web log free
June 26, 2026
kumar

kumar

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் "மாட்டியா" எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதான குறித்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த இரண்டாயிரத்து இருபத்திரண்டாம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்திரண்டாம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து 'பஸ்பொட்டா' எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, மக்கள் எதிர்கொண்டு வரும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தீர்வு கூற வேண்டும் என்று எஸ்.எல்.பி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வந்து கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து முன்னறிவிப்பு வழங்குவது, “ஒரே மேசையிலிருந்து காவல்துறை, சிஐடி மற்றும் நீதிமன்றங்களை இயக்குபவரைப் போல” தோன்றுவதாக நாமல் கூறினார். இது ஒரு ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
“மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவது மிக எளிது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன என்பதையே அவர்கள் கேட்கிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.
 
விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய வழக்குகள் இருந்தால், அவை சட்டத்தின் படி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதைப் பற்றி அரசியல் மேடைகளில் கருத்துரைக்கக் கூடாது என்றும் நாமல் குறிப்பிட்டார்.
 
“வழக்குகள் இருந்தால், சட்டம் தனது வழியில் செல்லட்டும். எங்கள்மீது எந்த விசாரணை நடந்தாலும், எந்த சட்டநடவடிக்கையும் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம். நீதித்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது; எங்கும் ஓடிப்போகும் எண்ணமோ தேவையோ எங்களுக்கு இல்லை,” என்று அவர் கூறினார்.
 
அதேவேளை, அடுத்ததாக யார் கைது செய்யப்படுவார்கள் என்ற பேச்சில் ஜனாதிபதி கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் நாமல் குற்றஞ்சாட்டினார்.
 
“இலங்கை முழுவதும் குடும்பங்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுச் சுமையில் தத்தளித்து வருகின்றன. விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அடுத்ததாக யாரை கைக்கட்டில் காண விரும்புகிறார் என்பது அல்ல, தங்கள் குடும்பத்தை எப்படிப் பேணுவது என்பதுதான் மக்களின் கவலை,” என்று அவர் தெரிவித்தார்.
 
தூய்மையான ஆட்சியை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ளதாகவும் நாமல் சுட்டிக்காட்டினார். அமைச்சர்கள் கணக்கெடுப்பும் பொறுப்பூமும் இன்றி செல்வம் குவித்து சொத்துகள் அமைத்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
 
கைது மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து “கருத்துரையாளர்” போல நடந்து கொள்ளாமல், சாதாரண மக்களை பாதிக்கும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊழல் குறித்த மக்களின் அதிருப்தி ஆகியவற்றை முன்னுரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நாமல் வலியுறுத்தினார்.
 
“அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, சாதாரண மக்கள்மீது விழுந்துள்ள பொருளாதார அழுத்தம், மற்றும் ஊழல், இரட்டை நிலைப்பாடுகள் குறித்து எழுந்துள்ள மக்களின் கோபம் ஆகியவற்றிற்கே ஜனாதிபதி பதில் அளிக்க வேண்டும். இன்று நாட்டின் உண்மையான நெருக்கடி அதுவே,” என்று அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், குறித்த சந்தேகநபரின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையைத் தவிர வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், அத்துடன் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, கடந்த 2023 ஆம் ஆண்டு டுபாயில் வைத்து சந்தேகநபரின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் 50 கோடி ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.

பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் முன்பணமாக 12 கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்படும் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின், இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராகச் செயற்பட்ட வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2009-ல் உள்​நாட்டு போர் நடந்​த​போது விடு​தலைப் புலிகளிடம் இருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க நகைகள் நீதிமன்​றத்​தில் 3 மாதங்களுக்​குள் ஒப்​படைக்​கப்​படும் என பாதுகாப்பு ​பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

விடு​தலைப் புலிகள் தங்​களின் ஆயுதம் மற்​றும் இதர தளவாடங்களை வாங்​க தங்​கத்​தைப் பரி​மாறிக் கொண்​டனர்.

உள்​நாட்டு யுத்​தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்​த​ போது விடு​தலைப் புலிகள் சேகரித்து வைத்​திருந்த சுமார் 6 ஆயிரம் கிலோ தங்​கம் ராணுவத்​தால் கைப்​பற்​றப்​பட்​ட​தாக சொல்​லப்​படு​கிறது. ஆனால் அந்தத் தங்​கம் எங்கே என்ற விவரம் தெரிய​வில்​லை.

