web log free
July 27, 2024
kumar

kumar

அலரி மாளிகைக்கு முன்பாக 'No Deal Gama நோ டீல் கம' எனும் பெயரில் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மைனா கோ கம என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததை அடுத்து கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆட்சிக்கு வரும் அனைவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை எனவும், எந்தவொரு தலைவர் பதவியேற்றாலும், அவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்துவதற்கே இந்த ஆர்ப்பாட்டக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலத்தின் போது தமது நலன்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடுவதாகவும் மக்கள் நலன் குறித்து அவர்கள் கரிசனை கொள்வதில்லை எனவும் அவர் கூறினார்.

இரண்டு நாட்களில் உணவையும் எரிபொருளையும் வழங்கி தமது குறிக்கோளை திசை திருப்ப முடியாது எனவும், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார்.

நெருக்கடியை தீர்ப்பதற்காக வௌிநாடுகளிலிருந்து கடன்களை தொடர்ந்தும் பெறுவது எதிர்கால சந்ததியினரை பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலேயே பதவிக்கு வரும் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் வகையில் ‘No-Deal-Gama’ போராட்டக்களத்தை ஸ்தாபித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையின் 26 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அதன்படி, இந்த நாட்டின் பிரதமராக அதிக முறை பதவி வகித்த அரசியல்வாதியும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சித் தலைவரும், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட அரசியல் கட்சித் தலைவரும் பிரதமராக பதவியேற்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (12) மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெயின் விலை 108 டொலர் 8 சதமாக உயர்ந்தது, WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 30 சதமாக இருந்தது.

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானம் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து மகிந்தராஜபக்ச வெளியேறியதை தொடர்ந்து பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படகு மூலம் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ள பிள்ளையான் அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயற்சி செய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் அவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பிள்ளையான் மீது கொலை வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் புதிய பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்து இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் 14 ஆம் திகதி (2022-05-14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வு பெற்ற அதிகாரியாவார்.

2015-2019 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏகநாயக்க, இம்முறை நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

ஏகநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளில் 30 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய இவர், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்திலும் சேவையாற்றியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்ஸவும் நம்பும் தீர்வை நாட்டில் உள்ள எவராலும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ ​​முடியாது என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

“கோட்டாபயவை ரணில் நம்புவதும், ரணிலை கோட்டாபய நம்புவதும் தான் நடக்கும். அவர்கள் செய்வதை நாட்டின் குடிமக்கள் எவரும் நம்பமாட்டார்கள்” என அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் ஆணைக்கு செவிசாய்க்காமல் தீர்மானங்களை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

”ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஸக்களின் பாதுகாவலர், அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரத்தைப் பெறுகிறார். அதே சமயம் ராஜபக்ஸக்கள் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்கள். அதைத்தான் கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்,” என்று அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு யார் செவிசாய்க்கிறார்கள் என்பதில் தான் நெருக்கடிக்கு தீர்வு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

சூழ்ச்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தீர்மானங்களே எட்டப்பட்டுள்ளதாகவும் மாளிகைகளில் நடைபெறும் சதிகளின் மூலமாக மக்களின் உண்மையான எதிர்பார்ப்பும் அபிப்பிராயங்களும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கலாநிதி ஓமல்பே சோபித்த தேரருடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற ​சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.