நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பின்னர், வரைவு மசோதா சமீபத்தில் சட்டமா அதிபரிடம் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொஸ்கொட, தூவமோதரவில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் 23 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பில் கொஸ்கொட பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சூரிய ஒளி இல்லாததால் சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் இது, 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினையாக இல்லை என்று, குழந்தை நல மருத்துவ ஆலோசகர் மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சிறுவர்கள் வெளியே சென்று வெயிலில் விளையாடுவதற்குப் பதிலாக, தங்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குப் படிப்பது, தனியார் வகுப்புக்களுக்குச் செல்வது, இணைய விளையாட்டுக்களை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் அதிகமாக தொலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மிகவும் மும்முரமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகளுக்கு மாறாக, சிறுவர்கள் வெளியே சென்று விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இயற்கையாகவே சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி யினைப் பெற முடிந்தாலும், சிறுவர்களிடையே அதிகமாக விட்டமின் டி குறைபாடு காணப்படுகின்றது.
மேலும், அடுத்த தலைமுறைக்குச் சூரிய ஒளி வெளிப்பாடு மிகவும் முக்கியமானதொன்று எனவும், சூரிய ஒளி வெளிப்பாட்டிற்குச் சிறந்த நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நெத்தலி, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முருங்கை இலைகள் போன்ற விட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்பதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று (30) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள பாதுகாப்பு காரணங்களுக்காக தமது கட்சிக்காரர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு பதிலாக கொழும்பு நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி இன்று நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
இதன்போது. மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, இந்த கோரிக்கையை இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பொருத்தமான உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுக்கு அறிவித்தது.
மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகேவும் அந்தக் கோரிக்கைக்கு தமது இணக்கத்தை தெரிவித்தார்.
அதன்படி, மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை நிறைவு செய்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.
2011 டிசம்பர் 09ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யயப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்த கோட்டபய ராஜபக்ஷவுக்கு, 2019 ஆண்டு அறிவித்தல் அனுப்பப்பட்டது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது எனக் கூறி, குறித்த அறிவித்தல் அனுப்பும் முடிவுக்கு எதிராக கோட்டபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
குறித்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலை இரத்துச் செய்திருந்தது.
இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள், உயர் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது ஏழு மனித எலும்பு கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. 3 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 111 மனிதஎலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 99 மனிதஎலும்பு கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கண்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோயே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 52 வயதுடையவர் எனவும் அவரது 44 வயது மனைவி மற்றும் 17 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 67 இலங்கை குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களில் பலர் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் தற்போது வசிக்கும் நாடுகளை புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சந்தேக நபர்களைக் கைது செய்து இந்த நாட்டிற்கு நாடு கடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் அரசாங்கம் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கடந்த சில மாதங்களில் சுமார் 20 சந்தேக நபர்கள் ஏற்கனவே நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் பல பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒப்பந்தக் கொலைகள் வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களால் திட்டமிடப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வலையமைப்புகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், போலி பாஸ்போர்ட்களை வழங்கி இந்த தப்பியோடிய குற்றவாளிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் சில குடிவரவு அதிகாரிகள் மீதும் தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை உருவாக்குவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்விச் செயல்பாட்டில் ஆசிரியர்கள் தீர்க்கமான காரணியாக இருப்பதால், ஆசிரியர் மதிப்பீடு முறையாக செய்யப்பட வேண்டும் என்று ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (29) சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகில் அமைந்துள்ள சுது அரலிய ஹோட்டலை இடிக்க முடியாது என்று நீர்ப்பாசனத் துறையின் மாவட்ட இயக்குநர் நாயகம் கிருஷ்ணரூபன் தெரிவித்தார்.
இந்த ஹோட்டல் பிரபல அரிசி தொழிலதிபர் டட்லி சிறிசேனவுக்கு சொந்தமானது.
கேள்விக்குரிய நிலம் 1977 ஆம் ஆண்டு சுற்றுலா வாரியத்திற்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது என்றும், ஹோட்டல் சட்டப்பூர்வமாக கட்டப்பட்டது என்றும் இயக்குநர் ஜெனரல் மேலும் விளக்கினார்.
இருப்பினும், ஹோட்டல் கூடுதல் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதா என்பதை சரிபார்க்க மறு கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீர்த்தேக்க இருப்புக்களின் எல்லைகளை மீண்டும் குறிக்கும் திட்டம் தொடங்கப்பட்டவுடன், ஹோட்டலை அகற்ற வேண்டியிருக்கும் என்று அமைச்சர் லால் காந்த கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ஜெனரல் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.