web log free
April 19, 2024
kumar

kumar

இராணுவ சேவையில் இருந்து சட்டரீதியாக வெளியேற இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நீண்ட காலமாக விடுப்பு இன்றி பணிக்கு வருகை தராத உறுப்பினர்களுக்கு 2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 2, 2024 அன்று அல்லது அதற்கு முன் விடுமுறை இல்லாமல் பணிக்கு வராத அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் பின்வரும் ஆவணங்களுடன் அந்தந்த படைப்பிரிவு மையத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டும்.

ஏனைய ஒழுக்காற்று நடவடிக்கைகளில் ஈடுபடாத மற்றும் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையை விட்டு வெளியேறாமல் வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீள் வருகை இன்றி இந்த பொது மன்னிப்புக் காலத்தில் சட்டப்பூர்வமாக சேவையை விட்டு வெளியேறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

1. இராணுவ அடையாள அட்டை (இராணுவ அடையாள அட்டையில் சமீபத்திய பொலிஸ் அறிக்கையின் நகல் இல்லை என்றால்)

2. தேசிய அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தின் நகல்.

3. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் நகல்.

4. கடைசியாக பெறப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் ஊதியச் சீட்டின் நகல் (ஏதேனும் இருந்தால்) சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவை தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க அந்த மாகாண மகாசங்கரத்னம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் நாட்களில் எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் இந்தக் கோரிக்கையை விடுக்க உள்ளதாக ஆளுநர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அந்த மாகாணத்தில் மிகச் சிறப்பாகச் செயற்படுவதால், அவர் தொடர்ந்தும் அந்த மாகாணத்தில் சேவையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்பது மகா சங்கரத்னவின் கருத்தாகும்.

எனினும் இதுவரையில் இடமாற்றம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழி போராட்டமொன்று நாளை நடைபெற உள்ளது. 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நாளை காலை 10 மணி முதல் அறவழி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு வருடத்திற்கு மேலாக தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்காது அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் கம்பனிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இந்த அறவழி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள அனுமதி உரிமம் பெற்ற முன்னணி வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, அண்மையில் கொழும்பிலுள்ள ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற LankaPay Technnovation Awards 2024 விருதுகள் நிகழ்வில், மதிப்புமிக்க பல விருதுகளை வென்று மகத்துவத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்தும் சிறப்பாக வெளிக்காண்பித்துள்ளது.

வங்கித் துறையில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டாடிய இந்நிகழ்வில், தலைநிமிர்ந்து நின்ற மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை வழங்கும் தனது அர்ப்பணிப்பை சிறப்பாகக் காண்பித்துள்ளது.  

இணையம் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகளுக்கு அரச வங்கிகள் பிரிவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுக்கான தங்க விருது, வாடிக்கையாளர் சௌகரியத்தில் மகத்துவம், ‘A’ பிரிவில் நிதியியல் உள்ளடக்கம் மற்றும் ‘A’ பிரிவில் வருடத்தின் மிகச் சிறந்த Common ATM Enabler ஆகியவற்றுக்கான சிறப்பு விருதுகள் ஆகியன மக்கள் வங்கி வென்றுள்ள விருதுகளில் அடங்கியுள்ளன.    

புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முயற்சிகள் மூலமாக வங்கிச்சேவை கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் மக்கள் வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பை இவ்விருதுகள் காண்பிக்கின்றன. 

மக்கள் வங்கியின் புதுமையான மொபைல் வங்கிச்சேவைத் தீர்வான. People’s Wave Mobile App  என்பது சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 2017 ஆம் ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இதனை டவுண்லோட் செய்துள்ளதுடன், இலங்கையில் மிகவும் நாடப்படுகின்ற தனிநபர் மொபைல் வங்கிச்சேவை செயலிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

வங்கியின் மத்திய தொழில்நுட்ப கட்டமைப்புடன் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ள People’s Wave Mobile Appஆனது கணக்கு மீதி விசாரணைகள், கடன்கள், கடனட்டைகள், பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், நிதிப் பரிமாற்றங்கள், மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பான விபரங்கள், அடகு வைத்தல் தொடர்பான விசாரணைகள் மற்றும் பல சேவைகளை தொலைவியக்க முறையில் அடைந்து கொள்ளக்கூடிய வகையில் விரிவான வங்கிச்சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.   

இவ்விருதை வென்றுள்ளமை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச அவர்கள் கருத்து வெளியிடுகையில்,

“LankaPay Technnovation Awards 2024 நிகழ்வில் மதிப்புமிக்க இவ்விருதுகளை வென்றுள்ளமை எமக்கு மிகவும் பெருமையளிக்கின்றது. மகத்துவத்தை நோக்கிய அயராத முயற்சிகள் மற்றும் பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தின் அனுகூலத்தை பயன்படுத்துவதில் எமது அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இவை சான்றுபகர்கின்றன.

புத்தாக்கத்தின் எல்லைகளை தொடர்ந்தும் விரிவுபடுத்தி, ஒப்பற்ற வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இவ்விருதுகள் எமக்கு உந்துசக்தியளிக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.  

