அர்ச்சுனா Mp காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் அர்ச்சுனாவுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது அர்ச்சுனா துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சின் இணையதளத்தில் ஹேக்கர்கள் நுழைந்து மோசடி நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தை முன்னிட்டு, தங்களது அரசாங்கத்தை முந்தைய அரசுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடுவது நியாயமல்ல என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கி மோசடி விவகாரத்தில் விதிமுறைகளை மாற்றி நேரடியாக உத்தரவுகள் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், தற்போதைய அரசு அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அவர் சவால் விடுத்தார்.
மேலும், எதிர்க்கட்சி தவறான குற்றச்சாட்டுகள் மூலம் அரசாங்கத்தை களங்கப்படுத்த முயற்சித்தாலும் அது வெற்றியடையாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நிலக்கரி மோசடி மற்றும் அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் அளவிலான நிதி மோசடி குறித்தும் விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்காக எதிர்க்கட்சியினரிடம் உள்ள தகவல்களையும் வழங்கலாம் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
NPP அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களிடம் நான் சொல்ல விரும்புவது, களனி விஹாரைக்கு சென்று பாவத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பதுதான்…” என்று அவர் கூறினார்.
ஒரு நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய விசேட சோதனையில் சுமார் 110 கிலோ ‘குஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ கைப்பற்றப்பட்டது.
பயணப் பொதிகளில் மறைவு அறைகள் அமைத்து, பாடசாலை பொருட்கள் மற்றும் இனிப்புகளுக்குள் போதைப்பொருட்கள் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குச் சென்றிருந்தனர். வெளிநாட்டில் தங்கியிருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.
இவர்கள் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த உயர்கல்வி பயிலும் இளம் பிக்குகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விமான நிலைய வரலாற்றில் இத்தகைய பெரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றலும், பிக்குகள் குழு தொடர்பான கைது நடவடிக்கையும் முதன்முறையாக பதிவாகியுள்ளது.
முன்னாள் ஆட்சியாளர்கள் தவறு செய்ததாகக் கூறி மக்கள் இம்முறை புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்தாலும் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி ஊழல் செய்யும் குழுவொன்று அதிகாரத்திற்கு வந்துள்ளதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பொருளாதாரக் களஞ்சியத்திலிருந்து அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், அதன் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சில கீழ்மட்ட அதிகாரிகள்மீது சுமத்தி அரசு தப்பிக்க முயன்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டத்தை சமமாக அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசுக்கு அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும், அவ்வாறு உண்மையாகச் செயல்பட்டால் அரசில் உள்ள பலர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுப் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்பவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்ற பொதுமக்கள் புகார்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பொலிஸாரும் தேசிய போக்குவரத்து ஆணையமும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி பணம் வசூலிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எந்த பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் அல்லது நடத்துனர் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்கவும் பெறவும் அனுமதி இல்லை என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்கப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் அந்த தொகையை செலுத்த வேண்டாம் என பயணிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து உடனடியாக 118 அல்லது 119 என்ற தொலைபேசி எண்களின் மூலம் புகார் அளிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்திராஜபக்ஷவை கைது செய்யத் தயாராக உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
அந்த தகவல்களின் படி, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்பு கொண்டபோது SLPP கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாவது, ஷிராந்தி ராஜபக்ச அவர்களுக்கு இதுவரை CID மூலம் எந்த அழைப்பும் வழங்கப்படவில்லை என்றார்.
மேலும், அவரை கைது செய்யும் வகையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
வாகன உரிமையாளரின் பெயரை குறிப்பிடும் வகையில் பதிவு இலக்கத் தகடு வழங்கும் முறையை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
புதிய வாகனங்களுக்கு நிலையான பதிவு இலக்கத் தகடு இந்த ஆண்டு மே மாத இறுதியிலிருந்து வழங்க முடியும் என்றும் அந்த துறை குறிப்பிட்டுள்ளது.
அரசின் நிதி தொடர்பான குழுவிற்கு மோட்டார் போக்குவரத்து துறை அதிகாரிகள் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
வாகன உரிமையாளரின் பெயருடன் பதிவு இலக்கத் தகடு வழங்குவது குறித்து மோட்டார் போக்குவரத்து துறையின் ஆணையாளர் பிரியந்த திசாநாயக்க கூறியதாவது:
“முடியும் சர். அதை நாங்கள் செய்ய முடியும். உண்மையில் அந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். சிஸ்டத்தை அப்டேட் செய்த உடன், இப்படியான ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்க எதிர்பார்க்கிறோம்.”
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை கண்டறியவும் அத்துடன் அந்த நிதியை மீள் கையகப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பில் தரவு மாற்றம் மேற்கொள்ளப்பட்டு அதனைப் பயன்படுத்தியே மேற்படி நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இவ்வாறான சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி ஊடக சந்திப்பில் அது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர்,
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் பிரவேசித்து சைபர் தாக்குதலை மேற்கொண்டு மோசடிக்காரர்கள் முன்னெடுத்துள்ள திருட்டு தொடர்பில் பல்வேறு வழிகளிலும் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய கடன் மறு சீரமைப்பு செயற்பாடுகளில் தொழில்நுட்ப மட்டும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி சைபர் தாக்குதல் திருட்டு தொடர்பில் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய பிரிவினருக்கும் நிதியமைச்சு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை மேற்கொண்டு இனம் காணப்பட்டுள்ள அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதி பரிமாற்றத்தின ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் நிதியை இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நிலையில் மூன்றாம் தரப்பினரால் அது மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேற்படி நிதி வழங்கப்பட வேண்டிய நிறுவனத்துடன் தற்போது அரசாங்கம் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன் அது தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி சைபர் மோசடிக்காரர்கள் நிதியமைச்சின் கடன் முகாமைத்துவ திணைக்கள கணினி கட்டமைப்பில் பிரவேசித்து நிதி மோசடியை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் தெரிய வந்ததையடுத்து அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அந்த அறிவுறுத்தலுக்கு மேலதிகமாக நிதியமைச்சினால் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த வருடத்திலும் இதுபோன்ற மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இனங்காணப்பட்டு அதனுடன் சம்பந்தப்பட்ட நான்கு பேர் சேவையிலி ருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 2026 ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பான நடவடிக்கைகளின் போதான தகவல்களின் அடிப்படையில் அது விடயம் வெளிப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் உள்ளக ரீதியான ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் பிரதிபலனாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் நால்வருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை நிதியமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.