விடு​தலை புலிகளின் தங்​கம் புதைக்​கப்​பட்ட இடங்​களை பல ஆண்டுகளாக ராணுவம் தேடி வருகிறது. இந்​நிலை​யில் தமிழரசுக் கட்சி​யின் யாழ்ப்​பாணம் நாடாளு​மன்ற உறுப்​பினர் சிவ​ஞானம் ஸ்ரீதரன் விடு​தலை புலிகளிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்​கம் குறித்து ​நாடாளுமன்​றத்​தில் கேள்வி எழுப்பியிருந்​தார்.
 
இதற்கு பாது​காப்​புப் பிரதியமைச்​சர் அருண ஜயசேகர அளித்த பதில்:

விடு​தலைப் புலிகளிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க நகைகளை 3 மாத காலத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் ஒப்​படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்​களிட​மிருந்து தங்க நகைகள் எதை​யும் கைப்பற்​ற​வில்​லை. புலிகளின் களஞ்​சி​யச் சாலைகளில் இருந்து 150 கிலோ தங்கம் கைப்​பற்​றப்​பட்​டதாக கூறினார். 

 
 

அதேசம​யம், அந்த நகைகளின் உரிமை​யாளர்​ விவரம் தொடர்பாக எவ்​விதத் தகவல்​களும் கிடை​யாது. முன்​ன​தாக 2014-ல் அடை​யாளங்​கள் மற்​றும் ஆவணங்​களை உறு​திப்​படுத்​திய 2,015 தமிழர்களுக்கு அவர்​களது நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை  இனி வரும் காலங்களில் ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. 

இதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

2023 ஆம் ஆண்டில், 4 பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் மக்கள் குறித்த உதவித்தொகையை பெற்றனர். 

மேலும், ஏப்ரல் 2025 இல், நான்காவது பிரிவான இடைக்காலப் பிரிவில் இருந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. 

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், மூன்றாவது பிரிவான நலிவடைந்த மக்களில் 425,000 பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 2 பிரிவுகளில் உள்ள ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மீண்டும் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகையை பெற முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக தெரிவித்தார்.

அரசு வாழை மரத்தின் நாரிலிருந்து துணி உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்கு முன், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் ஆடைத் தொழிற்சாலைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய பொருளாதார சிக்கல்களால் இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“இந்நேரத்தில் மிகவும் அவசியமானது அந்த தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதே. வாழைநாரிலிருந்து துணி தயாரிப்பது குறித்து சிந்திப்பதற்கு முன், தற்போதுள்ள ஆடைத் தொழில்துறையை நிலைநிறுத்த அரசாங்கம் உடனடி தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

வாழை மரத்தின் நாரைப் பயன்படுத்தி துணி உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அண்மையில் வெளியிட்ட கருத்தை விமர்சித்தபோதே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுமார் இரண்டு வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான மொஹமட் ஃபசலினால், இந்த தாக்குதல் குறித்து இதுவரை வெளிவராத பல பரபரப்பான தகவல்கள் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுடனான பிரத்தியேக நேர்காணலொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மொஹமட் ஃபசலின் கூற்றுப்படி, இந்த தாக்குதலானது இந்தியாவின் ‘றோ’ (RAW) அமைப்பினால் வழிநடத்தப்பட்டதொன்றல்ல, மாறாக இது முழுமையாக அமெரிக்காவின் ஒரு திட்டமாகும்.

அபூஹின்’ என்ற போலி கதாபாத்திரம் மற்றும் தாக்குதல் திட்டம்

தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமைத் தொடர்புகொள்வதற்காக அமெரிக்க அதிகாரிகளினால் ‘அபூஹின்’ என்ற போலி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அபூஹின் என்பவர், முதலில் சஹ்ரானின் தம்பி ஊடாக அவரைத் தொடர்புகொண்டு, பின்னர் சஹ்ரானை இந்த தாக்குதலை நடத்துவதற்குத் தூண்டியுள்ளதாக ஃபசல் கருதுகிறார்.

இந்த நேர்காணலில் அவர் வெளியிட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க வெளிப்பாடு என்னவென்றால், சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் ஆரம்பத் திட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களைத் தாக்குவதாக இருக்கவில்லை என்பதாகும்.

“அவர்களின் முதன்மை இலக்கு பொசன் அல்லது வேறு ஏதேனும் ஒரு பௌர்ணமி (போயா) தினத்தில் நடத்தப்படும் பௌத்த பெரஹர (ஊர்வலம்) ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதாகவே இருந்தது” என்று அவர் கூறுகிறார்.

