web log free
July 27, 2024
kumar

kumar

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கோட்டை நீதவான் திலின கமகே இன்று திறந்த நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தன்மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கில் ஆஜராகியிருந்த போது அவர் குற்றவாளிக் கூண்டில் ஏறவில்லை என்பதே அதற்குக் காரணம்.

பின்னர் இரண்டாவது தடவையாக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் நீதிமன்றில் அழைக்கப்பட்ட அதேநேரம் அவர் குற்றவாளிக் கூண்டில் பிரவேசித்தார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கை மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். 

இந்த வழக்கை மார்ச் 13ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

30ஆம் திகதி அனைத்து துறைமுக தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இறுதிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் நிரோஷன கோரக்கன தெரிவித்தார். 

இந்தக் கூட்டுப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி கோட்டை  மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதும் கூட இந்த வரி திருத்தச் சட்டம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலுக்கும் தொழிற்சங்கங்களை அரசாங்கம் அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

துறைமுகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த கூட்டுப் போராட்டத்திற்கு இணங்கி மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கும், எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள மேலும் பல உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிடுகின்றார். 

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்வது தொடர் ராஜினாமாவின் முதல் கட்டம் என்று அவர் கூறுகிறார்.

இதன்படி, அவர்களை அந்தப் பதவிகளுக்குக் கொண்டு வந்த முதலாளிகள், அதன் ஏனைய சில உறுப்பினர்களை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எம்.பி. கூறினார். 

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதால், ஆணைக்குழுவை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலை ஒத்திவைக்க சில ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைகழகத்தின் நிர்வாகத்தை உடனடியாக அகற்றி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இதில் கலந்து கொண்ட ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட சாதாரண துறவற மாணவர்கள் குழு ஹோமாகம பிடிபன சந்திக்கு அருகில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலவா தம்மிக்க தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறும், தன்னிச்சையாக இரத்துச் செய்யப்பட்ட 39 மாணவர்களின் கல்வியை உடனடியாக மீட்டெடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நிர்வாகத்தை உடனடியாக அகற்றி, ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திற்கு ஊழலற்ற புதிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துமாறும், இணையவழிக் கல்வித் திட்டங்களை நிறுத்துமாறும், பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறும் கோரிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்குவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, அந்த நாட்களில் இலங்கை மின்சார சபை கோரும் மின்வெட்டுக்கு இடமளிக்க மாட்டோம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் நடைபெறும் உயர்தரப் பரீட்சைக்காக தொடர் மின்வெட்டை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி கூட்டம் இன்று (26) பிற்பகல் ஆரம்பமானது.

கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஆளும், எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நல்லிணக்கத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. எனினும், இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளவில்லை. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பங்குபற்றுவதாக அறிவித்திருந்தது. 

ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் தாம் கூட்டத்தில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், PLOTE எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கட்சி என்ற ரீதியில் தாம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ், உத்தர லங்கா சபாவ கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.

சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்தது.

மலையக தமிழர் பிரச்சினை பற்றி இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படாவிட்டால், அதில் ஏன் பங்கேற்க வேண்டும் என கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான செயற்பாட்டில், மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தாலும் ஜனாதிபதியிடமிருந்து அதிகாரபூர்வமான பதில் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கை குறித்து தமது கூட்டணி அதிருப்தியடைந்துள்ளதாகவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.

கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.

​அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.

 2022 ஜனவரி முதல் டிசெம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

 வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்லஸ் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவரது பதவி விலகல் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்வதால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுமா? என்பது தொடர்பில் அதன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேசப்பிரிய விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 104வது பிரிவை மேற்கோள்காட்டி அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்தாலும், அதனை பொருட்படுத்தாது செயற்படுவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, தான் பதவி விலகுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான தகவல்களுக்கு பதில் அளிக்க நேரத்தை செலவிடுவது கூட அர்த்தமற்றது என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரின் பதவி விலகல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக இருக்காது எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பி.எஸ்.எம். சால்ஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து   ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்தார்.

இதுவரை தமக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒரு உறுப்பினர் விலகுவது ஆணைக்குழு கூட்டத்திற்கு தேவையான முழுமைக்கு தடையாக இருக்காது எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் ,அனுமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி சில வெறுக்கத்தக்க சம்பவங்கள் வேட்பாளர்கள் தெரிவுகளில் போது இடம்பெற்றுள்ளதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் சேவை குறித்து எவ்விதத்திலும் கண்டு கொள்ளாமல் நாட்காலிகளை சூடாக்கிக்கொண்டிருந்த பழைய முகங்களை சில கட்சிகள் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கவுள்ளதாக பெரும்பாலான மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாம் தெரிவு செய்து அனுப்பும் வேட்பாளர் எப்படியானவர் என்பது குறித்த தெளிவுகள் அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ளன. அதாவது குறித்த நபர் உள்ளூராட்சி மன்றங்களுக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது அதையும் தாண்டி பாராளுமன்றத்துக்கோ செல்லும் வரையில், அவர் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்றவராகவே இருப்பார் என்பதில் சந்தேகங்களில்லை.

