மேலும் மூன்று வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் சரத் வீரசேகர ஆகியோருடன் போட்டியிடவுள்ளார்.
ஊழலை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் சிறிய கட்சியொன்றில் இருந்து சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாட்டில் இருந்து வெளியாகும் தேசிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
அதற்காக அவர் ஏற்கனவே உள்ளூர் மட்டத்தில் பொதுமக்களிடம் உரையாற்றி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் சமகி ஜன பலவேக தவிசாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
தேசிய சக்திகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சரத் வீரசேகர செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் மாகாண ஆளுநர்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர்கள் பலர் வீரசேகரவின் அரசியல் திட்டத்தில் அவருக்கு ஆதரவளிப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தற்போது உள்ளூரிலேயே மக்களைப் பயிற்றுவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சொல்வது பற்றி ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையினால் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராக இருந்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சில காலம் நெருக்கமாக இருந்துள்ளார்.
நாளை (02) நள்ளிரவு எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுவதால், நாளை நள்ளிரவில் இது மேற்கொள்ளப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
நீண்ட வார விடுமுறை காரணமாக எரிபொருள் விலை திருத்தம் நாளை வரை தாமதமாகியுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம் நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் 4ஆம் திகதி எரிவாயு விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் செய்த விலைத் திருத்தத்தில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கி 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவை தயார்படுத்துவது பொருத்தமானது என அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மேலும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும் என தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த உறுதிமொழிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடன்பாடும் தேவை எனவும், அதற்கமைய பிரேரணையை அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர்கள் குழுவும் யோசனை தெரிவித்துள்ளது.
புதிய கூட்டணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ராஜகிரியவில் உள்ள கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விசேட கலந்துரையாடல் நேற்றிரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு 07 இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் 30 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இது மிகவும் இரகசியமானது மற்றும் புதிய கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது பொஹொட்டுவவில் கடமையாற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் இதற்காக பிரசன்னமாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
எனவே, இந்த சந்திப்பை ரகசியமாக நடத்தவும், அங்கு பேசப்பட்ட விஷயங்களை வெளியிடாமல் இருக்கவும் ஆலோசித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான தருணத்தில் புதிய கூட்டணியின் செயற்பாடுகளை நிபந்தனையின்றி ஆதரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடியுள்ளனர்.
வியாழன் இரவு கொழும்பில் நடைபெற்ற சீன தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒரே மேசையில் அமர்ந்திருக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சீன மக்கள் குடியரசின் 74வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விழாவை ஏற்பாடு செய்தது. சீனத் தூதர் Qi Zhenhong தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் VIP பிரிவு, இந்த விருந்தினர்களுக்கு இடமளிக்கும் வகையில் இருக்கை ஏற்பாடுகளை கவனமாகத் திட்டமிட்டிருந்தது.
உயிருடன் இருக்கும் நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் - குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினரான கட்சியின் தலைமையகத்தில் உள்ள மகளிர் அமைப்பு அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட அதிகாரி வெளியேறியுள்ளதாக நெலும் மாவத்தை கட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட அலுவலகத்தின் இரண்டு அதிகாரிகள் அலுவலகத்திற்குச் சென்று அலுவலக அறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனைத்து கோப்புகளையும் கைப்பற்ற முயற்சித்துள்ளனர். மேலும் அவர் செய்யும் வேலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர்.
இதனை அடுத்து 'நான் யாருக்கும் சொல்ல மாட்டேன், எங்கேயும் போக மாட்டேன், போனால் சொல்லிவிட்டு போவேன்” என்று அந்த பெண் அதிகாரி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த பெண் மீண்டும் வர மாட்டேன் என்று கூறி சென்றார்.
தற்போது நெலும் மாவத்தை அலுவலகத்தில் உள்ள மகளிர் அமைப்பு அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியானது கடுமையான போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் அதிகம் உள்ள பிரதேசமாக அண்மையில் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கலந்து கொண்டு பேசிய கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 320 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் 64 பேர் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் 1,439 பேர் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முறையே 1,432, 960 மற்றும் 909 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்காக கொழும்பு மாநகர சபை விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இனங்காணப்பட்ட சகல சிறுவர்களும் சபையின் வைத்திய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பில் காணப்படும் போசாக்கு குறைபாடுள்ள சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்குவதற்கு சபை செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர். சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் (21.09.2023) திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.
குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.
இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த (23-09-2023) அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை இவர் தன்னுடைய பதவி விலகலை அறிவித்தபின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால் நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.
நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து தனுஷ்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
"தீர்ப்பு அனைத்தையும் கூறுகிறது" கடந்த பதினொரு மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தது. எனது முகாமையாளர், எனது வழக்கறிஞர்கள், குறிப்பாக முருகன் தங்கராசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு உதவிய அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும், எனது பெற்றோருக்கும் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிலருக்கும் நன்றி கூறுகிறேன். எல்லோரும் என்னை நம்பினார்கள், அது எனக்கு மிகவும் பெறுமதியான விடயம், எனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திரும்பி நாட்டுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.