கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை எரித்து நாசம் செய்தமை தொடர்பிலான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க ஆரம்பித்துள்ளது.
அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆரம்ப கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அழிக்கப்பட்ட அசையா சொத்துக்களுக்காக கடந்த அரசாங்கத்தின் கிட்டத்தட்ட 15 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட 72 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அழிக்கப்பட்ட சொத்து வீடுகள் மற்றும் பொருட்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பல சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. குழுக்கள் மூலம் உரிய அறிக்கைகள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடும் போது பெறுமதியற்ற விலைகளை வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இடிந்த கட்டிடங்களுக்கு இழப்பீடும், இரண்டாம் கட்டமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும்.
சில அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக பெருமளவிலான காப்புறுதி இழப்பீடுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் விசாரணையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அழிக்கப்பட்ட தனது சொத்துக்களுக்கான நட்டஈடு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், அதனை ஒரு குழுவினர் பெற்றுள்ளதாகவும் தமக்கு தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(18) மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் கூறினார்.
எவ்வாறாயினும் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை நடுக்கணக்கு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
5 பிள்ளைகளின் தாயான 80 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(17) காலை லிந்துலை - பம்பரகலை நடுக்கணக்கு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே குறித்த பெண் குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் பிரதேச மக்களால் லிந்துலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறான குளவிக் கொட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் தமக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டின் நிதி வங்குரோத்துக்கான காரணங்களை ஆராயும் பாராளுமன்றக் குழு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படுமாறு SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆற்றல் உள்ளவர்களையே சபாநாயகர் குழுவின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார் என்றார்.
“அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இவ்வாறான ஒரு தெரிவுக்குழு செயற்படுமானால், அது நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையையும் செய்யாது. நாடு திவாலானதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதனை நிறைவேற்றும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொறுப்புவாய்ந்த அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு உள்ளது” என்று காரியவசம் கூறினார்.
குழு சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை குழுவிற்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் முதிர்ச்சியடையாமல் நடந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்களின் வாழ்வில் விளையாடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத் தரப்பின் கோரிக்கையை அடுத்து இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினரும் இவ்விடயம் தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும் எம்.பி கூறினார்.
“எனினும், எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை குழுவுக்கு பரிந்துரைக்க ஒரு மாத காலம் தாமதம் செய்தனர். இந்த விவகாரம் நாடாளுமன்ற அலுவல் குழு கூட்டத்தில் பலமுறை எழுப்பப்பட்ட பின்னரே அவர்கள் தங்கள் வேட்பாளர்களை அனுப்பினர்,'' என்றார்.
கொழும்பு ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக கட்டிடங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகருக்கு மாற்றுவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்கு மேலதிகமாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, அமைச்சரவை செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய அலுவலகங்களும் கோட்டேக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பாதுகாப்பு அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க புராதன கட்டிடங்களை சுற்றுலா தலங்களாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பொலிஸ் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் பொலிஸ் பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்திய சம்பவத்திற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ எடுக்கும் போது பெண் சீருடை அணிந்திருந்ததாகவும், மற்றொரு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் அவரை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கான்ஸ்டபிள் தனது முன்னாள் காதலன் என்றும், தற்போது இருவருக்கும் இடையே அப்படி எந்த உறவும் இல்லை என்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் பொலீஸ் கூறியுள்ளார்.
மேலும் இந்த கான்ஸ்டபிள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாக கூறப்படும் நான்கு மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாயில் இருந்து சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 15ஆம் திகதி ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சிறுமிக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததுடன், மறுநாள் இந்த சுகவீனம் ஏற்பட்டதாக சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
இந்த சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நாடு தேடும் மாற்று அணி அல்ல என்றும் மக்கள் அதனை தற்போது உணர்ந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் ஜே.வி.பிக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 75 வருட கால சாபத்தை நாட்டில் ஆட்சியில் ஈடுபடாதவர்கள் போல் கூறி வருவதாக கூறினார்.
"சந்திரிகா பண்டாரநாயக்கா அரசில் அநுரகுமார அமைச்சரவையில் பதவி வகித்தார். ஐந்தாண்டுகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், பாதியிலேயே கைவிட்டனர். அநுரகுமார முகநூல் ஜனாதிபதி மட்டுமே. ஒரு தேநீர் கடை கூட நடத்த தெரியாத ஜே.வி.பி. எப்படி நாட்டை ஆளும்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதிலும் உள்ள மத ஸ்தலங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த மத ஸ்தலங்களின் சொத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான தகவல்கள் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யும் பணியுடன் இந்தத் தகவல் சேகரிப்பும் தொடங்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில், கிராம அதிகாரிகளின் எல்லைக்குள் இருக்கக்கூடிய மத இடங்களுக்கான அளவுகோல்களை தயார் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடையே ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணை மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு புலனாய்வு நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த 5 அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படுகிறது.
அந்த அமைப்புகள்
ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் முகமதியா (JASM),
ஸ்ரீ லங்கா தௌஹித் ஜமாத் (SLTJ),
அகில இலங்கை தௌஹீத் ஜமாத் (ACTJ),
சிலோன் தௌஹித் ஜமாத்
ஐக்கிய தௌஹீத் ஜமாத் (UTJ)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த ஐந்து அமைப்புகளையும் மற்ற ஆறு அமைப்புகளையும் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை 2021 ஏப்ரல் மாதம் வெளியிட்டார்.
புலனாய்வு அமைப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்பதாக அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், தடை நீக்கப்பட்ட பிறகும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் நிதி மற்றும் கல்வித் திட்டங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மீண்டும் தடையை அமுல்படுத்த வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.