web log free
October 18, 2024
kumar

kumar

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயன்படுத்திய ஆறு அரச வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக விவசாய அமைச்சு போக்குவரத்து பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது.

அமைச்சருக்கு இணைக்கப்பட்ட மூன்று வாகனங்களும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

விவசாய இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது ஜனாதிபதியினால் வேறு அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் மற்றும் அவரது பணியாளர்கள் அதே வாகனங்களுடன் புதிய அமைச்சுக்கு சென்றுள்ளனர்.

இந்த வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ள போதிலும் இதுவரையில் அவை கையளிக்கப்படவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் அரசியலில் இருந்து விலகியமையே இதற்குக் காரணம்.

தற்போது மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன உறுப்பினர்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் பாரியளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் விரைவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் அரசியலில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏமாற்றி விட்டதாக அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக விரக்தியடைந்துள்ள தானும் எனது உறுப்பினர்களும் டலஸ் அழகப்பெரும உட்பட ஏனைய கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் பாதையில் பிரவேசிப்போம் என கொடஹேவா கூறுகிறார்.

இணைய சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தம்மிக்க பெரேரா வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் தொகையை செலுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

'எமக்கு சூதாட்ட ராஜா வேண்டாம்', 'எங்களுக்கு குப்பை மேடு வேண்டாம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

எதிர்காலத்தில் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை பெறுவதற்கு மத்திய வங்கிக்கு செலுத்த ரூபாவை அச்சிட வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்காக எரிபொருளை இறக்குமதி செய்ய பணம் தேடுவது பெரும் சவாலாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

எரிபொருளை செலுத்துவதற்கு மத்திய வங்கி டொலர்களை ஒதுக்கியுள்ள போதிலும், அதனை செலுத்துவதற்கு CPC இன் நஷ்டம் காரணமாக பணத்தை அச்சிடுவதே ஒரே வழி என அவர் கூறுகிறார்.

தற்போது இலங்கைக்கு வரும் நான்கு எரிபொருள் தாங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 160 மில்லியன் டொலர்களை கண்டுபிடிப்பதே இன்றைய சவாலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் மோசமடையுமென இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் பணம் செலுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை காரணமாகவே இந்த நிலை ஏற்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்குரிய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பிரதேசங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்து மற்றுமொரு அமைச்சரை நியமித்ததை அடுத்து அவரது பேச்சு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய்,  தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன், தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளனர். 

இந்நிலையில், பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக்கொள்ள முடியாத தாய், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள  முயன்றுள்ளதாகவும் அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது போராடிக்கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. 

நாட்டில் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
 
ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இலங்னை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது மக்கள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்றுகாத்திருந்த நிலையில் பொலிஸார் மண்ணெண்ணை இன்று பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்ததனையடுத்து பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
 
ஹட்டன் பிரதேசத்தில் வாழும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணெண்ணை கிடைக்குமென காலை முதல் வரிசையில் காத்திருந்தனர். பல மணித்தியாலங்களுக்கு பின் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தனர்.
 
இது குறித்த எண்ணை முகவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர், மண்ணெண்ணை எப்போது வரும் டீசல் எப்போது வரும் அல்லது பெற்றோல் எப்போது வரும் என்று எங்களுக்கு முன்கூட்டி அறிவிப்பதில்லை.வரும் பொழுதான் எங்களுக்கு அறிவிக்கிறார்கள். அதனால் எங்களுக்கு உரிய நாளில் வாருங்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க முடியாது என்றார். 

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சரியான திட்டம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சரியான வேலைத்திட்டத்துடன் நாட்டைக் கட்டியெழுப்ப பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சிகள், சக்திகளை ஒன்றிணைத்து அவர்களின் கோரிக்கையுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என சம்பிக்க தெரிவித்துள்ளார். 

இணைய ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.