web log free
May 02, 2024
kumar

kumar

தம்பன குகுலபொட சுனுத்தர மகா விகாரை மீது இன்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஹாராதிபதி தேரர் உறங்கிக் கொண்டிருந்த அறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இக்கிராமத்தில் நடைபெற்று வரும் ஆட்கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கடத்தல்காரர்கள் குழுவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விஹாராதிபதி தேரர் குறிப்பிடுகின்றார்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

குளியாப்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் பேச்சாளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் உரை நிகழ்த்துவதாக உறுதியளித்ததாகவும், பின்னர் தான் வெட்டப்பட்டதை அறிந்ததாகவும் நவீன் திஸாநாயக்க கூறுகிறார்.

“கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு யார் இந்த முடிவுகளை எடுப்பது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் கட்சிக்காக நிற்கிறேன். ஆனால் ஒருவரின் கௌரவம் பாதிக்கப்படக்கூடாது” என நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட இந்த பேரணியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் பங்கேற்கவில்லை.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும்.

எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு – அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்க முடியும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் மகளிர் அணியின் தலைவியும், கட்சியின் பிரதி தலைவருமான அனுஷியா சிவராஜா தலைமையில், மகளிர் அணியின் உப தலைவியும், மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செண்பகவள்ளியின் ஏற்பாட்டில் “பொருளாதாரத்தை வலுவூட்டலின் ஊடாக பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் கொட்டகலை சி.எல்.எப். வளாக கேட்போர் கூடத்தில் இன்று (10.03.2024) நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியவை வருமாறு, 

“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதல் விடயம் மலையகத்தில் வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அந்தவகையில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

இரண்டாவது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம். தற்போது சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகின்றார். இது தற்காலிக தீர்வு மாத்திரமே. எனவே, நிரந்தர தீர்வு என்னவென்பதை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும்.

இறுதியாக காணி உரிமை விடயமாகும். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காணி உரித்தும் வழங்கப்பட வேண்டும். இவற்றை செய்து, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை நாம் ஆதரிப்போம்.

கோரிக்கைகளை விடுத்துக்கொண்டும், ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுக்கொண்டும், அறிக்கைகளை விடுத்துக்கொண்டும் அரசியல் நடத்துவதில்லை நாம். சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகின்றோம்.

அதேவேளை, இலங்கையில் மகளிருக்கான ஒதுக்கீடு தொடர்பில் சட்டம் இயற்றுவதற்கு முன்பிருந்தே பெண்களுக்கு இ.தொ.கா முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. பெண்களுக்கு உயர்பதவிகளைக்கூட வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெண்களை மதித்து, அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றி, அவர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டே முடிவுகள் எடுக்கப்படும்.

எமது பெருந்தோட்டத்தொழில்துறையில் ஈடுபடும் தாய்மாரின், சகோதரிகளின் தொழில்சார் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். முன்னெடுத்தும் வருகின்றோம்.” – என்றார்.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை படை சிறைபிடித்தது.

இலங்கை கடற்படை கைதுசெய்து அழைத்துச் சென்ற 22 மீனவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் கருத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.பி தெரிவித்தார். ந்

கடந்த முறையும் இம்முறையும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்த போது எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் யுவதி சடலம் இன்று (9) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கரந்தெனிய மண்டகந்த தல்கஹவத்தையை சேர்ந்த ஆராச்சி கங்கணம் ஹன்சிகா நதீஷா என்ற பதினேழு வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த யுவதியை உறவினர் ஒருவர் முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது இவர்களின் வேலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுப்பதாக அறியமுடிவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன முன்னணி அரசியல் ரீதியில் அபாயகரமான விளைவுகளை சந்திக்கும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் இவ்வாறான அழுத்தம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சதித்திட்டங்கள் மூலம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சீர்குலைப்பது முற்றிலும் சாத்தியமற்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெண் என்பவர் இந்த தேசத்தைக் கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களின் பங்கு என்பது அளப்பறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர், 

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படுமிடத்து, பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப்படும் இடத்தில் இலங்கை முதலாவது இடத்தில் காணப்படுகிறது என்றும் அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பதாகும். ஒரு சிறந்த பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க செயற்பட்டு அவர்களின் ஆட்சியின் போது மக்களுக்காக சிறப்பாக செயற்பட்டு சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். பெண்களின் சிறந்த ஒரு தலைமைத்துவத்திற்கு அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

பெருந்தோட்ட பெண்கள் பிரித்தானிய ஆட்சி காலம் முதல் இன்றுவரை இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நம் நாட்டிற்கான அந்நிய செலவாணியை பெருந்தோட்ட பெண்கள் பெற்றுகொடுத்து நம் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். வீட்டையும் நாட்டையும் கட்டியெழுப்பும் வலிமை பெண்களுக்கே உண்டு.

பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலைசெய்யப்பட்ட இலங்கை குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரின் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்த அக்குடும்பத்தினரின் பெயர் விபரம்

ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பண்டாரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகனாயக (35) - தாய், இனுக விக்ரமசிங்க (7) - மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) -மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.