web log free
May 09, 2026
kumar

kumar

கபில சந்திரசேன தொடர்பான சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தற்போதைய அரசாங்கத்துக்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


“எனக்கு தனிப்பட்ட முறையில் பார்த்தால், இப்போது இந்த நாட்டில் வாழவே பயமாக இருக்கிறது. இல்லையெனில் ஒருவரை முடித்துவிடுகிறார்கள், அல்லது முடிக்க ஏற்ற சூழலை உருவாக்குகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையை 1988/89 காலப்பகுதியின் அச்சுறுத்தல் சூழலுடன் ஒப்பிட்ட அவர், “நாங்கள் இதைப் பற்றித்தான் மக்களிடம் கூறினோம். 88/89 காலத்தில் நடந்தவற்றை மக்களுக்கு நினைவூட்டினோம். ஆனால் அனைத்தையும் மறந்து மக்கள் வாக்களித்தார்கள்” என்றும் கூறினார்.

இதுவரை பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ, தற்போது வத்தளை தொகுதியை மையமாகக் கொண்டு தனது அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கும் நிலையில், மதவாதத்தை தூண்டும் வகையிலான பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1960ஆம் ஆண்டு பாடசாலைகளை அரசுடமையாக்கிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் அரசிற்கு ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகளில், அதற்குரிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்களையே அதிபர்களாக நியமிக்க வேண்டும் என்ற எந்த சட்டப் பிரிவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், வத்தளை நாயக்ககந்த யஹபத் எடேராகே மகளிர் மகா வித்தியாலயத்திற்கு கத்தோலிக்கர் அல்லாத ஒருவரை அதிபராக நியமித்துள்ளதாக கூறி, ஹரின் தவறான தகவல்களை பரப்பி மத அடிப்படையிலான கருத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார் எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை ஹரீன் பெர்னாண்டோ கடந்த மே 06ஆம் திகதி N. M. Perera நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த பாடசாலையின் அதிபர் வெற்றிடத்திற்காக முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகுதிகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அந்த அதிபர் 2026 மார்ச் 12ஆம் திகதி நியமிக்கப்பட்டதாகவும் ஜோசப் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

SriLankan Airlines⁠ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அவரது கொல்பிட்டி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இது தற்கொலை என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

Kapila Chandrasena இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையில் முக்கியமான நபராக அறியப்பட்டவர். இவர் SriLankan Airlines⁠ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) ஆக பணியாற்றினார்.

அதற்கு முன்பு அவர் இலங்கை விமானப்படையிலும் சேவை செய்திருந்தார். பின்னர் சிவில் விமான சேவை மற்றும் விமான நிர்வாக துறைகளில் உயர்ந்த பதவிகளில் செயல்பட்டார்.

அவரது காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம், நிதி இழப்புகள் மற்றும் சர்ச்சைக்குரிய விமான கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பாக பல விமர்சனங்களும் விசாரணைகளும் இடம்பெற்றன.

குறிப்பாக Airbus ஒப்பந்த விவகாரம் காரணமாக அவரது பெயர் அதிகமாக செய்திகளில் பேசப்பட்டது.

இப்போது அவரது மரணம் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா, தாம் அரசாங்கத்துடன் இணையத் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் வதந்திகளை கடுமையாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தனது அரசியல் செயல்பாடுகளை தவறாகப் புரிந்து கொண்டு, தனது அரசியல் எதிர்காலம் குறித்து தேவையற்ற வதந்திகளை சில தரப்பினர் பரப்ப முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தம்முடன் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ள முயற்சிப்பது நேர்மறையான விடயமாக இருந்தாலும், தாம் எப்போதும் சுயாதீனமான அரசியல் அணுகுமுறையையே பின்பற்றி வருவதாக அவர் வலியுறுத்தினார்.

“சரி என்றால் சரி என்றும், தவறு என்றால் தவறு என்றும் வெளிப்படையாகக் கூறுவதே என் அரசியல் கொள்கை” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக தாம் செயல்படும் விதம் குறித்து சிலர் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தக் குழுவின் நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து செல்வது சில தரப்பினருக்கு சிரமமாக இருப்பதாகவும், அதுவும் இத்தகைய வதந்திகள் உருவாக காரணமாக இருக்கலாம் என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள, 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொகுசு மாளிகை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது பாரிய விசாரணையை ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களில் யோசித ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி சேவையின் உத்தியோகபூர்வ தலைமையகமாகவும் இயங்கி வந்த இடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரி லூட்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரிலேயே ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அது முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவின் பிறப்புச் சான்றிதழில் உள்ள உண்மையான பெயராகும் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்சவுக்காக, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த வீடு, மஹிந்த ஜனாதிபதியான பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் முழுமையான சொந்தமாக மாறியுள்ளது.

எனினும், 40 கோடி மதிப்புள்ள இந்த காணி வெறும் 3.5 கோடி ரூபாய் என்ற மிகக் குறைந்த மதிப்பில் கொள்வனவு செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு பெற்றார் என்று லஞ்ச ஊழல் ஆணைக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு ஷிரந்தியிடம் இதுவரை முறையான விளக்கம் கிடைக்கவில்லை.

இந்தச் சொத்துக்கான உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தவரும், தனது முன்னிலையில் எவ்வித பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் மகன், தொழிலதிபர் பிரபாத் நாணயக்காரவிடம் பணம் கொடுத்து இதனை வாங்கிப் பின்னர் தன்னிடம் ஒப்படைத்ததாக ஷிரந்தி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மவுண்ட் லவினியா பொலிஸ் தலைமையகத்தின் கொடுப்பனவு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் காவலர் ஒருவர், பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி தொடர்பான பணிகளை மேற்கொண்டிருந்த காலத்தில், குறித்த காவலர் ரூ. 35,40,415 தொகையை மோசடியாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொது சொத்து சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியாவின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு (CCIB) இதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி இன்று (07) வியாழக்கிழமை இலங்கை வருகிறார்.

இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை உள்ளடக்கியதாக அமையவுள்ள இவ்விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வியட்நாம் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையின் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்நாம் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் கலாச்சார ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் இனத்துவ மற்றும் சமய விவகார அமைச்சுக்கும் இடையில் சமய அபிவிருத்தி, சமய மாணவர் நலனோம்புகை, சமய நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

நாட்டில் சட்டத்திற்கு முரணான எந்த செயலும் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்த நபர் நாட்டை பாதுகாத்தவராக இருந்தாலும் அல்லது துணிச்சலானவராக இருந்தாலும் அதனால் எந்த விதமான விலக்கு கிடைக்காது என்று துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

எவராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட வேண்டும் என்பதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். குற்றம் செய்துள்ள எந்த நபரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களைச் சார்ந்த நீதிமன்ற தீர்ப்புகள் எதிர்வரும் காலத்தில் வெளியாகவுள்ளதாகவும், அது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாமல் சட்ட ஆட்சி நிலைநிறுத்த அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது துணை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மர்மமான முறையில் மரணமடைந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான மரணப் பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே இது தற்கொலை என மருத்துவக் குழு முடிவெடுத்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆரம்பத்திலேயே இது தற்கொலை எனக் கூறியிருந்த நிலையில், மருத்துவக் குழுவினர் ஏதேனும் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும், கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவை தானா என்பது உறுதிப்படுத்தப்படாமல் அவசர அவசரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

அத்துடன், இந்த மரணப் பரிசோதனையை மேற்கொண்ட குழுவில் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் நண்பர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, தற்போதைய அறிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார். 

எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்த செய்திகள் தொடர்பில் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர விளக்கமளித்துள்ளார். 

பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வரிக் கொள்கையை எளிமைப்படுத்தும் நோக்கில், இதுவரை காலமும் அறவிடப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அதன்படி, இதுவரை காலமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட்ட 18% பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியன எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியுடன் (VAT) இணைக்கப்பட்டு 20.5% சதவீதமாக அறவிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இருப்பினும், அந்த மாதத்திலிருந்து சமூக பாதுகாப்பு வரி அறவிடப்பட மாட்டாது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இனிவரும் காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு வரி என இரண்டு வகை வரிகள் தனித்தனியாக அறவிடப்படமாட்டாது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Page 1 of 638
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd