சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை : புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையில இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்கக்கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லையென, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக 200 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டும், சஹ்ரான் கைது செய்யப்படவில்லை என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது அவசியமற்றது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் வைராக்கியம் எமக்குள்ளது. அதேபோன்று குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடுமையான வைராக்கியம் உள்ளது. சிறுபான்மையினத்தவரின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் 2019 ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதிப்பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.
நியூசிலாந்து பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மரணத்துக்கு பழி தீர்ப்பதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதாகவும் முஸ்லிம்களை கொன்று முஸ்லிம் குழந்தைகளையும் பெண்களையும் விதவைகளாக்கி விட்டு இலங்கைக்கு வந்து விடுமுறையைக் கழிக்கும் வெளிநாட்டவர்களை கொல்வதற்காகவுமே ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொள்வதாகவும் சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் எவ்விடத்திலும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படவில்லை.
குண்டுத்தாக்குதல் தொடர்பாக தற்போது எதிர்தரப்பினர் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலால் 5 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளார்கள். அதன்படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க நிபுணர்கள் நாட்டுக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார்கள் என்றார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பு இன்று (22) முதல் அமுலுக்கு வருகிறது.
எவ்வாறாயினும், உள்ளூர் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷ உணவுத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 4,700 மெற்றிக்தொன் சோயா பீன்ஸ் மற்றும் சோளம் ஆகியவற்றை ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திடம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் அமைப்பு வழங்கியுள்ளது.
திரிபோஷ தொழிற்சாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் போதே, இவை வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் உலக உணவுத்திட்டத்தின் அவசர நடவடிக்கைக்கு அமெரிக்காவினுடைய 20 மில்லியன் அமெரிக்க டொலர்களின் பரந்த பங்களிப்பின் ஒருபகுதியாக இந்த உதவி அமைந்துள்ளதுடன், இலங்கை மக்களுக்கு பணம், உணவு, உதவி மற்றும் மதிப்பு வவுச்சர்களை வழங்குவதற்கு உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா உதவியுள்ளது. இதேவேளை, பாடசாலை உணவு மற்றும் திரிபோஷா வலுவூட்டப்பட்ட கலப்பு உணவுத் தயாரிப்பு உட்பட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை ஆதரிப்பதாக உலக உணவுத்திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இலங்கை சிறுவர்களின் போசாக்கு குறைபாட்டை தடுப்பதற்கு தேவையான திரிபோஷ கலப்பு உணவுப் பொருட்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக எமது அண்மைய அவசரகால நிதியுதவியினூடாக இலங்கையுடனான எமது நீண்டகால கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பு மகிழ்ச்சியடைகிறது. கடந்த ஆண்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் எங்கள் பங்காளிகளான உலக உணவுத்திட்டம், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய ஒத்துழைப்புடன் திரிபோஷா தொழிற்சாலைக்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கடைசியாக அனுப்பப்பட்டதை நாம் அவதானித்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
ஆஜரானார்.
இதன்படி, 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆஜரான அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.
இதில் பங்கேற்கும் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதன்படி, இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 10 மில்லியன் டொலர்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 04 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் சஹ்ரானை கைது செய்யுமாறு தான் தெளிவான பணிப்புரையை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது தன்னை இலக்கு வைத்து பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
நீர்கொழும்பு, மங்குளிய களப்பு பகுதியில் இருந்து 13 கோடி ரூபா பெறுமதியான 400 கிலோ 810 கிராம் கேரளக் கஞ்சா நேற்று (21) மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கேரளக் கஞ்சாப் பொதிகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் டிங்கி இயந்திரப் படகு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்படுள்ளது.
நீர்கொழும்பு, மங்குளிய களப்பு பகுதியில் இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளைக்கு சொந்தமான களனி கடற்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றை அவதானித்து அதனை பரிசோதித்த கடற்படையினர், குறித்த டிங்கி இயந்திர படகில் மிகவும் சூட்சகமான முறையில் 10 பார்சல்களில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த கேரளக் கஞ்சா கொண்டு வரப்பட்ட டிங்கி இயந்திர படகினையும் கைப்பற்றியுள்ளனர்.
எனினும், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுவரித் திணைக்களத்தின் நீர்கொழும்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதீகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் பின்னர் சீத்தாவகபுர பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ருவன்வெல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துன்புறுத்தல் குறித்து மாணவி பஸ் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து, நடத்துனர் மாணவியிடம் அவரது தந்தையின் கைத்தொலைபேசி இலக்கத்ததை பெற்று இது குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சிவில் அமைப்புக்கள் மத்தியில் தெரிவித்தது.
அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கு கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
அரச சேவையில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அதனால் அரச சொத்துக்கள் பாரியளவு வீணாகுவதாக சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகையில், அரச பொறிமுறையில் இடம்பெறும் விடயங்களில் அரசியல்வாதிகள் நேரடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுகின்ற போதிலும் அரச அதிகாரிகள் இவ்வாறு வெளிப்படுவதில்லை எனக் குறிப்பிட்டனர்.
அத்துடன், தேர்தல் முறைமை தொடர்பிலும் குழுவி கலந்துரையாடப்பட்டது. அங்கவீனர்களுக்கு சதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்தார். அங்கவீன சமூகத்தினருக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் இந்த அடையாள அட்டை வேலைத்திட்டத்தை முழு இலங்கையிலும் வழங்குவதன் இயலுமை தொடர்பில் கண்டறியுமாறு குழுவின் தலைவர் தெரிவித்தார்.