புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமித்து அமைச்சரவை விஸ்தரிப்பும், புதிய ஆளுநர்கள் பலரை நியமிப்பதும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த நியமனங்களை உடனடியாக வழங்குமாறும் கூறியிருந்தது.
ஆனால் விரைவில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம்(Yashini Rajakulasingham )அமோக வெற்றி பெற்றார்.
ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா (Anu Sriskandaraja )அமோக வெற்றி பெற்றார்.
ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் (Neethan Chan)அமோக வெற்றி பெற்றார்.
WARD 7 COUNCILLOR) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா நாதன்(Yuvaneetra Nathan )அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
இதேவேளை, வெற்றிபெற்ற நான்கு தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உள்ளது.
இன்று நாட்டில் கொவிட் மரணம் எதுவும் பதிவாகவில்லை.
இதுவரை பதிவாகியுள்ள நாட்டின் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16774 ஆகும்.
விகாரைகளில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் பௌத்த அலுவல்கள் ஆணையாளரிடம் உடனடியாக அறிக்கை கோரியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு பிள்ளைகளை பிக்குவாக மாற்றுவது என்ற பெயரில் விகாரைகளுக்கு அழைத்து வந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், விகாரைகளில் இவ்வாறான தவறுகளை செய்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான குற்றங்களை சட்டரீதியாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தாம் ஆராய்வதாக தெரிவித்த விக்கிரமநாயக்க, இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தாம் நம்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.
விகாரைகள் சட்டம் மற்றும் தேரவாத துறவி சொற்பொழிவு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், இது போன்ற தவறான செயல்களை தடுக்க வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து சில யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டங்கள் காலத்திற்கேற்ப திருத்தப்பட வேண்டும் என்றும், இந்தச் சட்டங்களில் விகாரை விவகாரங்கள் தொடர்பான கடப்பாடு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இவ்வாறான விடயங்களில் நிரந்தர தீர்வுகளை காண முடியாது என தெரிவித்த அவர், தவறு செய்யும் பிக்குகளின் அங்கிகளை கழற்றுவது போன்ற தண்டனைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் பின்னணியில் நிரந்தரமாக மூன்று வகையான குழுக்கள் இருந்ததாகவும், மூன்றாம் தரப்பு யார் என்பதை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.
மூன்றாவது தரப்பினர் தொடர்பில் தன்னிடம் ஆதாரம் இல்லை என்றும், இரண்டு தரப்பினர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உறுதியாக இருந்ததாகவும், அதில் ஒன்று ரணில் விக்கிரமசிங்க என்றும், அந்தப் போராட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியதாகவும் எம்.பி. கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சி சார்பற்ற பொது மகன்கள், தெரியாமலும் சிலர் அறிந்தும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததா அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாமல் கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த ஓரிருவர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அடுத்த நாட்டின் தலைமைத்துவத்தை பெறும் நோக்கில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மொட்டு கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீட்டைப் பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடல் 22வது திருத்தம் தொடர்பில் மாத்திரம் பேசப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதுகாப்புத் தலைவர்களின் ஓய்வு மற்றும் புதிய நியமனங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாக அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
புதிய அரசியல் மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று, ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த புதிய கூட்டணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா, காலி, பொலன்னறுவை, பதுளை, கேகாலை போன்ற மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டு முக்கியஸ்தர்கள் குழுவொன்று புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொகுதிகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏசியன் மிரர் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ஏசியன் மிரர் ஆசிரியர் பீடம் மகிழ்வடைகிறது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உனவட்டுன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரும் ஹபராதுவ பொலிஸாரும் இணைந்து இன்று(23) காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர்.
நிதி மோசடி தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் பின்னணியில் செயற்பட்டவர் வர்த்தகர் ஜானகி சிறிவர்தன என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகப் பெரிய அரசியல் குடும்பம் ஒன்று ஜானகி சிறிவர்தனவை சிறைக்குச் செல்லாமல் பாதுகாத்து வருவதாகவும் அவர் சுதந்திரமாக இருக்கும் வரை இந்த விசாரணைகளை முறையாக மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாம் நீதியமைச்சராக இருந்திருந்தால் விஜயதாச ராஜபக்ஷவைப் போன்று திலினியின் வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தனது மகனை அனுப்பியிருக்க மாட்டேன் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவ்வாறான அனைத்து மோசடிகளும் இடம்பெறும் போது மத்திய வங்கி கண்களை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்த அவர், பணம் இழக்கப்படவில்லை என்றும், மறைத்து வைக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.