பாராளுமன்றம் உள்ளது சட்டங்களை இயற்றுவதற்காகவே அன்றி நடிப்பதற்காக அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாரேனும் நடிக்க விரும்பினால் வீதியில் இறங்கி நடிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கும் முதல் மணித்தியாலத்தின் பின்னர் பிரதான பணிகளுக்கு செல்லுமாறு விதியை முன்மொழிவதாக தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற நேரம் ஒன்று அல்லது இரண்டு மணி வரை சபையின் பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
40ஆவது அதிகார சபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நேற்று(21) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு விளைவித்தமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 10.5 கிலோகிராம் ஹெரோயின் அடங்கிய 08 பார்சல்களை அகற்ற முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பார்சல்களில் துண்டுகள் இருந்ததாக அறிவிக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் கூறியது, ஹீரோயின் கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ. 270 மில்லியன்.
08 பார்சல்களில் அடைக்கப்பட்ட இந்த ஹெராயின், நவம்பர் 10 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் இருந்து Oman Air விமானம் மூலம் BIA இன் விமான சரக்கு முனையத்திற்கு அனுப்பப்பட்டது. ஹெரோயின் அடங்கிய சரக்கு நிட்டம்புவ திஹாரியவில் இயங்கி வரும் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 05 இல் வசிக்கும் 43 வயதான நபர் ஒருவர் சரக்குகளை விடுவிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு நேற்று (21) இரவு வந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், விமான சரக்கு பார்சல்களை அவர் முன் திறந்து சோதனையிட்ட போது, 10 கிலோ 500 கிராம் எடை கொண்ட இந்த ஹெரோயின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மற்றும் விமான சரக்கு முனையத்தின் சுங்க அதிகாரி ஆகியோர் சரக்குகளை பெற்றுக்கொள்ள வந்த நபரையும் சரக்குகளை அகற்ற முயன்ற இரண்டு வார்ஃப் கிளார்க்குகளையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, ஹெரோயின் மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டனர்.
சர்வதேச சந்தையில் காணப்படும் தேயிலையின் விலை மற்றும் அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் இ.தொ.காவின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், சர்வதேச சந்தையில் காணப்படும் தேயிலையின் விலை மற்றும் அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் எனவும், கம்பனிகள் சம்பள உயர்வு குறித்து இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் வெறும் வியாக்கியானம் மட்டுமே பேசிக்கொண்டு கூட்டு ஒப்பந்தம் ஒரு கூத்து ஒப்பந்தம் எனவும், கூட்டு ஒப்பந்தம் மரண சாசனம் எனவும் பல விமர்சனங்களை முன்வைத்த விமர்சகர்கள், மக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் போது இவர்கள் காணவில்லை. இ.தொ.காவால் கூட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட போதிலும் இ.தொ.கா மக்களுக்காக தொடர்ந்தும் சேவையை முன்னெடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கடந்த 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கையை செவிமடுத்ததன் பின்னர் இருதரப்பு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை அணியால் பங்கேற்க முடியும் என இன்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.
இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு தென்னாபிரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்படும் நிர்வாக நிச்சயமற்ற நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பின் போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி 45 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
27.2 இன் கீழ் சபாநாயகரின் அனுமதியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியை சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21) கருத்து வௌியிட்ட போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலைமை தொடர்பில் அண்மையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வௌியிட்டார்.
தீர்ப்பிற்கமைய குற்றவாளிகளுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.
தான் முன்வைத்த விசேட கூற்றின் விபரங்கள் அடங்கியிருந்த கோவையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பறித்துச் சென்றதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) குறிப்பிட்டார்.
நாட்டை வங்குரோத்து செய்ய உழைத்தவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ராஜபக்ஷர்களிடம் இருந்து நட்டத்தை மீட்பீர்களா? என்றும் பாராளுமன்றத்தில் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பாடசாலை மாணவர்களும் கலரியில் இருக்கின்றனர். ஆகையால், தொடர்ந்தும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார வீடியோ எடுத்தார். அவ்வாறு வீடியோ எடுக்க வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நளின் பண்டாரவிடம் கேட்டுக்கொண்டார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியை முன்வைத்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்க்கட்சித் தலைவரை அணுகினர்.
இதன்போது, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மற்றும் ஏனைய சேவிதர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் வந்து அவரைப் பாதுகாப்பதைக் காணமுடிந்தது.
இதையடுத்து அவையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மீண்டும் 11.14க்கு ஆரம்பித்தார்.
அப்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத் நிஷாந்த அபகரித்தார். அதனை, சமர விக்ரமவிடம் கொடுத்தார். அத்தனையும் பிரதமர் முன்னிலையிலேயே நடந்தது.
என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? என்றும் வினவினார்.
கையடக்கத் தொலைபேசிகள் அல்லது இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்து அவற்றை இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை நாடாளுமன்ற அவையில் ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு யாராவது நடந்து கொண்டால் அது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.