web log free
February 17, 2026
kumar

kumar

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் திருத்தப்படுள்ளது.

ஒட்டோ டீசல் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.279 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.323 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 95 ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.340 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.182 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது .

பெட்ரோல் ஒக்டேன் 92 விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளை திருத்துவதாக LIOC நிறுவனமும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.

விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார்.

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனக்கும் தனது மகனுக்கும் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது முழுமையாக ஒரு குடும்பத்தை இலக்காகக் கொண்ட அரசியல் பழிவாங்கல் என்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

போலீசின் உத்தரவின் பேரில் இன்று (05) காலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில் ஆஜரான சந்தர்ப்பத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அழைப்பை புறக்கணித்தால் கைது செய்வதற்காக நீதிமன்ற பிடியாணை பெறப்படும் என போலீசார் எச்சரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னை ஏன் அழைத்தனர் என்பது குறித்து எவ்வித காரணமும் அறிவிக்கப்படவில்லை என்றும், FCID தமக்கு புதிதான இடமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

“இது எனக்கு புதிய இடமல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல். ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வழக்கில் என் பிள்ளைகளை முதலில் கைது செய்து, பின்னர் என்னையும் கைது செய்யும் திட்டம் இது. அரசாங்கம் இதற்காக இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து அவதூறு செய்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. என் பிள்ளைகளும் எந்த தவறும் செய்யவில்லை. எனவே இதை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம்,”

என்று அவர் கூறினார்.

மேலும், இந்த விடயத்தில் தாம் அச்சமடையவில்லை என்றும், நீதியும் நியாயமும் நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சதொச (SATHOSA) நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி வாகனத்தை தவறாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும், மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குடன் தொடர்புடையதாக, சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளரான இந்திக ரத்னமல்ல என்பவர் நேற்று (04) கைது செய்யப்பட்டார்.

முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் பதவியில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இருந்த காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் லாரி ஒன்றை ஒரு எத்தனால் நிறுவனத்தின் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக, அவரது மகன் ஜோஹான் பெர்னாண்டோவுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திக ரத்னமல்ல வத்தளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், வரும் ஜனவரி 09ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய ஐந்து விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த போதும், அவர் இருந்த இடத்தை கண்டறிய போலீசாரால் முடியாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை அமைப்பு (Online Complaint Management System) பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஊழியர்கள் தற்போது தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நேரடியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

இதற்கமைய தொடர்பு விபரங்களை வழங்கும் நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் அனுப்பப்படுவதுடன், பின்னர் நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகையை மீட்க அதிகாரிகள் முயற்சிப்பார்கள்.

இதற்குப் பின்னரும் நிறுவனங்கள் நிதி செலுத்தத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அபராதத்துடன் கூடிய நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 22,450 நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்துவதில் தவறிழைத்துள்ளதாக நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இவற்றின் மொத்த நிலுவைத் தொகை சுமார் 3,498 கோடி ரூபாவிற்கும் (ரூ. 34,989,162,957.81) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பதுளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அநுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி), கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தலைமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு வெளி சக்திக்கும் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியது.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்றும், எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகள் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதவை

அந்த வகையில், வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

அதன்படி, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கு திசையில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பமான வானிலை நிலை, நாட்டின் வானிலையை தொடர்ந்து பாதித்து வருகிறது.

இதன் காரணமாக, ஜனவரி 05 முதல் எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும்.

மேலும், வடக்கு மாகாணம், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், மேலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொணராகலை மாவட்டங்களில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வேகமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தான் சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில், மறைந்த பேராசிரியர் செனக பிபிலே கொள்கையை நடைமுறைப்படுத்தி மருந்து விலைகளை குறைத்ததுடன், இலங்கையில் மருந்து உற்பத்தி நடவடிக்கைகளையும் ஆரம்பித்ததாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் மொத்தமாக 29 மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதாகவும், அவற்றில் 29-வது தொழிற்சாலையின் செயல்பாடுகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தொழிற்சாலைகளின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், நாட்டிற்கு தேவையான அனைத்து மருந்துகளையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும் திறன் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் பல நாடுகள் மருந்து ஏற்றுமதியை நிறுத்திய சூழலில், நாட்டிற்கு தேவையான மருந்துகளை இத்தொழிற்சாலைகளின் மூலம் உற்பத்தி செய்ய முடிந்ததாகவும் ராஜித சேனாரத்ன நினைவூட்டினார்.

முன்னாள் அமைச்சர் இந்த கருத்துகளை உபுல் ஷாந்த சன்னஸ்கல நடத்தும் இணைய ஊடகச் சேனலுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வெளியிட்டார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

அதில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்ததுடன், 2 நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

முதற்கட்ட விசாரணை முடித்து மீனவர்கள் 9 பேரும் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது.

9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடையச் செய்துள்ளது.

இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து 9 மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்து உள்ள கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் அனைவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது காரைக்கால் மீனவர்கள் 11 பேரையும் வரும் 7-ந் திகதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்தில் தென்படவுள்ள பிரதான விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03) நாளையும் இரவில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்தய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாளை அதிகாலை 4.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வடகிழக்கு திசை வானத்தில் இந்த விண்கல் மழை தென்படவுள்ளது. 

மணிக்கு சுமார் 80 விண்கற்கள் தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையத்தின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd