web log free
July 27, 2024
kumar

kumar

அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் விசேட கூட்டம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர்கள் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அந்த அமைச்சுக்களின் பிரிவுகளை பகிர்ந்தளிக்கவில்லை எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

தான் மட்டுமல்ல, அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்களும் இந்த கதியை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைத் தெரிவித்த போது, சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியல் சக்தியை உருவாக்க அரசியல்வாதிகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

இதன்படி, எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து இந்த படையில் இணையவுள்ளன.

குமார வெல்கம, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் பொஹொட்டுவவைச் சேர்ந்த சுயேச்சையான குழுவொன்று இணைந்து இந்தப் படையை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியில் இருந்து சுயாதீனமாக செயற்படுவது குறித்தும், எதிர்காலத்தில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றங்களின் மேற்பார்வைக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரதிநிதியை நியமிக்கும் தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதியாக இருப்பதால் அவரது பிரதிநிதியை நியமிப்பது உள்ளூராட்சி மன்றங்கள் அரசியல் மயமாகுவதற்கு வழிவகுக்கும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் மேற்பார்வைக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரதிநிதியை நியமிக்கும் தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்பதை உள்ளூராட்சி அமைச்சுக்கு எதிர்வரும் சில தினங்களில் எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் இணைப்பு மற்றும் தேவையான தகவல்களை மாநகர ஆணையாளர் அல்லது அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச செயலாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கு விசேட பிரதிநிதிகளை நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி பிராந்திய அலுவலகம் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

கடந்த 29ம் திகதி இரவு ஆணைக்குழுவின் செயலாளர் பொலிஸாருடன் வந்து அலுவலகத்திற்குள் யாரும் நுழைய முடியாதவாறு அலுவலகத்திற்கு சீல் வைத்ததோடு பொலிஸ் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதியுடன் அலுவலத்தின் பிராந்திய இணைப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியை அந்த அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் இங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இன்று நள்ளிரவுடன் 12.5kg எரிவாயு கொள்கலன் விலை, ரூ452 ஆல் குறைப்பு. புதிய விலை – 3,186 ரூபா, 

5kg கொள்கலன் ரூ181 ஆல் குறைப்பு - 1,281 ரூபா. 

2.3kg கொள்கலன் ரூ83 ஆல் குறைப்பு - 598 ரூபா.  லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.  

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடருக்கான துணைத் தலைவர் பதவியை இலங்கை பெற்றுள்ளது.

துணைத் தலைவர் பதவிக்கு 193 நாடுகள் இலங்கையை ஏகமனதாக தெரிவு செய்துள்ளன.

இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கான பொருத்தமான பதவியை ஏற்பார். 

33 வருடங்களுக்கு முன்னர் திருக்கோவில் காட்டில் 600 பொலிஸாரைக் கொன்றமைக்கு காரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸாரை கருணா தான் கொலை செய்ததாக பெங்களுரை சேர்ந்த பேராசிரியரும், திருக்கோவில் முகாமில் இருந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலா ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜூன் 11, 1990 அன்று நடந்த கொலை குறித்து எந்த விசாரணையும் இல்லை.

ஆனால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவால் இந்தக் கொலையை மறைக்க முடியவில்லை.

திருக்கோவில் படுகொலையில் இரண்டு காவலர்கள் மட்டுமே உயிர் தப்பினர். 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிவிப்பதற்காக அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களையும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களையும் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கிராமத்திற்குச் சென்று எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுப்பதற்கான பின்னணியை தயார் செய்யுமாறும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் மாதத்திற்குள் பொருளாதாரம் சுபீட்சமான நிலையை எட்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சென்று தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.

கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான றோய் சமாதானம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரைச் சந்தித்து, தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது நாட்டை விட்டு வெளியேறிய பெருந்தொகையான மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அவ்வாறான மோதல்கள் மீண்டும் ஏற்படாதவாறு நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கி, அதனை முன்னெடுப்பதன் அவசியத்தை ரோய் சமாதானம் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே, தேர்தலுக்காக அன்றி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.