சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
அங்கு கருத்து தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட, குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கிடமான எதுவும் கொண்டு வரப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்கு முன்னர், இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்து, இந்தக் கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுங்கத் திணைக்களம் பின்பற்றிய நடைமுறைகளால், குறித்த கொள்கலன்களில் எந்தவொரு சட்டவிரோதப் பொருட்களும் இல்லை என தாங்கள் நம்புவதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட,
"இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன்களில், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல் வகைகள், இரசாயனப் பொருட்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், விலங்கு உணவு, இயந்திர வகைகள், பூச்சிக்கொல்லிகள், சீமெந்து, இரும்புக் குழாய்கள், உரம், பலகை போன்றவைதான் இருந்தன.
இந்தக் கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. இதுதவிர, இந்தோனேசியா, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலிருந்தும் இந்தக் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும்போது நாங்கள் பின்பற்றிய நடைமுறைகளால், இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்தன என நாங்கள் நம்புகிறோம். இந்தப் பொருட்களை விடுவிக்கும் இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.
கடந்த காலத்தில் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆயுதங்கள் இருக்கலாம், தங்கம் இருக்கலாம், அல்லது போதைப்பொருள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், நாங்கள் பின்பற்றிய இந்த நடைமுறைகளால், இந்தக் கொள்கலன்களில் அவை எதுவும் இல்லை என நம்பிக்கையுடன் கூற முடியும்.
எவ்வாறாயினும், இது தொடர்பாக பெரும் விவாதம் எழுந்துள்ளதால், இலங்கை சுங்கத் திணைக்களம் இதற்காக ஒரு பிந்தைய தணிக்கை (Post-Clearance Audit) நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக பிந்தைய முடிவு பிரிவு ஏற்கனவே தணிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும், நிதி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு ஒன்று இந்த முழு செயல்முறையையும் விசாரித்து வருகிறது.
சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இந்தக் குழுவிடம் சென்று விளக்கங்களை அளித்துள்ளனர்.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நாங்கள் விபரங்களை வழங்கியுள்ளோம். எனவே, எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும் செயல்முறையில் எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் உத்தரவு அல்லது அழுத்தம் எதுவும் ஏற்படவில்லை. அதை நான் உறுதியாகக் கூற முடியும்.
2025 ஜனவரி 18 அன்று விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாகவே இந்த விவாதம் எழுந்தது. அன்று விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் 180 இறக்குமதியாளர்கள் இருந்தனர். இவர்களிடமிருந்து 234 சுங்க ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தன.
அதன் மூலம் நாங்கள் 309 கொள்கலன்களை விடுவித்துள்ளோம். மொத்தம் 371 கொள்கலன்கள் இருந்தன. அதில் 62 கொள்கலன்கள் எங்கள் தரவு முறைமை மூலம் தானாக விடுவிக்கப்பட்டவை. மீதமுள்ள 309 கொள்கலன்களை இந்தக் குழு மூலம் விடுவித்தோம்.
அந்த இறக்குமதியாளர்களின் அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளன. அவர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் ஒரு நிறுவனமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் குழு யார், இவற்றை விடுவித்தவர்கள் யார் என அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளன.
மேலும், கொள்கலன் எண்களும் எங்களிடம் உள்ளன. இந்த அனைத்து விபரங்களையும் தேவையான இடங்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.
நாங்கள் ஆபத்து முகாமைத்துவ முறைமை மூலமாகவே எவற்றைப் பரிசோதிக்க வேண்டும், எவற்றைப் பரிசோதிக்கத் தேவையில்லை எனத் தீர்மானிக்கிறோம். முன்னர் கூறியது போல, 60% கொள்கலன்களை நாங்கள் பரிசோதிக்காமல் விடுவிக்கிறோம்.
ஒரு கொள்கலனை பரிசோதிக்காமல் விடுவிப்பது சுங்கத்திற்கு புதிய விடயமல்ல. இதுதான் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, எதிர்காலத்திலும் நடக்கும். இந்த ஆபத்து அடிப்படையிலேயே நாங்கள் தீர்மானங்களை எடுக்கிறோம்." என்றார்.
