பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கடத்திச் சென்ற 6 சந்தேக நபர்கள் தெமட்டகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொடை வேலுவனாராமயவுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்களை கடத்திய போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 22 மற்றும் 28 வயதுடையவர்கள் மற்றும் கொழும்பு 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.
கடத்தப்பட்ட பெண் வத்தளை, ஹெந்தலை, எட்டம்பொலவத்தை வீதியில் வசிப்பவர் எனவும், ஆண் மாகொல தெற்கில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் கொண்டு வரும்போது சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்தி விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை தானாக முன்வந்து பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று (26) தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொண்டு வந்த பிரேரணையை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த பிரேரணைக்கு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணையை முன்வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
சுங்க பிரிவில் பிடிபட்டு அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் சுகாதார கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும், 15-18 வயதுடைய பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்த நிகழ்ச்சித் தொடரை ஆரம்பிக்க முடியும் எனவும், இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான பாலியல் சுகாதாரக் கல்வி குறித்த குறைந்தபட்ச அறிவை வளர்க்க சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறைகள் தலையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இலங்கையின் சுகாதார சேவைகளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க உலக வங்கியின் விசேட பிரதிநிதிகளுடன் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் எதிர்வரும் மாதங்களில் தேசிய எரிபொருள் QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாங்கொடை ரந்தொம்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரியின் பிரதி அதிபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலப்பிட்டி மிகெட்டுவத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
இவர் பாதாள உலக தலைவரான கொஸ்கொட சுஜீயின் மருமகன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதி அதிபர் தர்மசோக வித்தியாலயத்தில் பணிபுரிந்து வரும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் உலகின் மிகப் பெரிய மாணிக்கக்கல் தொடர்பான மதிப்பீடுகளில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழு அல்லது பொது விவகாரங்களுக்கான குழுவில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை கையாண்ட விதம் அவர்களின் தொழில் கௌரவத்திற்கு கூட தகுதியானதல்ல என கோப் குழுவின் உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அங்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளரால் பத்து இலட்சம் பெறுமதியான மாணிக்கக்கல் விற்பனை செய்யப்படவில்லை எனவும், இவ்வாறான கொத்துக்கள் எங்கும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இப்படி ஒரு பொய்யான பாசாங்குக்கு காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அங்கு பதிலளித்த ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளர் அமல் தென்னகோன், மாணிக்கக் கொத்து தகுந்த அளவில் வெட்டப்பட்டு மெருகூட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்ட தொகை அதன் காப்புறுதி பெறுமதியே எனவும் குறிப்பிட்டார்.
புத்தளம் - தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தில்லையடி பாடசாலையொன்றில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது. இதன்போது, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டது.
சில மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் யோசணைக்கு ஆதரவு தெரிவித்த வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (25) கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான வாக்கெடுப்பு நேற்று(24) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இது கட்சியின் தீர்மானத்திற்கு எதிரானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவை புதிய நியமனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது கவுரவ பதவியாக வழங்கப்பட்டு மற்றையது ஊதியம் வழங்கப்படாமல் போக்குவரத்து வசதி மட்டும் செய்து தரப்படுகிறது.
தான் மேயராக பதவி வகித்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ கார் மற்றும் சாரதியை ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைத்து அதனை தனது போக்குவரத்து வசதிகளுக்கு பயன்படுத்துமாறும் முன்னாள் மேயர் ஜனாதிபதி அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, கார் மற்றும் அதன் முன்னாள் சாரதியை ஜனாதிபதி செயலகத்தில் இணைக்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று(25) முற்பகல் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நீதிமன்ற விசேட வைத்தியர்கள் குழுவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவரது உடல் இன்று(25) தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொரளை மயானத்திற்கு பொரளை பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.