web log free
April 20, 2024
kumar

kumar

பண்டிகைக் காலத்தில் கண்டி நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கண்டி தலைமையக பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கண்டி நகரை சுற்றி மக்கள் தொடர்ந்து சுற்றித்திரிவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, பணம், தங்கம் போன்றவற்றைக் கொள்ளையடிப்பதைத் தடுப்பதற்காக விசேட ரோந்துப் பிரிவினரும் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களும் களப்பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், கண்டி பொலிஸார் தலையிட்டு பொதுமக்களின் இடையூறுகளை தடுக்கவுள்ளனர்.

பொதுமக்களின் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் நகருக்கு வெளியே பிச்சைக்காரர்களை தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் முச்சக்கரவண்டி மற்றும் சுற்றுலா விடுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் வகையில் இதன் கீழ் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது குறித்த தீர்மானம் ஏப்ரல் 24 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் கமகேவை கைது செய்யுமாறு கோரிய மனு நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்ததை அடுத்து, இராஜாங்க அமைச்சர் தனது குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க அமைச்சருக்கான இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

இராஜாங்க அமைச்சருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது என ஹேரத் குற்றஞ்சாட்டினார், ஏனெனில் அவருக்கும் பிரித்தானிய குடியுரிமை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஹோமாகம பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஹைலெவல் வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று (04) காலை திடீர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வெடிப்பினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், நேற்று அதிகாலை 04:45 மணியளவில் உணவு விநியோகச் சங்கிலிக்கு சொந்தமான கடையில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடைகளுக்குள் இருந்த பல கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும், முன்பக்க பாதுகாப்பு கண்ணாடிகள் உடைந்து வீதி முழுவதும் சிதறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஹோமாகம பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராக்களின் பிரேம்களை சோதனையிட்டனர். 

சமையல் எரிவாயு கசிவே வெடிப்பிற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

விபச்சாரத்தில் ஈடுபட வராத காரணத்தினால் ஒரு யுவதியை வீட்டில் சென்று தாக்கி கையடக்கத் தொலைபேசியைக் கொள்ளையடித்த விபச்சார விடுதியின் உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக வந்துரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட, ரன்டோம்பே மற்றும் உரகஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை ரன்டோம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த விபச்சார விடுதி பராமரிக்கப்பட்டு வருகிறது. விபச்சார விடுதியை நடத்தி வந்தவர் 52 வயதுடைய பெண்.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய யுவதி இந்த விபச்சார விடுதியில் சுமார் ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ளதால் அவரை பார்க்க சென்ற போது விபச்சார விடுதியின் உரிமையாளருடன் பழகி நட்பு கொண்டுள்ளார். 

பின்னர் விபச்சார விடுதியின் உரிமையாளர் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் அமர்த்தியுள்ளார்.

சேவை பெற வரும் ஒருவரிடமிருந்து ரூ. 5000 வசூலிக்கப்பட்டதுடன், விபச்சார விடுதியின் உரிமையாளர் 3500 ரூபாயை வைத்துக் கொண்டு ரூ. 1500 யுவதிக்கு வழங்கி வந்துள்ளார். 

இந்த விபச்சார விடுதியில் சுமார் ஒரு மாத காலம் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் அந்த யுவதி. இந்த விபச்சார விடுதிக்கு அவள் மீள திரும்பாததால், விபச்சார விடுதியின் உரிமையாளரும் மற்றொரு பெண்ணும் இந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவள் விபச்சாரத்திற்கு திரும்ப மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த விபச்சார விடுதியின் உரிமையாளரும் மற்றைய பெண்ணும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி கையடக்கத் தொலைபேசியை பறித்து சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

நாளை (07) பொது விடுமுறை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் திறந்திருக்கும்.

இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியும் (IRC) பாதாள உலக குழு நபரான அங்கொட லொக்காவின் கூட்டாளியுமான "அத்துருகிரியே ஜெரோம்" விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் அத்துருகிரியவில் உள்ள மில்லினியம் சிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரியவில் இடம்பெற்ற வழக்கு தொடர்பில் சந்தேகநபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அதுருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் 2015ஆம் ஆண்டே முதன்முறையாக அமைச்சரானார். நாங்கள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்ததன் காரணமாகவே இந்த மாறுதல் ஏற்பட்டது. இல்லையேல் அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருக்காது என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எப்பொழுதும் அரசியல் சார்ந்துதான் முடிவெடுப்பதனால் தான் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்களை செயல்படுத்தி பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கினால் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசுக்கு முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம் என்றார்.

பாராளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சுவையூட்டும் பாலை பருகிய 12 சிறுவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று (04) பிற்பகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

பாரதிபுரம் பிரதேசத்தில் முன்பள்ளிச் சிறார்களுக்கான நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட சுவையூட்டும் திரவப் பாலை அருந்தி மயக்கம், வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு ஒவ்வாமை நிலைமைகள் ஏற்பட்டதையடுத்து பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதனிடையே, குழந்தைகள் அருந்திய சுவையூட்டப்பட்ட திரவ பால் பொதிகளை பரிசோதிக்க, அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மூலம் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக  ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முன்வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், அமைச்சர் ஒருவர் தனிப்பட்ட கருத்தைக் கூறலாம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியானவர்கள் பொதுஜன பெரமுனவில் உள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​அதற்கு தகுதியானவர்கள் கட்சியில் இருப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.