட்ச.இலங்கையில் மொழி, மத சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் உள்ள புகாா்கள் குறித்த கேள்விக்கு அவா் அளித்த பதில்:

இலங்கையில் அனைத்து சமூகத்தினரின் ஒருமித்த கருத்துடன் நீண்டகால அமைதியை உறுதி செய்ய முயன்று வருகிறோம். அந்த வகையில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு விரைவில் அமைக்கப்படும்பெரும்பாலான விவகாரங்களில் தீா்வு காணப்பட்டுள்ளதால், இதுபோன்ற பிரச்னைகள் இப்போது குறைந்துவிட்டன.

அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்னைகள் கடத்தப்படக் கூடாது என்பதே அரசின் கண்ணோட்டம்.முஸ்லிம்களாக இருந்தாலும், தமிழா்களாக இருந்தாலும், சிங்களா்களாக இருந்தாலும் இலங்கை குடிமகன் என்ற அடையாளத்துடன் அனைவரும் அமைதியான சூழலில் வாழ்வதை நாங்கள் உறுதி செய்வோம் என்றாா் அவா். 

அடுத்த மாதத்தின் முற்பகுதியில் எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விலைச்சூத்திரத்திற்கு அமைய இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 

தற்போது 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,186 ரூபாவாக அமைந்துள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 1,281 ரூபாவிற்கும் 

2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 598 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீடொன்றை சோதனையிடச் சென்ற உயிலங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தந்தை, மகன் உள்ளிட்ட குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உயில்ங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சோதனையிட்டனர்.

தந்தை மற்றும் மகன் உட்பட குழுவொன்று வீட்டில் இருந்த பொலிஸாரை பொல்லுகளால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காயமடைந்ததாக மன்னாரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய இரண்டு தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வேகமாக அதிகரித்து வரும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கைகளின் விளைவாக, எம்பிலிபிட்டிய வெலிக்கடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளின் தாக்குதலில் பாதாள உலக தாக்குதலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகள் அதிகரித்துள்ள தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பல பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளன.

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்காக தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் விசேட மோட்டார் சைக்கிள் பிரிவுகளும் விசேட அதியுச்சப் பிரிவுகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரிகளான பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்தார்.

ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் அவை முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் எனவும் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பாதாள உலகக் கும்பல்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கைகள் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்ததோடு, அதன் விளைவாக தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதாள உலக செயற்பாடுகள் வேகமாக வளர்ந்தன.

கடந்த சில மாதங்களில், தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டும் பாதாள உலகத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், சஜீவ மெதவத்த மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டிற்கான நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வருடாந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் (2022) 18 அரச நிறுவனங்கள் 958.7 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் நஷ்டம் அடைவதற்கு முக்கிய காரணம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சரியான விலை இல்லாமை, செயல்பாட்டு திறமையின்மை, அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள், மோசமான மனித வள மேலாண்மை, மோசமான கட்டுப்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவை ஆகும்.

அத்துடன், கடந்த ஆண்டு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்களால் ஏற்பட்ட பரிவர்த்தனை இழப்பே இந்த கணிசமான இழப்பிற்கு முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் பலவீனமடைந்துள்ளன.

இந்த அரச நிறுவனங்களின் நிதிப் பலவீனங்கள் முழுப் பொருளாதாரத்திலும் குறிப்பாக வங்கித் துறையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது சேவைக்காலம் இன்றுடன் (26) முடிவடைகிறது.

புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை பரிந்துரைகள் தாக்கல் செய்யப்படவில்லை.

அத்துடன் அரசியலமைப்பு சபை இன்றும் நாளையும் கூடவதற்கான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் விரைவாக மேற்கொள்ளப்பட மாட்டாது.

இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டபோது, புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி வருகையின் பின்னர் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்தார். ஆனால் அரசாங்கம் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியது.

நேற்று இரவு அம்பலாங்கொடையில் 56 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

அண்மைய நாட்களில் இலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

நாளை (26) ஆரம்பமாகும் வாரத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஆனால், அதற்கான காரணம் குறித்து அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு கூறப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த பிரேரணையை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டியுள்ளதாக கருதி, எதிர்வரும் சனிக்கிழமை (01) பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஆளும் கட்சியின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டுக்கு வந்தவுடன், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும் கலந்து கொண்டார். 

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்துக்கூறினர். 

இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.