தற்போது அரச வளங்கள் அழிக்கப்படுவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, நாடு தேசிய வளங்களை இழந்து சர்வதேச சமூகத்திடம் பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், எண்ணெய்த் தாங்கிகள், கரையோரங்கள், தோட்டங்கள் உள்ளிட்ட அரச வளங்கள் வெளிநாடுகளுக்குச் சொந்தமாக இருந்தால் நாடு இருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பருப்பு, எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பெற இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து தலா 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பங்களாதேஷிடம் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்ற அரசாங்கம், கடனைத் தீர்ப்பதற்கு மேலதிக அவகாசம் கோரியதுடன், சிமெந்து மற்றும் இரும்பு பெறுவதற்கு பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பால்மா மற்றும் கோதுமைமா இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியுள்ள அரசாங்கம், உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதற்கு ரஷ்யாவிடமிருந்தும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றதாக சுட்டிக்காட்டினார்.
நாட்டை மேம்படுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டத்துக்கு முன்னுதாரணமாக செயற்படுவதற்கு தேசிய மக்கள் தயாராகவுள்ளதாகவும்
தமது சொந்த நலன்களுக்காக வளங்களையோ நிதியையோ சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் அனுமதிகள் இரத்து செய்யப்படும் அதேவேளை அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.
இன்றைய தினமும் (28) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 08 மனி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி அரச வங்கியொன்று இலங்கை மின்சார சபையின் அனைத்து காசோலைகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மின்சார சபையின் கணக்குகளில் பணப்பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
எனவே, இலங்கை மின்சார சபைக்கு வங்கி மிகைப்பற்று வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காசோலைகளை வங்கிக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் பண முகாமையாளர் ஏற்கனவே சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பண்டிகை மாத சம்பளத்தை வழங்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் உள்ள தடைகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவிடம் (25) பணிப்புரை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில்(25) நடைபெற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இந்த அமைச்சகத்திற்குரிய தேசிய திட்டமிடல் துறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், கொள்கை கற்கைகள் நிறுவனம், நிலையான அபிவிருத்தி சபை, கட்டுபாட்டாளர் நாயகம் அலுவலகம், மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை கணக்குகள் மற்றும் தணிக்கை தரநிலைகள் கணக்கெடுப்பு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பயனாளிகள் சபை ஆகிய நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எரிபொருளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு 60 ரூபாய்க்கு மேல் செலவாகும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் குறைந்தபட்சம் 20 ரூபாய்க்குக் கிடைக்கும் என்றும் தெரியவந்தது.
அதற்கமைய மின் நெருக்கடியைத் தீர்க்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தவிர வேறு வழியில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
2030 ஆண்டளவில் தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ள 28,200 ஜிகாவொட் மணிநேரத்தில், 19,800 கிகாவொட் மணிநேரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கு தற்போது அமுலிலுள்ள மின்சார சபையின் 1969 சட்டத்தை திருத்தி தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு சீரமைக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான விநியோகத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் தாமதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய மின் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனவும், மின்சார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தடையில்லா மின்சாரம் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 6 மில்லியன் மக்கள் சமுர்த்தி சலுகைகளைப் பெறுகின்றனர். இதற்காக மாதாந்தம் சுமார் 62 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. சமுர்த்தி பெற வேண்டியவர்களுக்கு உண்மையில் சலுகைகள் கிடைக்கவில்லை எனவும் தேவையில்லாதவர்கள் சமுர்த்தி பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலைபேறான அபிவிருத்தி முன்னேற்றத்தை அளவிடும் தரவுகள் 46 குறிகாட்டிகள் மட்டுமே எனவும், அது இதுவரை 105 குறிகாட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தரவு அடிப்படையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை தற்போது 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை குறித்தான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளிவந்தது. நாளை அமைச்சரவையில் அது பற்றி ஆராயப்படவுள்ளது.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (25) கொழும்பு ஹைட் பார்க்கில் இடம்பெற்ற சத்தியாகிரகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் கரு பரனவிதான, மாகாண சபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, உடகப்பிரிவின் தலைமை பொறுப்பதிகாரி தனுஸ்க ராமநாயக்க உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மகாசங்கத்தினர் எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிக்குகள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஏமாற்றமடையாத வீட்டில் இருந்து ஒரு கிளாஸ் தண்ணீரை கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும், அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இந்நாட்டின் தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளமை குறித்து தாம் பெரும் ஏமாற்றமடைவதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் செவ்வாய்க்கிழமை (29) முதல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்ததன் பின்னரே திருத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
எனினும், பஸ் கட்டணங்களுக்கு நிகராக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிறிலங்கா விஜயம் செய்யவுள்ளார்.
இவர் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிகளில் சிறிலங்கா விஜயம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த விஜயத்தின் போது, கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளில்லா விமானத்தின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த தாக்குதலின் போது எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.
இதே எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல்களை நடத்திய நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ கார் பந்தயத்தை தடுக்கும் விதமாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான வடக்கு ஜெட்டா எண்ணெய்க் கிடங்கு, மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்கள் வந்திறங்கும் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் டீசல், கேசோலின், ஜெட் விமான எரிபொருள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிளர்ச்சியாளர்கள் நகரில் உள்ள தண்ணீர் தொட்டியை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால், தாக்குதலில் சில வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.
மற்றொரு தாக்குதல், யேமன் எல்லைக்கு அருகே சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் துணை மின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.
இதில் யேமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.