ஹர்த்தால் நாளை காலையில் மாத்திரம்! - தமிழரசுக் கட்சி அறிவிப்பு
வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"அரசாங்கப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளரும் பொலிஸ் பேச்சாளரும் இருந்தனர். நாளை வடக்கு, கிழக்கில் நாம் நடத்தும் ஹர்த்தால் தொடர்பிலேயே இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.
அதில் அவர்கள் விசேடமாகக் கூறிய விடயங்களுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதில் அமைச்சர் கூறுகின்றார், "இது தமிழர்களுக்கு எதிரான விடயம் அல்ல. இப்படியான சம்பவம் எந்தப் பகுதியில் இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கின்றோம். அதற்கு ஹர்த்தால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" - எனச் சொல்கின்றார்.
ஆனால் வடக்கு, கிழக்கைப் போன்று நாட்டின் எப் பகுதியிலும் மக்கள் மத்தியில் இராணுவப் பிரசன்னம் கிடையாது. நாங்கள் இந்தக் ஹர்த்தால் மூலம் வெளிக்கொணர இருக்கும் முக்கிய விடயம் என்னவெனில் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் இடையூறு செய்யும் விதமாகவே இந்த இராணுவ மயமாக்கல் இடம்பெறுகின்றது என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கடந்த 16 வருடங்கள் சொல்லி வருகின்றோம்.
அனுமதியின்றி சிலர் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார் என்றும், மரண விசாரணை முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை இருக்கும்போது நீரில் மூழ்கி மரணம் எனக் கூற முடியாது.
இதேதேரம் பொலிஸ் பேச்சாளரின் தகவலின்படியே ஒரு இராணுவ வீரர் இந்த ஐந்து பேரையும் தாக்கிக் காயப்படுத்தினார் என்ற காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். உயிரிழந்த இளைஞர் தாக்கி மரணமடைந்தாரா, தாக்கியதால் குளத்தில் பாய்ந்தாரா போன்ற விடயங்கள் எல்லாம் வெளிவர வேண்டும். இதேநேரம் ஏனைய இரு இராணுவத்தினரும் மேற்படி ஐவரையும் அழைத்து வந்தவர்கள் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் சொல்கின்றார்.
அப்படியானால் இராணுவ வீர்ர்களே அவர்களை உள்ளே அழைத்து வந்திருந்தால் இது எப்படி அனுமதியற்ற நுழைவு எனச் சொல்ல முடியும் என ஊடகவியலாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு உரிய பதில் கொடுக்கப்படவில்லை.
அமைச்சர் நாம் வேறுபாடு காட்டுவதில்லை என்கின்றார். ஆனால், நான் மீண்டும் கூறுகின்றேன். இது வடக்கு, கிழக்கில் மட்டும் காணும் விடயம். இதேநேரம் அமைச்சர் இன்னும் ஒன்றைக் கூறுகின்றார் அவர்கள் சேர்ந்து வாழப் பழகிவிட்டனர், அவர்களிடத்தில் நல்ல உறவு உள்ளது என்கின்றார். இது இராணுவமயமாக்கலின் சிறிய உதாரணம். இராணுவம் வாழும் சூழலை இராணுவத்தை அண்டி வாழும் சூழலை ஏற்படுத்துகின்றனர் என்பதனைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்தக் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எவருக்கும் தடங்கல் ஏற்படுத்தவோ, அவர்களைச் சிரமப்படுத்தவோ இந்தக் ஹர்த்தாலைச் செய்யவில்லை. இது தொடர்பான அரச ஊடக சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் ஒன்றையும், பொலிஸ் பேச்சாளர் ஒன்றையும் கூறுகின்றனர். அமைச்சர் வேறு ஒன்றைக் கூறுகின்றார் இதை வெளிப்படுத்தியே ஹர்த்தால் இடம்பெறுகின்றது என்பதனை வடக்கு, கிழக்கு மக்களுக்கும் விசேடமாக வர்த்தக உரிமையாளர்களுக்கும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.
இதேநேரம் பலரின் கோரிக்கையின் பெயரில் ஹர்த்தாலை முழுமையாகப் பேணும் அதேநேரம், இதைப் பலரின் நன்மை கருதி காலையுடன் மட்டும் முடித்துகொள்ளலாம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் மாலையில் இடம்பெறுவதும் கருத்தில்கொள்ளப்பட்டு இந்த முடிவு எட்டப்படுகின்றது." - என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு பிரதிநிதியோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகங்களில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றால், அவர்கள் பொது செயலாளர் தலதா அதுகோரலவின் ஒப்புதலுடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதற்கு வெளியே யாராவது ஈடுபட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இந்த விஷயத்தில் பொறுப்பேற்காது என்று அவர் மேலும் வலியுறுத்துகிறார்.
இலங்கையின் முதற்தர தன்னியக்க நிறப்பூச்சு கம்பெனியான,ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயானது, மோட்டார் பந்தய நாட்காட்டியினை ஒகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையினில் பற்றி எரிய வைக்கும் நான்கு தேசிய பந்தய நிகழ்வுத் தொடரான - ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வே SLADAரேசிங் செம்பியன்ஷிப் இற்கான பிரதம அனுசரணையாளர் எனும் தன்னுடைய வகிபாகத்தினை பெருமையுடன் அறிவிக்கின்றது.
