இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 356 ரூபாவாக அமைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அமைந்துள்ளதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
டீசல் ஒரு லிட்டரின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 351 ரூபாவாக காணப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் விலை 356 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சுப்பர் டீசலின் புதிய விலை 431 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலையும் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 242 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 249 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை உயர்த்துவதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது போன்றவை பணம் கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(31) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரிவித்தார்.
தாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தலையீடும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.
வேலைநிறுத்தத்தின் மத்தியில் அத்தியாவசிய சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
"நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மாத்திரமன்றி மின்சார கட்டணம், நீர் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் உயர்ந்துள்ளது. மேலும் புதிது புதிதாக வரிகள் அறவிடப்படுகிறது.
எரிபொருள், கேஸ் விலை அதிகரித்துள்ளது. ஹோட்டல் உணவுகள் மற்றும் பேக்கரி உணவுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி அனைத்தும் விலை அதிகரித்திருக்கும் வேளையில் தொழிலாளர்களின் சம்பளம் மாத்திரம் அதிகரிக்காமல் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள அதிகரிப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அதன் பின்னர் எவ்வித சம்பள உயர்வும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் தனியார் துறை ஊழியர்கள் சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.
இதேபோல் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியும் அரசாங்கமும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரச ஊழியர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இணையாக பெருந்தோட்ட தொழிலாளர்களையும் போராட்டக் களத்தில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்" என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (1) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அன்றைய தினம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் மாதத்துக்கான உதவித்தொகை நவம்பரில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அஸ்வெசும வழங்க ரூ.850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக, பணம் பெறப்போகும் பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை, 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (30) அமைச்சரவையில் உரையாற்றியதுடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை அறிந்து மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில குழுக்கள் தமது அழுத்தம் காரணமாகவே சம்பளம் அதிகரிக்கப்பட்டதென கூற முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியினால் நேற்று அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்களை கொழும்பு மின்சார சபை தலைமையகத்திற்கு வரவழைத்து இதனை செய்யவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு கோரி அரச ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று பிற்பகல் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
20000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி அரச ஊழியர்கள் இன்று முதல் பல்வேறு தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், அது எவ்வளவு என்பதை அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு இன்று (30) வருகிறது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில் முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டனவா என பரிசீலிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என பிரதான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அச்சட்டமூலங்களின் உள்ளடக்கத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் பின்லாந்து, போலந்து, ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவினர் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.
சுமார் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அவர்கள், அக்காலப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
2020 ஜூன் மாதம் இறக்குமதி தடை விதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6969 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் 3809 மோட்டார் கார்கள் மற்றும் உதிரி வாகனங்கள், 2971 லொறிகள், பாரவூர்திகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், அம்புலன்ஸ் உள்ளிட்ட 189 சிறப்பு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதாவது 4348 வாகனங்கள் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது இறக்குமதி செய்யப்பட்டன.
அந்த ஆண்டில் 2,409 மோட்டார் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த வாகனங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டவை என சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பில் சுங்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சம்பந்தப்பட்ட பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பங்கு தொகை வழங்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதியின் காரணமாக 2018 ஆம் ஆண்டில் சுங்கத்துறைக்கு 187 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது அந்த வருடத்தில் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 வீதமாகும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, இந்த வருடம் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 1.5 வீதம் வாகன வரியாக ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.