இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காக சபைக்கு பெரும் செலவு ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என அமைச்சர் சுசில் ரணசிங்க கூறினார்.
ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், இந்த ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கும் நீர் கட்டண திருத்தம் எதனையும் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஜூலை முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான 06 மாத காலப்பகுதியில் கட்டண அதிகரிப்பு ஏதேனும் ஏற்படுமா என்பது குறித்து 'அத தெரண', வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவிடம் வினவியது,
அதற்கு பதில் வழங்கிய அமைச்சர், இந்த 6 மாத காலத்தில் 18% மின்சாரக் கட்டண அதிகரிப்பு மாத்திரமே ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு உண்மையில் நீர் சுத்திகரிப்பு பணிகளைப் பாதிப்பதில்லை.
மின்சாரக் கட்டண அதிகரிப்பே பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனினும், நீர் கட்டணத்தில் மின்சாரக் கட்டணத்தின் பங்கு 12% மாத்திரமேயாகும்.
எனவே, அந்த 12% அளவே 18% இனால் அதிகரித்துள்ளது. அது ஒரு அலகு நீருக்கு சுமார் 2.50 ரூபாய் போன்றதொரு தொகையாகும்.
இதனால், இந்த 6 மாத கால செலவீனம் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பெரும்பாலும் அடுத்த 6 மாதங்களுக்கும் நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படாமல் இருக்கவே வாய்ப்புள்ளது என்றார்.
நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆக அதிகரித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ‘லீசிங்’ முறையில் அரிசி வழங்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சியும் சில ஊடகங்களும் பரப்பும் தகவல்கள் உண்மையற்றவை என்றும், அரசின் உண்மையான நோக்கம் நெல் களஞ்சியங்களை காலி செய்து, அடுத்த அறுவடைக்காக விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதே என்றும் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த நெல் உற்பத்தி 5.03 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்ததாகவும், அது அரிசியாக மாற்றப்படும் போது சுமார் 3.2 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி கிடைக்கும் என்றும் கூறினார். நாட்டின் ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருப்பதால், தற்போது சுமார் 800,000 மெட்ரிக் டன் அரிசி உபரியாக இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
கடந்த காலத்தில் கீரி சம்பா உற்பத்தி 6 சதவீதமாகக் குறைந்ததை பயன்படுத்தி அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலையை 400 ரூபாய் வரை உயர்த்தியதாக அமைச்சர் நினைவூட்டினார். இதற்கு தீர்வாக அரசு தலையிட்டு ‘கீரி பொன்னி’ மற்றும் ‘GR11’ போன்ற மாற்று அரிசி வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் அந்த விலையை 230 முதல் 255 ரூபாய் வரை குறைக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“தற்போது எங்களுக்கு உள்ள முக்கிய சிக்கல், அடுத்த யால் பருவ அறுவடையை கொள்முதல் செய்ய களஞ்சியங்களில் போதிய இடம் இல்லாததே. அதனால், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வசமுள்ள 120,000 மெட்ரிக் டன் நெல்லில் பாதியை டெண்டர் மூலம் அரிசியாக மாற்றி, சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் வழியாக மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இது ‘லீசிங்’ திட்டமல்ல; களஞ்சியங்களை காலி செய்து புதிய அறுவடையை கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடாகும்,” என்று அமைச்சர் கூறினார்.
யால் பருவ அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் அரசு தலையிடும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதன்படி, ஒரு கிலோ நாடு நெல்லை 120 ரூபாய்க்கும், சம்பா நெல்லை 130 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல்லை 140 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரிசி உபரியை திறம்பட நிர்வகித்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதோடு, விவசாயிகளின் புதிய அறுவடைக்கு நியாயமான விலையை உறுதி செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என்பதால், இதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறும் அமைச்சர் வசந்த சமரசிங்க கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சியின் விமர்சனங்களை முன்வைத்து, அரசாங்கம் வழங்கக்கூடிய மிகப்பெரிய நிவாரணம் என்பது அரசு ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை கடனாக வழங்குவதே என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்சார மற்றும் எரிபொருள் விலை உயர்வு, விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கம் மக்களிடம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், மக்களின் பொருளாதார சுமையைக் குறைப்பதற்கான தெளிவான திட்டம் எதுவும் இல்லையெனவும் அவர் கூறினார். அதேவேளை, அரசு ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை கடனாக வழங்கும் திட்டத்தை விமர்சித்த அவர், “கடனை செலுத்த முடியாவிட்டால் வீட்டிலிருந்தே சோற்றுப் பானையைக் கூட எடுத்துச் செல்ல வேண்டிய நிலை வரும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், டெங்கு நோய் பரவல், மீனவர்களின் எரிபொருள் செலவு, விவசாயிகளின் நெல் விலை, தொழிற்சாலைகள் மூடப்படுவது, வேலைவாய்ப்பு இழப்பு, உயர்தரத் தேர்வு மாணவர்களின் மனஅழுத்தம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இன ஒற்றுமையைப் பாதிக்கும் வகையில் மக்கள் பிரிக்கப்படுவதாகவும், தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படுவதாகவும், பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணாமல் வரிச்சுமையை அதிகரிப்பதிலேயே அரசு கவனம் செலுத்துவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.
எதிர்காலத்தை முன்னிட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய, கிராம மக்களுடன் இணைந்து செயல்படும் புதிய அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் என்றும், இளைஞர்களை மையமாகக் கொண்ட வலுவான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அஸ்வெசும நலத்திட்டப் பயனாளிகளுக்கு விரைவில் தவணை முறையில் குறைந்த விலையில் அரிசி வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
அரசின் அரிசி களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல், அரிசியாக மாற்றப்பட்டு தேசிய சதொச என்ற புதிய பெயரின் கீழ் சந்தையில் விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த கட்டமாக, அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20 கிலோகிராம் அரிசியை தவணை முறையில் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அஸ்வெசும நலத்திட்டப் பயனாளிகளுக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. எனினும், அரசு ஊழியர்களை விட அஸ்வெசும பயனாளிகளுக்கு சலுகை விலையில் அரிசி வழங்கப்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் முறையைப் போலவே தவணை அடிப்படையில் அரிசிக்கான கட்டணத்தை செலுத்தும் வசதியையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இன்று (01) முதல் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறது.
ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள 28 முறைப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்க முறைப்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று (30) நிறைவடைந்தது.
இந்த ஆணைக்குழு இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இவர்களில் முன்னாள் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற அனைத்து நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களையும் விசாரிக்கும் நோக்கில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கிஹான் குலதுங்க தலைமையிலான முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.
கொழும்பு பொது அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வமாக சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், அபராதமின்றி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30) முடிவடைகிறது என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கத் தவறுகின்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அறிவிப்புகளும் https://ald.ciaboc.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகித வடிவிலான சமர்ப்பிப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது,
இதனிடையே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொது அதிகாரிகள் மற்றும் ஆண்டுதோறும் சொத்து விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய பிரிவினருக்கு இக்கட்டளை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே இலங்கை ஆசியாவின் வலிமையான நாடாக முன்னேற முடியும் என்றும், தற்போது அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் ஐக்கியதேசியகட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி, உலுவிட்டிகே பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
“ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். அவர் உடல்நலம் பெறும் வரை ஜி. எல். பீரிஸ் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இலங்கைக்கு நல்ல எதிர்காலம் தேவை. தற்போதைய அரசியலமைப்பின் வரம்பிற்குள் நாம் செல்லக்கூடிய அளவு சென்றுவிட்டோம். இதற்கு அப்பால் ஆசியாவின் வலிமையான நாடாக மாற வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவும் மற்ற அனைத்து கட்சித் தலைவர்களும் தற்போது ஒன்றிணைந்து வருகிறார்கள்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க, நாட்டை அனுபவமற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் மக்கள் அப்படியே செய்துவிட்டனர். இப்போது ஒரு கொசுவைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
இப்போது முழு நாட்டிற்கும் ‘அஸ்வெசும’ போன்ற நிவாரணம் தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தபோது, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டு விலையும் உயரவும், குறைந்தால் குறையவும் முடிந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதை புரிந்துகொள்ள முடியவில்லை.
IMF உடன் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த திட்டங்கள் தற்போது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தொடங்கிய திட்டத்தின்படி, 2025 டிசம்பர் 31 வரை அவர் ஆட்சியில் இருந்திருந்தால் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார். இந்த ஆண்டின் இறுதிவரை ஆட்சியில் தொடர்ந்திருந்தால் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கையும் நிறைவேற்றியிருப்பார். அதற்காகவே பொருளாதார அபிவிருத்தி சட்டத்தை அவர் கொண்டு வந்தார். சர்வதேச வர்த்தகத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.”
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாரிய அந்நியச் செலாவணி மோசடி தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துவதுடன், அதனுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகளை அரசின் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவான (COPF) முன் ஆஜர்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
COPF தலைவர் நோக்கி அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த நிதி மோசடி நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே அதிரவைக்கும் அளவுக்கு மிகக் கடுமையான சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் இந்த மோசடி, பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் மோசடி வலையமைப்பின் ஊடாக நடைபெற்றதாக ஜனாதிபதி முன்னதாக வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், ஆனந்த விஜேபால உறுதிப்படுத்திய தகவலின்படி, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 105 போலி நிறுவனங்கள் ஊடாக சட்டவிரோதமான 953 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.12.89 பில்லியன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி குற்றச்செயல் தொடர்பில் மத்திய வங்கியின் பங்கை ரவி கருணாநாயக்க கடுமையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார். 13 வர்த்தக வங்கிகளில் உள்ள 227 கணக்குகள் ஊடாக 26,108 மோசடி டெலிகிராபிக் பணப்பரிமாற்றங்கள் (TT) மூலம் இவ்வளவு பெரிய தொகை இரண்டு ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேறியபோதும், மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் துறையும் நிதி புலனாய்வு பிரிவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அமைப்புசார் தோல்வி குறித்து விளக்கம் பெற, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் மூத்த அதிகாரிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம், சுங்கத் துறை பணிப்பாளர் நாயகம், மேலும் மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் 13 வர்த்தக வங்கிகளின் பிரதான இணக்கப்பாட்டு (Compliance) அதிகாரிகளை உடனடியாக COPF குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கிரிப்டோகரன்சி போன்ற ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிதி கருவிகள் மூலம் நடைபெறும் வரி ஏய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி மோசடிகள் குறித்து தாம் 2025ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், அதனை மத்திய வங்கி போதுமான முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளாததே இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளது என்றும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் – லீற்றருக்கு ரூ. 20 குறைப்பு; புதிய விலை ரூ. 414
ஓட்டோ டீசல் – லீற்றருக்கு ரூ. 25 குறைப்பு; புதிய விலை ரூ. 382
95 ஒக்டேன் பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.