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“LankaPay Technnovation Awards 2024  விருதுகள் நிகழ்வில் நாம் ஈட்டியுள்ள வெற்றி, வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தி, நிதியியல் உள்ளடக்கத்திற்கு வழிவகுப்பதற்கு புத்தாக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. எமது தீர்வுகள் எந்த அளவுக்கு நாடெங்கிலுமுள்ள பயனர்களால் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கு இந்த விருதுகள் சான்றுபகர்கின்றன,” என்று குறிப்பிட்டார்.   

சௌகரியம் மற்றும் இலகுவில் அடையக்கூடிய வசதி ஆகியவற்றின் கலங்கரைவிளக்கமாக People’s Wave Mobile App திகழ்ந்து வருவதுடன், வாடிக்கையாளர்கள் தமது வீடுகளிலிருந்து அல்லது வேறு எங்கிருந்தும் 50 க்கும் மேற்பட்ட பல்வகைப்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இது இடமளிக்கின்றது. 2.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இதனை டவுண்லோட் செய்துள்ளதுடன், இன்னும் பலர் தொடர்ந்தும் செய்து வருகின்ற நிலையில், இலங்கை எங்கிலும் நிதியியல் உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை வளர்ப்பதில் மக்கள் வங்கியின் அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றது.   

வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு சான்றாக, வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் நிதியியல் உள்ளடக்கத்தில் மகத்துவம் ஆகியவற்றுக்கான சிறப்பு விருதுகளையும் மக்கள் வங்கி பெற்றுள்ளது. சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வங்கிச் சேவைகளை இன்னும் கூடுதலானவர்கள் அடையப்பெறும் வழிமுறையிலும், பயனர் நேயம் மிக்கதாகவும் வழங்குவதில் மக்கள் வங்கியின் முயற்சிகளை இவ்விருதுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

இலங்கை எங்கிலும் நிதியியல் உள்ளடக்கம் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தனது இலக்கில் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. அதன் புத்தாக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மீதான ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றினூடாக வங்கிச்சேவை தொழிற்துறையில் மகத்துவத்தின் தரஒப்பீட்டு நியமங்களை வங்கி தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழங்கிய உத்தரவை விமர்சித்து நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

ஓமான் வளைகுடாவில் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்த இலங்கையர்களில் ஐவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மற்றையவர்கள் நலமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஓமான் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசர படையினரால் நேற்று மீட்கப்பட்டனர்.

குக் தீவுகளின்( Cook Islands) கொடியுடன் எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பல், ஈரானின் தெற்கு நகரமான ஜாஸ்கில் (Jask) இருந்து சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் கவிழ்ந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த மாத இறுதியில் பல ஆளுநர்களை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி தற்போது வடமேல் மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரால் வெற்றிடமாகவுள்ள வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தென் மாகாண ஆளுநராக கடமையாற்றி வரும் வில்லி கமகே இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்சி யாப்பிற்கமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிடம் வினவிய போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், சட்டத்தரணியூடாக தமது ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

நாளை(18) இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பிலும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனை தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும நேற்று (16) காலமானார்.

இறக்கும் போது 64 வயதான தெவரப்பெருவின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என மருமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித குமார தெவரப்பெரும இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒரு புரட்சிகர பாத்திரம் ஆவார். 

முப்பது வருடங்களுக்கும் மேலாக உயிருக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையில் தமது உயிரைப் பாதுகாத்து வந்த 5 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அப்புறப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து உயிருக்கு மேலும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டமை வருத்தமளிப்பதாக மட்டக்களப்பு மங்கலாராமய அம்பிட்டியே சுமண தேரர் தெரிவித்துள்ளார். 

பெப்ரவரி 23, 2023 அன்று, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருந்து தப்பினேன். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது,  பாதுகாத்த அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களையும் அகற்றிய பின்னர் எனது உயிருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், பின்னர் அனைத்து உயர் அதிகாரிகளும் அந்த நபர்களை நீக்கிய பாதுகாப்புப் படையினரே பொறுப்பேற்க வேண்டும் என சுமண தேரர் தெரிவித்துள்ளார்.

முப்பது வருட கொடூர யுத்தத்தின் போது எல்.ரீ.ரீ.ஈ. கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதிகளுடன் மோதுண்டு சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்றிய தம்மைப் பாதுகாத்து வந்த சிவில் பாதுகாப்புப் படையினர் திடீரென அகற்றியமை தனது வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்பிட்டிய சுமண தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் காணிப்பிரச்சினைக்கு தாம் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களாலும், அரசியல் சதிகாரர்களாலும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், பொலிஸில் எத்தனை முறைப்பாடுகள் செய்தாலும் பொருட்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வேளையில் தம்மைப் பாதுகாத்து வந்த உத்தியோகத்தர்களை நீக்குவது வேதனையான விடயம் எனவும், இது தொடர்பில் கவனம் செலுத்தி மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அம்பிட்டிய சுமண தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Page 1 of 423