web log free
January 30, 2026
kumar

kumar

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போது ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதன்படி சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அடிப்படைச் சம்பளத்தை 1550 ரூபாவாக அதிகரிப்பதற்கும் வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரவு - செலவுத் திட்டத்தில் இச் சம்பளத்துக்காக 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் விரைவில் வீழ்ச்சி அடைந்து, மீண்டும் தங்களுக்கு பிடித்த பழைய ஆட்சிமுறைக்கு நாடு திரும்பும் வரை சிலர் காத்திருக்கிறார்கள் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாப்பலகம தெரிவித்துள்ளார்.

சமூகம் எப்போதும் முன்னேற்றத்தை நோக்கி மட்டுமே நகரும்; பின்னோக்கி செல்லாது என்றும் அவர் கூறினார்.

கல்லுயுகம், மேய்ப்பர் யுகம், விவசாய யுகம், தொழில்துறை யுகம் ஆகியவற்றை கடந்து இன்று கணினி யுகத்தை அடைந்துள்ள சமூகமானது, மீண்டும் தொழில்துறை யுகம் அல்லது விவசாய யுகம் வழியாக மேய்ப்பர் யுகத்திற்கு திரும்பாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தோல்வியடைந்து தேங்காய் உடைத்துக்கொண்டு வெளிநாடுகளில் தங்கியிருந்து கற்பனை ஜனாதிபதி பதவிகளை கனவு காணும் நபர்கள், அந்த கனவுகளை நிரந்தரமாகவே காண வேண்டிய நிலை உருவாகும் எனவும் ருவன் மாப்பலகம வலியுறுத்தினார்.

தெரண வாதபிடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர் சேனக தலகல தெரிவித்ததாவது, நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 அல்லது 5 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் என்பதாகும்.

மேலும், மகரகமையில் அமைந்துள்ள “அபெக்ஷா” புற்றுநோய் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு தினமும் 3,500-க்கும் அதிகமான நோயாளிகள் வருகை தருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அதே நிகழ்வில் கருத்து தெரிவித்த வைத்தியர் ஹசரலி பிரனாண்டோ, கடந்த இரண்டு தசாப்தங்களில் புற்றுநோய் நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என தெரிவித்தார். புள்ளிவிவரங்களின்படி, ஒரு சாதாரண ஆண்டில் 37,000-க்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர்.

தற்போது தினசரி சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். மேலும், தினமும் 40 பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.

நுரையீரல் புற்றுநோய் என்பது சுவாசப் பாதையில் உருவாகும் ஒரு கட்டியாகும். இது சிறிய செல்கள் கொண்ட புற்றுநோய் மற்றும் சிறியதல்லாத செல்கள் கொண்ட புற்றுநோய் என இரு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கோலொரெக்டல் புற்றுநோய் என்பது பெரிய குடல் அல்லது மலக்குடலை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயாகும். பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் இருந்து விலகி, சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் கொண்ட நவீன உணவுப் பழக்கங்களை பின்பற்றுவது இதற்கான முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல, வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

கச்சத்தீவு தீவில் அமைந்துள்ள புனித அந்தோனி தேவாலயத்தின் வருடாந்திர பெருவிழா எதிர்வரும் மாதம் 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, 27ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மரதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான பெருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 25,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொடர்பாக இலங்கை மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் ஆசியப் பிராந்தியமெங்கும் பரவக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆசியாவின் பல நாடுகள் இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

அதன்படி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் விமான நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிபா வைரஸ் என்பது வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் மரண விகிதம் 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவக்கூடியதாக இருந்தாலும், அதன் பரவல் மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெறுகிறது.

இலங்கையும் ஆசிய நாடுகளைப் போல நிபா வைரஸ் தொடர்பாக கவனமாக கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து எந்தவித அச்சமும் ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய நிலையில் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வரலாற்றில் இந்த வைரஸ் ஒருபோதும் பெருந்தொற்றாக பரவியதில்லை. சந்தேகத்திற்கிடமான நபர்களை பரிசோதனை செய்ய தேவையான பரிசோதனை கருவிகள் இலங்கையில் போதுமான அளவில் உள்ளன. இதுவரை நாட்டில் எந்த நிபா நோயாளியும் பதிவாகவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் விமானத்தில் பயணம் செய்யும் அளவிற்கு உடல்நலம் வாய்ந்திருப்பது மிகவும் அரிது. எனவே நோயாளிகள் நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டுக்குள் வருகை தரும் பயணிகளை பரிசோதனை செய்வது குறித்து அவர் கூறுகையில்,

“ஒரு வைரஸ் மனிதர்களிடையே வேகமாக பரவும் தொற்றுநோயாக மாறும் போது மட்டுமே இத்தகைய பரிசோதனைகள் அவசியமாகும். நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் கடுமையான நோய்நிலைக்குச் செல்வார்கள். அவர்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்ளும் திறன் குறைவு. மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் வாய்ப்பும் மிகக் குறைவு. எனவே இதற்காக தேவையற்ற பயமும், காலமும், பணமும் வீணடிக்க வேண்டியதில்லை” என தெரிவித்தார்.

அதனால் விமான நிலையங்களில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருவதாக, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்தன தெரிவித்துள்ளார்.

இணையத்தை சார்ந்த தீங்கான சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஊடக பயன்பாட்டிற்கு வரம்புகளை விதிக்கும் சாத்தியங்கள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமீப காலமாக சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிவசப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கலந்துரையாடல்கள் மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான உள்ளடக்கங்கள் மிக வேகமாக பரவுவதன் காரணமாக, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய தனிப்பட்ட வாழ்க்கைக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஒழுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, சம்பந்தப்பட்ட உண்மைகள் முறையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களின் மூலம் சிறார்களின் மனநலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்காக ஒரு நாட்டாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகள் ஏற்கனவே இவ்வாறான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன என்றும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப திறன்கள் இலங்கைக்கு உள்ளன என்றும் அவர் கூறினார்.

அரசு ஒரு முறையான திட்டத்தை தயாரித்த பின்னர், இலங்கையின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஊடாக சமூக ஊடக தளங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியும் என்பதும் அவரது கருத்தாகும்.

சமூக ஊடகப் பயன்பாட்டினால் சிறார்களின் மனநலம் பாதிக்கப்படுவதும், இணைய வழி தொல்லைகள் (Cyberbullying) அதிகரிப்பதும் கருத்தில் கொண்டு, உலகின் பல நாடுகள் கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஜனதா விமுக்தி பெரமுன (JVP) மற்றும் ‘புரவெசி பலயா’ அமைப்புகளுக்கும் கணிசமான தொகை பணம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“நாங்கள் JVP-க்கும், அதேபோல் புரவெசி பலயாவிற்கும் பணம் வழங்கினோம். எங்களுக்குக் கிடைத்த நிதியிலிருந்தே அந்த தொகைகள் வழங்கப்பட்டன. அப்போது மூன்று அரசியல் சக்திகள் இருந்தன. எங்களுடைய மேடை தனியாக இயங்கியது. மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எங்கள் கட்சி ஒரு பக்கம். மற்றொரு பக்கம் புரவெசி பலய. அவர்களும் ராஜபக்சர்களை எதிர்த்தனர். இன்னொரு பக்கம் JVP ராஜபக்சர்களை எதிர்த்து செயல்பட்டது. மூன்று திசைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் தான் ராஜபக்சர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வழங்கப்பட்ட தொகை சிறிய அளவல்ல. கோடிக்கணக்கான ரூபாய்கள் வழங்கப்பட்டன” என அவர் கூறினார்.

இந்த கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ‘ஹிரு சடன’ (Hiru Satana) அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

Page 1 of 607
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd