web log free
July 27, 2024
kumar

kumar

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  இஷாக் ரஹுமான் ஆகியோர் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்த இவர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இதன் போது அவர்கள் தெரிவித்தனர்.

மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ​​நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (13) இரவு வெளியிடப்பட்டது.

ஒரு நாட்டை நடத்துவதற்கு அரசாங்கம் இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனினும் ரணில் விக்கிரமசிங்க மீதும் நம்பிக்கை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு அவரது வரலாறு களம் அமைக்கவில்லை என்றார்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தபோது பின்பற்றிய நிகழ்ச்சி நிரலை மேலும் அமுல்படுத்தாது, நாடு மேலும் பாதாளத்திற்குச் செல்லாத வகையில் தொடர்ந்தும் செயற்பட்டால், நாட்டை சீர்குலைக்காத வகையில் அரசாங்கம் செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 12, புதுக்கடை வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி சேனக பெரேராவினால் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு இன்று (13) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்கமாட்டார் எனவும் , தேசத்தைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

“அனைத்து கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் என நம்புகிறோம். இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் அந்நிய கையிருப்பு வரலாற்றில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுள்ளது, அதேவேளையில் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் தவிக்கின்றனர். இந்த நெருக்கடியைத் தீர்த்து, மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியது இன்றியமையாதது” என்று ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ராஜபக்சக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் குறித்து சில வெளிநாடுகளும் நன்கொடை நிறுவனங்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளதால் அவர்கள் இலங்கைக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .

நாளை 14 ஆம் திகதி 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை மறுதினம் (15) வெசாக் பூரணையை முன்னிட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காலிமுகத்திடலுக்கு முன்பாகவும், அலரிமாளிகைக்கு முன்பாகவும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்  இன்று தனிநபர் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 136 (1) (a) இன் கீழ் சட்டத்தரணி சேனக பெரேராவால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சாமர ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு இன்று (13) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 140, 144, 146, 149, 150, 154, 157, 314, 315, 316, 343, 483, 486 ஆகிய பிரிவுகளின்படி சட்டவிரோதக் கூட்டத்தை நடத்துவதும் அதன் அங்கத்துவத்தை வைத்திருப்பதும் கலவரம் , பொது ஊழியரைத் தாக்குதல் மற்றும் இடையூறு செய்தல், பொதுமக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தைத் தூண்டுதல், கலவரத்தைத் தூண்டுதல், வேண்டுமென்றே கடுமையான உடல் காயம் செய்தல், கிரிமினல் வற்புறுத்தல், சித்திரவதை மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய குற்றங்கள் செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பு வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், குற்றவியல் சட்டத்தை மீறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு பிடியாணை அல்லது அழைப்பாணை பிறப்பிக்குமாறும் மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. 

இன்றைய தினம் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 343.79 புள்ளிகளாலும், S&P SL 20 - 139.56 புள்ளிகளாலும் அதிகரித்துள்ளது. இது 5.52% வளர்ச்சியாகும்.

அத்துடன், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் சுமார் 2.18 பில்லியன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்ற மறுநாள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.