web log free
April 16, 2024
kumar

kumar

மே மாத நடுப்பகுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வரை வெப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய காலநிலை ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் நிபுணர் பபோதினி கருணாபால தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் வளிமண்டலத்தின் பல பகுதிகளில் நீராவி அதிகரித்துள்ளமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்பமான காலநிலை நிலவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதிக தண்ணீர் குடிக்கவும், சூரிய ஒளி படாமல் இருக்கவும், குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுகளுக்கு அனுப்ப வேண்டாம், முதியோர்களை உன்னிப்பாக கவனிக்கவும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

ஜெனரல் எகொடவெல கோட்டாபய ராஜபக்சவை யாரையும் சந்திக்க அனுமதிக்காமல்  தடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாடாவும் சித்து விளையாட்டு விளையாடியதாக அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் 150 முதல் 180 பேர் கொண்ட குழுவொன்று மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை சுற்றி வளைத்ததாகவும் மேலும் கோட்டாபய ராஜபக்சவை கொல்ல ஆயத்தங்கள் நடந்ததாகவும், அதற்காகவே முஸ்லிம்கள் அங்கு இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது மக்களின் அபிப்பிராயத்தின் யதார்த்தத்தை சரியாகப் பிரதிபலிக்காது.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அந்த கட்சி 2020 ஆம் ஆண்டு போன்று பாராளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மையை பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமச்சீர் நாடாளுமன்றத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

மேலும், நாட்டின் முக்கியமான தேசிய தேர்தல்கள், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒத்திவைக்கும் எந்தவொரு முயற்சியையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார்.

தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அது உண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான HNB General Insurance, வாடிக்கையாளர்களுக்கு வாகன மற்றும் வாகனம் அல்லாத காப்புறுதிகள் ஆகிய இரண்டிலும் 12 மாத, 0% வட்டி திட்டங்களை வழங்குவதற்காக சம்பத் வங்கியுடன் கூட்டுப் பங்காளித்துவத்தை அறிவித்துள்ளது. HNB General Insurance குழுவில் அங்கம் வகிக்காத வங்கியுடனான ஒத்துழைப்பைக் குறிப்பதோடு, இலங்கை முழுவதிலும் உள்ள பரந்த வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதியை அணுகக்கூடியதாக மாற்றி, அதன் எல்லையை பாரிய அளவில் விரிவுபடுத்துவதை இது காட்டுகிறது.

இந்த கூட்டாண்மை மூலம், சம்பத் வங்கி கடனட்டை வைத்திருப்பவர்கள் தற்போது தங்கள் காப்புறுதிக் கட்டணத்தை தங்களுக்கு ஏற்ற தவணைகளில் செலுத்துவதற்கான வசதியை பெற முடியும். முன்கூட்டிய வட்டிக் கட்டணங்கள் ஏதுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகன, வீட்டு, பயண, மருத்துவ அல்லது வாகனம் அல்லாத வேறு ஏதேனும் காப்புறுதி திட்ட கட்டணத்தை ஒரு வருட காலம் வரை செலுத்தலாம். இது நிதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அத்தியாவசிய காப்புறுதியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது.

HNB General Insurance பிரதம வணிக அதிகாரியும் பொது முகாமையாளருமான சம்பத் விக்ரமாராச்சி இது பற்றி தெரிவிக்கையில், எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த தனித்துவமான நன்மையை வழங்குவதற்காக, இலங்கையில் மிகப் பெரிய வங்கி அட்டை தளத்தையும் விரிவான வலையமைப்பையும் கொண்ட முன்னணி வங்கியான சம்பத் வங்கியுடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பானது, காப்புறுதியை மிகவும் உள்ளீர்க்கப்பட்டதாகவும், அனைவருக்கும் கட்டுப்படியானதாகவும் மாற்றுவதற்கான எமது உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது.

முன்கூட்டிய வட்டிச் செலவுகளை நீக்குவதன் மூலம், பெருமளவிலான மக்கள் தமது காப்புறுதியையும், மன அமைதியையும் பெற இதன் மூலம் முடியும் என நாம் நம்புகிறோம். என்றார்.

சம்பத் வங்கியின், வங்கி அட்டை மையத்தின் உதவிப் பொது முகாமையாளர் ஷிரான் கொஸ்ஸின்ன இது பற்றி தெரிவிக்கையில், “எமது வங்கி அட்டை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ‘மதிப்புமிக்க ஒப்பந்தங்களை’ வழங்குவதற்கான வழிகளை நாம் எப்போதும் தேடுகிறோம். HNB General Insurance உடனான இந்த கூட்டாண்மை அந்த இலக்குடன் முழுமையாக ஒத்துப்போகிறது. எமது வாடிக்கையாளர்கள் தமது காப்புறுதிச் செலவுகளை மிகவும் திறம்படவும் வசதியாகவும் நிர்வகிக்க இது உதவுகிறது. என்றார்.

வாடிக்கையாளர்களுக்கான முக்கிய நன்மைகள்:

● 0% வட்டி: உங்கள் காப்புறுதிக் கட்டணத்தின் செலவை 12 மாதங்களுக்குள் எந்தவிதமான வட்டிக் கட்டணமும் இல்லாமல் செலுத்தலாம்.

● பரந்த அளவிலான தயாரிப்புகள்: HNB General Insurance வழங்கும் வாகன மற்றும் வாகனம் அல்லாத காப்புறுதி திட்டங்கள் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது.

● வசதி: தடையற்ற அனுபவத்திற்கு உங்களின் நம்பகமான சம்பத் வங்கி கடனட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

● கட்டுப்படியானது: காலத்துடன் செலவை திட்டமிடுவதன் மூலம் அத்தியாவசிய காப்புறுதியை அனைவரும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது.

HNB General Insurance ஒரு அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். அது இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கிறது. HNB Assurance PLC இன் துணை நிறுவனமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance பரந்த அளவிலான கிளை வலையமைப்புகளுடன் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவையை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டைக் கொண்ட HNB General Insurance, புத்தாக்கம் மற்றும் பராமரிப்பு மூலம் பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.

 

ராஜபக்சக்கள் நாட்டில் திருடியதன் காரணமாகவே ஏழையாகி விட்டோம். அந்த பணங்களை மீட்பதற்கான முறைமையை இன்று வரை காணவில்லை' என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

‘தருண அபே உத்தம’ என்ற பெயரில் ‘ஐக்கிய இளைஞர் சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ஜனாதிபதி பின்வருமாறு பதிலளித்தார்.

'நாங்கள் வாங்கிய கடனைப் பார்க்கும்போது, உலகப் பணக்காரரிடம் போனாலும், அந்த வேலையைச் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறோம். எனவே இலங்கையில் இருந்து எடுத்த பணத்தை மீளப் பெற்றுக் கொண்டு இதனைத் தீர்க்கலாம் என ஓரிருவர் கூறினால் அது முற்றிலும் பொய்யானது.

ஒரு நாடாக நாம் பாரியளவு கடனைப் பெற்றுள்ளோம். இந்த கடனை செலுத்த 2042 வரை கால அவகாசம் கேட்டுள்ளேன். எனவே ஓரிருவர் பணத்தைத் திரும்பப் பெற்று இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று யாராவது கூறினால் அது முற்றிலும் தவறானது.

மேலும், தற்போது புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளோம், யார் வேண்டுமானாலும் அங்கு சென்று தகவல்களை வழங்க முடியும். அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதனை செயற்படுத்தியுள்ளோம். வழக்குத் தொடரக்கூடியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மற்றவர்களின் சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பான உண்மைகளை யார் வேண்டுமானாலும் புதிய ஆணையத்திடம் தெரிவிக்கலாம். அந்த விவகாரங்களில் அரசு தலையிடாது.

மேலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நானும் உழைத்து வருகிறேன். அதற்காக பல வழக்குகள் போட்டுள்ளோம். அத்துடன், சுயாதீன ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பயிற்சிக் குழுக்கள் போதுமானதாக இல்லாததால், வெளிநாடுகளிலும் தேவையான ஆதரவைக் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் பணத்தை மோசடி செய்தவர்களை தண்டித்து பணத்தை மீட்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த இரண்டு பிரச்சினைகள் வேறு என்பதை நாம் எப்போதும் உணர்ந்து அவற்றைக் கையாள வேண்டும்.

உத்தேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டமூலத்தை கைவிடுமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை தடை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் நியமங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிவில் சமூகத்தை கடுமையாக ஒடுக்கும் மற்றும் நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையிலான சட்டமூலங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் தனது வேலைத்திட்டத்தின் நம்பகத்தன்மையையும் வினைத்திறனையும் பாதுகாப்பதற்காக குறித்த உத்தேச சட்டமூலங்களை திருத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க தலைவர்களை மீண்டும் இணைப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அண்மையில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய கூட்டணியுடன் கட்சியைச் சுற்றியுள்ள பல தொழிற்சங்கங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்கள் இணைந்து செயற்படுகின்றன.

இதன் காரணமாக பொஹொட்டுவ தொழிற்சங்க இயக்கம் கடுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமையை எப்படியாவது தடுக்கும் நோக்கில் நெலும் மாவத்தை கட்சி அலுவலகம் இந்த நாட்களில் செயற்படுவதுடன் புதிய கூட்டணியில் இணைந்துள்ள தொழிற்சங்க தலைவர்களுக்கு மீண்டும் வருமாறு கோரி நாளொன்றுக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அறியமுடிகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த புதிய கூட்டணி முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநாத், மொட்டுவின் அரசியலை இனி ஒருபோதும் கையாளப்போவதில்லை என தெரிவித்தார்.

பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் சந்தேக நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவர் நேற்று (12) படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர்.

உயிரிழந்த பெண் நபர் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளார்.

குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்தத்துடன் சடலமாக காணப்பட்டதையும் சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை அமுல்படுத்துவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதாவது புதிதாக 2500 ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அவசர தேவை கருதி, மூன்று வருட ஒப்பந்த காலத்துக்கு ஆங்கில மொழி மூலம் பாடங்களை கற்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளவும், இதற்கிடையில் திறந்த போட்டியின் மூலம் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கக்கூடிய 1,100 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

மேலும், ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்தவும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டளவில் குறைந்தது 200,000 மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதே தமது இலக்காகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கோள் மண்டலம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அவசர திருத்தப் பணிகளுக்கு உள்ளாகி, நாளை மார்ச் 13 ஆம் திகதி முதல் அதன் கதவுகள் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சின் பணிப்பாளர் கலாநிதி உத்பலா அழககோன் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, கோள் மண்டலம் பழுதுபார்க்க வேண்டிய முக்கியமான தேவை காரணமாக பெப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை பார்வையாளர்களால் அணுக முடியாத அளவு மூடப்பட்டிருந்தது.