ஒரு லிட்டர் எத்தனால் விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஒரு பாட்டில் சாராயத்தின் விலையைக் குறைக்க முடியும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகையில்,
"எத்தனால் லிட்டருக்கு 1,500 மற்றும் 1,700 என விலை நிர்ணயம் செய்யப்பட்டபோது, ஒரு பாட்டில் சாராயத்தின் விலை மாறவில்லை. விலை 1,500 ஆக இருந்தபோதும், நிறுவனம் ஒரு பாட்டில் சாராயத்தை 3,500 மற்றும் 4,000க்கு விற்றது. இப்போது, அது 475 ஆகக் குறைக்கப்பட்டபோதும், ஒரு பாட்டில் விலை அப்படியே உள்ளது."
475க்கு ஒரு லிட்டர் எத்தனால் வாங்கினால், ஒரு லிட்டர் எத்தனாலில் இருந்து 3 பாட்டில்கள் சாராயம் தயாரிக்கலாம். பிறகு, ஒரு லிட்டர் எத்தனாலைக் கொண்டு 475 ரூபாய்க்கு 3 பாட்டில்கள் சாராயம் தயாரிக்க முடிந்தால், எவ்வளவு குறைவாக விற்க முடியும்?
கல்லோயா, அத்திமலே போன்ற உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஒரு பாட்டில் சாராயம் தயாரிக்க உரிமம் வழங்குமாறு அவர்கள் கேட்டனர். இதுதான் அங்கே பிரச்சனை. அது எங்கள் பிரச்சனை இல்லை. நான் இதை ஜனாதிபதியிடம் தெரிவிப்பேன்."
அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் 450 பில்லியன் ரூபா வருவாய் இந்த ஆண்டுக்கான வாகன இறக்குமதி மூலம் அடையப்படும் என பொது நிதி குழுவில் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ரூ. 136 பில்லியன் வருவாய் வாகன இறக்குமதி மூலம் ஈட்டியதாக அவர் தெரிவித்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய குழுத் தலைவர் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது:
"வாகனங்கள் இறக்குமதி ஊடாக உங்கள் இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் வெளிப்படையாகச் சொன்னால், சுங்கத்துறை அந்தச் செயல்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது,
பொசன் போயா பண்டிகைக்காக வழங்கப்படும் தன்சல்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குறித்து கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
களுத்துறை- ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோகிராம் தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்கமானது நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருக்கும் இருப்பு என்று தொழிலதிபர் கூறியுள்ளார்.
எனினும், அத்தகைய இருப்பு எவ்வாறு என்பது என்பது குறித்த தகவலை அவரால் வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் ஜீன் 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இன் நிகழ்வு கொழும்பு நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் கூட்டத்தில் முதல் அலுவலாக புதிய நகரசபையின் மேயர் பிரதி மாநகரசபையின் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
கொவிட்-19 வைரஸின் பரவல் குறித்து பதிவாகும் எண்ணிக்கையின் அடிப்படையில், சுகாதார அமைச்சு அடுத்த கட்ட தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொவிட் வைரஸ் தொற்றை எதிர்கொள்வது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து ஏற்கனவே பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையிலும் உலக சுகாதர அமைப்பின் ஆலோசனைகளுக்கு இணங்கியும் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:கொவிட் புதிய திரிபு குறித்து உலக சுகாதார அமைப்புடன் அடிக்கடி கலந்துரையாடி வருகிறோம்.
மருத்துவமனைகளில் பீ.சீ.ஆர்.சோதனைகளை நடத்தி வருகிறோம்.பொறுப்பற்ற முறையில் எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது.
மக்களின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படும். விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் அந்த முடிவையும் அரசாங்கம் எடுக்கும் என்றார்.
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்று இரவு (ஜூன் 2) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருடன் 15 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது.
அவுஸ்திரேலிய தூதுக்குழுவை பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, துணைப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜய்த ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவையும் சந்திப்பார் எனன தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் Starlink சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
Starlink இலிருந்து பெறப்படவுள்ள தகவல் கட்டுப்பாட்டு பலகை (Dashboard) கிடைத்தவுடன், எவ்வித தாமதமும் இன்றி சேவைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
2025 ஆசிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டுடன் இணைந்து சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இருதரப்பு சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டார்.
இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கை ஒருங்கிணைப்பாளரான தூதர் ஸ்டெஃபன் லாங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூகுள் மற்றும் மெட்டா போன்ற முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான தொடர்ச்சியான ஆதரவு, நாட்டில் தரவு மையங்களை நிறுவுதல், AI அடிப்படையிலான தரவு மையங்களை உருவாக்குதல், சைபர் பாதுகாப்புச் சட்டத்தின் மேம்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை வலுப்படுத்துதல், தற்போதுள்ள ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல மூலோபாயப் பகுதிகள் விவாதிக்கப்பட்டன.