web log free
February 11, 2025
kumar

kumar

பாராளுமன்ற பராமரிப்பு பிரிவில் இளம் அழகிய பணிப்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி திருமதி குஷானி ரோஹணதீரவினால் சந்தேகநபருக்கு பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊழியர்கள் இதுவரையில் முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் ஹவுஸ் கீப்பிங் திணைக்களத்தில் சில இளம் அழகான பணிப்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் வெளியானதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரால் மூவர் கொண்ட குழு ஒன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு நியமிக்கப்பட்ட பின்னர், குழுவின் முன் தானாக முன்வந்து ஊழியர்கள் குழு ஒன்று ஆஜராகி, தங்களுக்கு நடந்த முறைகேடுகள் குறித்து பல விவரங்களை வெளிப்படுத்தினர். பணிப்பெண்கள் அளித்த தகவலைக் கருத்தில் கொண்டு சந்தேகநபர்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பல அதிகாரிகள் பற்றிய தகவல்களை ஊழியர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க விடாமல் பெண் ஊழியர்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு பல வழிகளில் அச்சுறுத்தும் பல சம்பவங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற தலைவர்களுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பாராளுமன்ற தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற மகளிர் மன்றமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. அந்த மன்றத்தின் உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஏற்கனவே பல ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

'13' குறித்த ரணிலின் உரைக்கு  

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டுப் பதிலளிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்."

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

'13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த நாட்டின் அதியுயர் சட்டமாகும். அதை நாம் புறக்கணிக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிறைவேற்று அதிகாரமும், நாடாளுமன்றமும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்' - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(09) முற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எமது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அவர் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் எழுதிய கடிதத்திலும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இந்தநிலையில், 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டுப் பதிலளிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்." - என்று குறிப்பிட்டார்.

குரங்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு வனஜீவராசிகள் அமைச்சிடம் எந்தவொரு அமைச்சு அல்லது நிறுவனமும் கோரிக்கை விடுக்கவில்லை என வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மொழி கேள்விகளை எதிர்பார்த்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை தடுப்பதற்கான தீர்வுகளை எந்தவொரு நாடும் இதுவரை வழங்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சுற்றி அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிரேஷ்ட எம்.பி.க்கள் உட்பட மேலும் பல புதிய எம்.பி.க்களின் உதவியுடன் “எதிர்க்கட்சி” ஒன்றை உருவாக்கப் போவதாக மொட்டு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் தலைமையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது எப்படியாவது வெற்றியடையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உயர்த்துவது குறித்து இந்தக் குழு ஆலோசித்துள்ளது.

இந்த நாட்களில் எம்.பி.க்களை கூட்டிச் செல்லும் நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குருணாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளுக்கு ஏற்றவிதத்தில் நீர் திறந்து விடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாரத்திற்கு ஒரு தடவை நீர்வரத்து கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகையில், பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியதுடன் “ராவணனின் ஆணவம் இலங்கையை எரித்தது போல மோடியின் ஆணவம் இந்தியாவை எரிக்கிறது” என்று கூறினார்.

ராவணனை ராமர் கொல்லவில்லை, ஆனால் அவரது (ராவணனின்) ஆணவமே அவரைக் கொன்றது, அதே போல் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவம் நாட்டையே எரித்துக்கொண்டிருக்கிறது என்றார்.

இலங்கையை எரித்தது பகவான் அனுமன் அல்ல என்றும், ராவணனின் ஆணவமே இலங்கையை அழித்தது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

மொட்டு தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களுக்கு கட்சியை பொறுப்பேற்குமாறு கூறி செய்தி அனுப்புவதாக அந்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட  எம்பி ஒருவர் கூறுகிறார்.

புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள எம்.பி.க்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பசில் ராஜபக்சே இவ்வாறு செய்தி அனுப்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசிலைச் சுற்றி தற்போது நாடாளுமன்றத்தில் 20க்கும் குறைவான உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர் என்பதை மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தொகுதிக் குழுவில் உரையாற்றிய எம்.பி.க்கள் குழுவைக் காணும் போது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் எம்.பி. கூறினார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(09.08.2023) ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கூறுகையில்,13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை முன்னோக்கிகொண்டு செல்வதானால் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் அவசியம்.

அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

முடிவெடுப்பதில் எதிர்க்கட்சிகளைக் கருத்தில் கொண்டு, சமத்துவமானதும், ஒத்துழைப்புடனான அரசியல் சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பகத்தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் புதிய பயணத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களின் தனிப்பட்ட வாத, விவாதங்களை தவிர்த்து நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் நீண்ட கால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவுகளை கூட்டாக எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேர்மையான ஒற்றுமை தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நேற்று மாலை சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

மதுவரி பரிசோதகரும் 7 அதிகாரிகளும் அடங்கிய குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்ததுடன், போலியான கொள்வனவாளர் ஒருவரை ஈடுபடுத்தி சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே இவர்களின் திட்டமாக இருந்தது.

அவர்கள் போலி கொள்வனவாளர் ஊடாக 150 கிராம் ஹெரோயினை கொள்வனவு செய்துள்ளனர். இதன்போது, ஹெரோயினை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், விற்பனையாளருடன் வந்திருந்த நபர் தப்பிச்சென்றதாக மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர், மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.

தப்பிச்சென்றவரை கைது செய்வதற்காக மதுவரி திணைக்கள அதிகாரிகளால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேகநபர், வௌ்ளவத்தையில் தான் பயணித்த காரை கைவிட்டு, முச்சக்கரவண்டியொன்றில் ஏறி தப்பியோடியுள்ளார்.

இதனிடையே, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய மதுவரி அதிகாரிகள் நால்வரும் மீண்டும் தமது தலைமையகத்திற்கு சென்றுகொண்டிருந்த போது வௌ்ளவத்தையில் பொலிஸாரால் வீதித் தடைக்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட, மதுவரி பரிசோதகருக்கு உரிய துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட நால்வரும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த துப்பாக்கிப்பிரயோகம் தனிப்பட்ட காரணங்களுக்காகவா இடம்பெற்றது எனும் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

மதுவரி அதிகாரிகளின் சுற்றிவளைப்பு தொடர்பில் பொலிஸூக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அறிவித்தலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்திற்கு இடமளிக்காத வகையில், அதற்கு முன்னரே பொலிஸார் மதுவரி அதிகாரிகளை கைது செய்ததாக மதுவரி திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இது, கடமையின்போது இடம்பெற்ற சட்டபூர்வமான துப்பாக்கிப்பிரயோகமெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை வழங்கி விடுவித்தது.

வழக்கு மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பதாக சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட சிங்கள அமைப்புக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளன.

யாழில் உள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட சிங்கள அமைப்புக்களால் இந்த முறைப்பாடு தொடர்பான கடிதம் சபையின் அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இதன்போது இந்த அமைப்பினர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் " கறுப்பு ஜூலை இன அழிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்த சிங்களவர் பலவந்தமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழ் மக்களை துன்புறுத்துவதாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. யாழ்ப்பாணத்தை விட அதிகளவான தமிழ் மக்கள் கொழும்பில் இருக்கின்றனர். அத்துடன், யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சிங்கள மக்களின் மனித உரிமைகளும் இந்நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மற்றும் சிங்களம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருவதாகவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd