web log free
May 10, 2024
kumar

kumar

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பின் போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாடசாலை நேரத்திற்கு பின்னர் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தியமைக்கு எதிராக மனு தாக்கல்இலங்கையின் ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை
நடைமுறைப்படுத்தியதன் மூலம், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்வதற்கு இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எனினும் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

மேலும், அவசரகாலச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீள்பரிசீலனை செய்யுமாறும், திருத்தம் செய்யப்பட்டால் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

லிபரல் இளைஞர் இயக்கத்தின் அழைப்பாளர்களான சட்டத்தரணிகள் நமினி பண்டித மற்றும் ருசிரு எகொடகே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 28ம் திகதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.

நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும் 3 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது கட்சியுடன் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதுதொடர்பான அறிக்கை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்தார். 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (11) சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது 98 அமெரிக்க டாலர்கள் மற்றும் 28 காசுகளாக விலை உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் (10) பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 96 டாலராக இருந்தது.

டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15ஆம் திகதி இரவுகளில் கண்டிப்பாக திருத்தம் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்னும் 4 நாட்களில் இந்த நாட்டில் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அனேகமாக அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும்.

இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு பல்வேறு வழிகளில் செய்திகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் பலமானவர்கள் ஊடாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அறியமுடிகிறது. மேலும் சிலர் ஜனாதிபதியிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மாவட்ட அபிவிருத்தித் குழு தலைவர் பதவிகளை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

அது தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துக்கள் நியாயங்கள் எங்களிடம் கேட்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட பிரச்சினைகளாக பல விடயங்களை சந்தித்து கொண்டிருக்கின்றர்கள், அது தொடரபில் நாங்கள் டலஸ் அழகபெருமவிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கூறி இருக்கின்றோம்.

அரசியல் கைதிகளுடைய விடுதலையில் முதற் கட்டமாக ஒரு சிறு தொகையினரையாவது விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் காணி விடுவிப்பிலும் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறான எமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை ஏற்பட்டால், அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து பரிசீலிக்க முடியும். 

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன? ஏன் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும் ? இது ஒரு கண்துடைப்பாகும் என்று தெரிவித்த அவர், மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும் என்றார்.  

இலங்கையினுடைய பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும். பொருளாதார பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது.

எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பாக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார். 

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவுக்கு பொருளாதாரம் தொடர்பான சக்திவாய்ந்த பதவியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக டொலர்களை ஈட்டக்கூடிய வலுவான பொருளாதார அபிவிருத்திக் குழுவொன்று தயாரிக்கப்பட்டு அதன் தலைவர் பதவி தம்மிக்க பெரேராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு தம்மிக்க பெரேரா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக சஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கருத்து வேறுபாடுகள் வலுப்பெற்றுள்ளன.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், கூட்டாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியில் உள்ள பெருந்தொகையானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இத்தருணத்தில் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும், இல்லையேல் தமது அரசியல் மக்களால் நிராகரிக்கப்படும் எனவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் சிரேஸ்ட குழுவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதில்லை என கட்சி தீர்மானித்தால் அவர்கள் தனிப்பட்ட மட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இறுதிப் போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரை தியாகம் செய்தேனும் போராட்டத்தில் வெற்றிபெறுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இராணுவத்தில் அதிஉயர் நிலையாக பீல்ட் மார்ஷல் பதவியை வைத்துக் கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் சரத் பொன்சேகா செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.