web log free
March 29, 2024
kumar

kumar

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமைக்காகவும் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதற்காகவும் அடையாளம் காணப்பட்ட 71 பேரில் இதுவரை முப்பத்தேழு (37) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்து சேதங்களை ஏற்படுத்திய மற்றும் சொத்துக்களை திருடிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் காணப்பட்ட 71 சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன, அவர்களில் 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர்.

வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மிகவும் ஜனநாயக கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (5) தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, கட்சியின் கொள்கைகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குறித்த விலை குறைப்பு இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்கமைய, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி,12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 551 ரூபாய் ஆகும்.

அதேபோல 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி,5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ஆயிரத்து 827 ரூபாய் ஆகும்.

மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 21 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளது. அதன்படி, புதிய விலை 848 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பிலோ அல்லது வேறு எந்தப் பதவியிலோ எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அவர் தொடர்ந்தும் அரசியலில் இருப்பாரா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தங்குவதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கு சகலரது ஆதரவையும் ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரியுள்ளதாகவும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்க குறைந்தபட்சம் 175 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஜனாதிபதிக்குத் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலில் ஈடுபடுவதா? இல்லையா? என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் குடிமகன் என்கிற ரீதியில் மீண்டும் நாட்டுக்கு வருவதற்கான, உரிமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கிறது.

அதுபோல, அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை கோட்டாவே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் என்ன செய்வது என்பதை முதலில் கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறினார்.

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேவையான கையிருப்பு மாத இறுதிக்குள் வந்து இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம் என மொத்த இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக துருக்கியில் இருந்து மாவை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் நடுப்பகுதியில் ஒருதொகை கோதுமை துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

டுபாயிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகம் என்பதனால் துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி தொடங்கியதும், மாவின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஏற்றுமதி தடை மற்றும் உள்ளூர் கோதுமை மா இறக்குமதியாளர்கள் போதியளவு கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடத் தவறியமையினால் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் அங்குரார்பண நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும்.

இந்த கூட்டணியின் தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி என்பன அங்கம் வகிக்கவுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையவிருந்த போதிலும் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தின் பிரகாரம் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை இம்மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.