தேசிய நெருக்கடிகள், பெருந்தொற்று மற்றும் பொருளாதார சவால்கள் என்பவற்றினால் ஏற்பட்ட பல வருட இடையூறுகளிற்குப் பின்னர், இவ்வருடத்தின் செம்பியன்ஷிப் போட்டியானது விளையாட்டிற்கான முக்கிய புத்துயிர்ப்பாக அமையவுள்ளது. இலங்கை மோட்டார்பந்தய சாரதிகள் சங்கத்தினால் (SLADA) இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப் படையுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இத்;தொடரானது கிராவல் மற்றும் டார்மெக் ஓடுபாதைகளில் தேசத்தின் தலைசிறந்த சாரதிகள் போட்டியிடுவதனை காணவுள்ளது.
செம்பியன்ஷிப் நாட்காட்டியின் அம்சங்களானவை:
16-17 ஒகஸ்ட் - ரோதர்ஹம் கட்டுகுருந்த சுற்றுப்போட்டி 1
30-31 ஒகஸ்ட் – கஜபா/ SLADA சுபர்க்ரோஸ் - சாலியபுர
4-5 ஒக்டோபர் - கன்னர்/ SLADA சுபர்க்ரோஸ் - மின்னேரியா
1-2 நவம்பர் - ரோதர்ஹம் கட்டுகுருந்த சுற்றுப்போட்டி 2
இலங்கையில் பெரிதும் கொண்டாடப்படும் வெற்றியாளர்களில் ஒருவரும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் தசாப்த காலத்திற்கும் மேலான வர்த்தகநாம முகவருமான, அஷான் சில்வா அவர்கள், இப்போட்டித்தொடரினை “இந்நாட்டின் மோட்;டார் பந்தயத்திற்கான புதுசக்தி” என்றும் கஜபா மற்றும் கன்னர் சுபர்க்ரோஸ் போன்ற தனித்துவமான போட்டிகளை பார்த்து வளர்ந்த போட்டியாளர்களின் கனவு நனவாகியுள்ளதுஎன்றும் கூறி, அறிமுக நிகழ்வினில் தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தார்.
பிரதம அனுசரணையாளர் சார்பில் உரையாற்றுகையில்,ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள்,“இந்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பந்தயப் போட்டித் தொடரை மீளக்கொணர்வதற்காக SLADA உடன் பங்காளராவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் மோட்டார் பந்தயமானது வெறுமனே ஒரு போட்டியாக மாத்திரமின்றி, புத்தாக்கம், திறன் மற்றும் சமுதாய உணர்வினை முன்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு மேடையாகவும் காணப்படுகின்றது. தன்னியக்க நிறப்பூச்சுக்களின் சந்தையில் முதல்வனாக காணப்படும், நாம் விளையாட்டு மற்றும் பரந்த வாகன உற்பத்தி கைத்தொழிற்றுறை என இரண்டினையும் வலுப்படுத்தும் துவக்கங்களுக்கு ஆதரவளிப்பதனை எமது பொறுப்பாக காண்கிறோம்” எனக்கூறி உள்ளுர் மோட்டார் பந்தயத்தினை தரமுயர்த்துவதிலான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்தினார்.
மோட்டார் பந்தயத்திலான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் ஈடுபாடானது இலங்கையின் வாகன உற்பத்தி துறையினை முன்னேற்றுவதற்கான பரந்த, நீண்ட கால மூலோபாயத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. SLADA ரேசிங் மற்றும் வளவை சுபர்க்ரோஸ் போன்ற மிகமுக்கிய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதற்கும் மேலாக, இத்துறைசார் அடுத்த தலைமுறை தொழில்வல்லுநர்களை வளர்த்தெடுப்பதற்காக,தொழிற்பயிற்சி அதிகாரசபையுடனான (VTA) பங்குடைமை ஊடாக திறன்களை விருத்திசெய்வதிலும் இவ்வர்த்தகநாமம் முதலிட்டுள்ளது.
பார்வையாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றின் உற்சாகமான ஆதரவுடன், 21 டார்மெக் மற்றும் 23 கிராவல் போட்டிகளுடன் திட்டமிடப்பட்டுள்ள இப்பருவத் தொடரான, SLADA ரேசிங் 2025 ஆனது வேகம், விவேகம் மற்றும் திறன்களின் உயர்வலு கொண்டாட்டமாக காணப்படுமென்பது உறுதியாகியுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார். உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகைஇன்று (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
அதன்படி, பயனாளிகள் தங்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை இன்று முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக சமீபத்திய நாட்களில் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை, மேலும் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலையில் சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று, நிகழ்வை செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மொனராகலை, மகந்தன முல்ல வீதியில் உள்ள தனியார் விடுமுறை விடுதியில், சமகி ஜன பலவேகயவின் மொனராகலை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் தொடர்புடைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. எச். எம். தர்மசேன, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கட்சியின் மொனராகலை மாவட்ட அரசியல் அதிகாரசபையின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இந்தக் கூட்டம் கட்சியின் உள் விவகாரம் என்று கூறி வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.
இதன்படி, 2024ஆம் ஆண்டில் அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத கொலைகளை புரிந்தமை தொடர்பான பல அறிக்கைகள் வெளியானதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் துன்னான பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை, மேலும் ஹங்வெல்ல பொலிஸ் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.