ஆனால் உள்ளே சென்ற பிறகு அவரின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களே இங்கு முக்கியமானவை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே மக்கள் சேவையில் தம்மை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

எதிர்கட்சி வரிசைகளில் இருந்தாலும் கூட மக்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்கின்றனர். விவாதங்களை முன்னெடுக்கின்றனர். மீண்டும் தேர்தல் வரும் போது தைரியமாக மக்கள் முன் சென்று வாக்கு கேட்கின்றனர்.

ஆனால் ஆளும் தரப்பிலிருந்து கொண்டு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உறுப்பினர்களில் அதிகமானோர் முதலில் தாம் கரையேறும் வழிகளையே பார்க்கின்றனர். மக்களைப் பற்றிய சிந்தனை அவர்களுக்கு அடுத்த தேர்தல் வரும் வரை தோன்றுவதில்லை. காரணம் அவர்கள் அதிகார பீடத்துக்கு சென்றதன் நோக்கம் அதுவல்ல.

அடுத்த தேர்தலில் தம்மால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் அவர்கள் இயன்ற வரை தமக்கும் தமது உறவினர்களுக்கும் சொத்துகளை சேர்த்து விட்டு பின்பு கட்சி பணிகளில் தம்மை இணைத்துக்கொள்வர். கட்சிகளின் தலைமைத்துவங்கள் இதை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் உறுப்பினர்கள் அடிக்கும் கொள்ளைகளில் அவர்களுக்கும் பங்கில்லாமலில்லை.

மக்களோடு மக்களாக அவர்கள் அருகிலிருந்து அரசியல் செய்யும் நிறுவனங்களாவே உள்ளூராட்சி சபைகள் விளங்குகின்றன. ஆனால் இப்போது சில உறுப்பினர்களின் செயற்பாடுகளால் அவை பாராளுமன்றம் அளவுக்கு மக்களிடமிருந்து தூரபோய்க் கொண்டிருக்கின்றன.

எவ்விதத்திலும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயது, தேடிப்பார்க்காது தமக்குரிய சலுகைகளை மாத்திரம் மாத்திரம் குறியாகக்கொண்டு சில உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களினதும் உறுப்பினர்களினதும் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மீதான நம்பிக்கைகளை இழக்கச்செய்துள்ளது.

அவர்களை மீண்டும் தெரிவு செய்யும் வகையில் சில கட்சித் தலைமைகள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர்களை இடம்பெறச்செய்துள்ளது.

மேலும் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட ஐந்து வருடங்களாக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் நாட்காலிகளை சூடாக்கிச் சென்றவர்களும் எவ்வித பிரச்சினைகளுமின்றி மீண்டும் போட்டி போட தயாராகி வருகின்றனர்.

வேட்பாளர்களைத் தெரிவு செய்ய பல கட்சிகள் சமூக ஊடகங்களில் விண்ணப்பங்களை கோரியிருந்தன. நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் விண்ணப்பிப்போர் எவ்வாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்த எந்த கரிசனைகளையும் எந்த கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அது குறித்த அக்கறையை இப்போதுள்ள கட்சிகளிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையோர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் வலம் வரும் போது, உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தால் என்ன என்ற மன ஆறுதல் தான் இவற்றுக்கெல்லாம் காரணம். தேசிய கட்சிகள் அவ்வாறான கொள்கைகளில் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஏன் அந்த வழியை பின்பற்ற வேண்டும்?

நேர்மையான அரசியலையும் ஜனநாயக பண்புகளையும் நேசிக்கும் அதே வேளை அதன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இளைஞர்களும் கள அரசியலில் ஈடுபடாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஜனரஞ்சக அரசியலை முன்னெடுக்கும் பாரம்பரிய கட்சிகள் இந்த தவறுகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் செய்கின்றன. இதன் காரணமாகவே சில கட்சிகளையும் உறுப்பினர்களையும் குற்றப்பரம்பரையாகவே மக்கள் நோக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.

தேர்தல்கள் மற்றும் வாக்களித்தல் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை தோன்றுவதற்கு இவையே பிரதான காரணிகள். மேலும் நல்லாட்சி எண்ணக்கருக்கள், அது தொடர்பான சிந்தனைகள் உருவாவதையும் இவ்வாறான செயற்பாடுகள் தடுக்கின்றன. அரசியல் நிர்வாக கட்டமைப்பில் உள்ளூராட்சி நிறுவனங்கள் கீழ் மட்டத்திலிருந்து மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய அமைப்புகள். இவற்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் கட்சித் தலைவர்களா அல்லது வாக்களிக்கும் மக்களா ?