பௌத்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் நாட்டுக்குள் பெரும் கலவரத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது என ஃபசல் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14 தாக்குதல் முயற்சி மற்றும் சலவை இயந்திரம் (Washing Machine)

ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெற்ற புத்தாண்டு விழாவொன்றின் போதும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும், அந்த நேரத்தில் வெடிபொருட்கள் முறையாக உலரவில்லை என்ற காரணத்தினால் அந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வெடிபொருட்களை விரைவாக உலர வைப்பதற்காக சஹ்ரானின் குழுவினர் சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றைக் கூட கொள்வனவு செய்திருந்ததாகவும், தாக்குதலுக்கு முன்னர் குண்டுகளை ஏற்றிச் சென்ற லொறியிலும் இந்த சலவை இயந்திரம் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

அரசியல் பின்னணி மற்றும் இறுதி நோக்கம்

இந்த தாக்குதலின் இறுதி நோக்கம், அன்றைய காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்து, பாதுகாப்புத் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒரு தலைவரை ஆட்சிக்குக் கொண்டு வருவதாகும் என ஃபசல் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்குத் தேவையான பின்னணி இந்த தாக்குதலின் மூலமே உருவாக்கப்பட்டதாகவும், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் ஆவணங்களில் உள்ள சிக்கல் நிலைமைகள் குறித்தும் ஃபசல் இதன்போது கருத்துக்களை முன்வைத்தார்.

சந்தேக நபர்களுக்கான நிதி உதவி மற்றும் தற்போதைய நிலைப்பாடு

தற்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்கள் 24 பேரில் பெரும்பான்மையானவர்கள் நிரபராதிகள் என தான் நம்புவதாகவும், அவர்களுக்கான சட்டத்தரணி கட்டணங்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பராமரிப்புச் செலவுகளைத் தான் தனிப்பட்ட ரீதியில் வழங்கி வருவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக இதுவரையில் தான் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தைச் செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநீதிக்குள்ளாகியுள்ள முஸ்லிம் மக்களுக்காகத் தான் குரல் கொடுப்பதாகவும், உண்மையான சூத்திரதாரிகள் மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கும் ஃபசல், இந்த விடயங்கள் குறித்து சான்றுகளுடன் எந்தவொரு இடத்திலும் விளக்கமளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (22) 31வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில், மொத்தமாக 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 390 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் மட்டும் மேலும் 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி. நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 03 என்புக்கூடுகள் ஒரே வரிசையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் 09 என்புத் தொகுதிகள் ஒழுங்கற்ற முறையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் உள்ள சமகி ஜன பலவேகய ஆதரவாளர்கள் அனைவரும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பம் கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தானி கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நடைபெற்ற கண்டி மாவட்ட சமகி ஜன பலவேகயின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், சமகி ஜன பலவேகய எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இணைந்து போட்டியிட்டால், அந்தத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையையும் சமிந்தானி கிரியெல்ல வெளிப்படுத்தினார்.

உலக கச்சா எண்ணெய் சந்தையில் விலைகள் கணிசமாகக் குறைந்திருந்தாலும், அதன் பயனை இலங்கை நுகர்வோருக்கு உடனடியாக வழங்க முடியாது என்று அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவிய போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் ஆரம்பகட்ட உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று மாதங்களில் பதிவான மிகக் குறைந்த மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும், இலங்கை மாதாந்திர கொள்வனவு ஒப்பந்தங்களின் அடிப்படையில் எரிபொருளை இறக்குமதி செய்வதால், உலக சந்தை விலை குறைவின் பயன் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதிய கொள்வனவுகளில்தான் கிடைக்கும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், QR குறியீட்டு (QR Code) முறைப்படி எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலையை நிலையான நிலையில் பேணுவதற்காக, கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையை குறிப்பிட்ட அமெரிக்க டொலர் வரம்பிற்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகார சபையால் ரூ. 47 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர், எரிபொருள் மானியத்திற்காக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரூ. 19 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், மே மற்றும் ஜூன் மாதங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜனக ராஜகருணா, கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்ட பல்வேறு எரிபொருள் சலுகைகள் காரணமாக கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 5 பில்லியன் (500 கோடி ரூபாய்) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே பொதுமக்களுக்கு கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் எரிபொருள் விலையை மேலும் குறைத்தால், தற்போது வழங்கப்படும் சலுகைகளைக் கூட தொடர முடியாத அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் மற்றும் பிற பெற்றோலியப் பொருட்களுக்கும் இதே நிலைமை பொருந்துவதால், எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Page 1 of 651
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd