web log free
May 09, 2025
kumar

kumar

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகேவிடம் வினவிய போது, நேர அட்டவணையின் பிரகாரம் இன்று(10) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என கூறினார்.

எனினும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று(10) காலை 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மார்க்கத்தில் ஒரு ரயில் சேவையும் களனிவௌி மார்க்கத்தின் 02 ரயில் சேவைகளும் குருணாகல் மற்றும் மொறட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு - பதுளை இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையையும் இன்று(10) இரத்து செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி ட்ரோன் கமராவை பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள் இருவரும் இன்று (08) காலை ட்ரோன் கமராவை பறக்கவிட முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ட்ரோன் கமராவை கண்டி தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ தலதா மாளிகையோ அல்லது அது தொடர்பான பாதுகாக்கப்பட்ட வலயமோ காணப்படாததால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில், இருவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரின் சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை மோதிவிட்டு ஓடிய ஜீப் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு காயங்களுக்குள்ளான அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். சந்தேக நபர் 18 வயதுடையவர்.

கடந்த 5ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் அதிவேகமாக சொகுசு ஜீப்பில் வந்த சந்தேக நபர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் எதிர்புறம் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள் மீது மோதியுள்ளார்.

இது அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

வீதியில் நிர்மாணப் பணிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தை தவிர்ப்பதற்காக காரை வலது பக்கமாக திருப்பிய போது வலது பக்கம் இருந்த இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த போது நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் யாரும் இருக்கவில்லை என்றும் பொலீசார் கூறுகின்றனர்.

விபத்துக்குள்ளான ஜீப்பில் அமைச்சரின் மகன் உட்பட 3 பேர் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அமைச்சரின் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் இன்று (09) முதல் பணிக்கு சமூகமளிக்க முடியும்.

அவர் பணியாற்றிய இடம் தனது தொகுதியாக இருந்தால் அந்த இடத்தில் பணிபுரிய முடியாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்தார்.

இன்று (09) பணிக்கு சமூகமளிக்குமாறும், தனது நிறுவன தலைவர் ஊடாக வேறு தொகுதிக்கு இடமாற்றம் பெற்றுக் கொள்ளுமாறும் செயலாளர் தெரிவித்தார்.

அந்த ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு வேறு தொகுதிக்கு இடமாற்றம் பெறுவது கட்டாயம் என செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இந்த நிலையில் இரத்து செய்யப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

மறுதேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக தமது பணிகளை விட்டுவிட்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்து கொள்வது அல்லது பதவிகளை ஏற்காமல் இருப்பது மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற விசேட யோசனைக்கு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவினால் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்வரும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனநாயகத்தை மீறும் அடக்குமுறை அரசில் இணையக் கூடாது, பதவிகளைப் பெறக்கூடாது என செயற்குழுவில் முதல் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மக்கள் பெயரால் இப்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்றும், அப்படிச் செய்யக் கூடாது என்றும், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டுக்கு ஆதரவான முற்போக்கு செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற மற்றுமொரு பிரேரணைக்கு செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஒரு பரந்த கூட்டணியை கட்டியெழுப்பவும், அந்தக் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு முழு அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சித் தலைவர் என்ற முறையில் ஒப்படைப்பதற்கும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் யாப்புக்கு அமைய கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம் வழங்கவும் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் கோதுமை மா மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினாலும் ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உலக சந்தையில் வெள்ளை சீனியின் விலை மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 500 டொலர்களில் இருந்து 750 டொலர்களாக அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த தினம் இலண்டன் சென்றிருந்த நிலையில் இன்று காலை ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது.

நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 வீதமாக பதிவானதுடன், அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.4 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்கள், பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையினால் சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் செலவுகளை குறைத்துக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடும்பங்களின் வாழ்வாதார வழிமுறைகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் வறுமை நிலை 25 வீதத்தையும் கடந்துசெல்லும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

2023 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் வறுமை நிலை மேலும் அதிகரித்துச் செல்லுமெனவும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் கொந்தளிப்பான வளிமண்டலம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் சில தினங்களில் இந்த அமைப்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் சூறாவளியாக மாறும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

5 மற்றும் 10 வடக்கு அட்சரேகை மற்றும் 90 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும், அவ்வப்போது அது மணிக்கு 60 கிமீ வேகத்தில் அதிகரிக்கும்.

01 மற்றும் 04 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 மற்றும் 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையில் காற்று குவிதல் வலயம் காரணமாக, இந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர்களாக காணப்படுவதுடன், அது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

5 மற்றும் 10 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 90 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 01 மற்றும் 04 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 மற்றும் 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் எதிர்காலத்தில் கடல்சார் சமூகம் மற்றும் மீனவர்கள் பயணிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரை அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கடற்படையினர் மற்றும் கடல்சார் சமூகம் கோரப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மசோதாவின் சில பிரிவுகளுக்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தது தெரிந்ததே.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இதேவேளை, உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக வாக்களிப்பேன் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தச் சட்டமூலம் ஜனநாயகத்திற்குப் பாரிய அடியாகும் என சில வாரங்களுக்கு முன்னர் கூட்டறிக்கையில் திரித்துவ பீடாதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

வரைவு மசோதாவில் பயங்கரவாதத்தை வரையறுப்பது குறித்தும், டிஐஜிகளுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை மாற்றுவது குறித்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மகா சங்கத்தினரிடமிருந்தும், பொது சமூகத்தினரதும் கடும் எதிர்ப்பு காரணமாக, பாராளுமன்றத்தில் சமர்பிப்பது காலவரையறையின்றி பிற்போடப்பட்டதாகவும், சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd