தேசிய மக்கள் சக்தி (NPP) அரசில் தற்போதைய பிரதமர் பதவியில் எந்தவித மாற்றமும் இடம்பெறாது என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியிலோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலோ மாற்றம் செய்ய எந்த அடிப்படையும் இல்லை என்றும், அந்தப் பதவிகளில் செயல்படும் போது பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய எந்தவித தவறும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக உருவாகியுள்ள நிலைமைகள் குறித்து முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்றும், அந்த விசாரணையின் மூலம் தவறு எங்கு ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படும் என்றும் டில்வின் சில்வா தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமரை பதவியில் இருந்து நீக்கப்படும் என கூறுவது எதிர்க்கட்சியின் பகல் கனவாகும் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு காரணம், அவர் எதிர்க்கட்சிக்கு ஒரு அரசியல் சவாலாக விளங்குவதுதான் என்றும் டில்வின் சில்வா கூறினார்.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ஹரிணி அமரசூரியவை அந்தப் பதவிகளில் இருந்து நீக்கவோ அல்லது அவர் பதவி விலக உள்ளதாகவோ பரவும் செய்திகளின் உண்மை நிலை குறித்து ஒரு வாராந்த பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டில்வின் சில்வா இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் புதிய வாகன இலக்கத் தகடு உற்பத்திக்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்
இலங்கையில் புதிய வாகன இலக்கத் தகடுகளை உற்பத்தி செய்வதற்காக நீண்ட காலமாக தாமதமாகியிருந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவிக்கையில், எதிர்வரும் வாரத்திற்குள் அந்த ஒப்பந்தம் தென் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறினார்.
நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளின் எண்ணிக்கை 2 இலட்சம் (200,000) ஐ கடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவையின் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தம் இதுவரை அதிகாரபூர்வமாக நிறைவுசெய்யப்படவில்லை. எனினும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், முச்சக்கர வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நிரந்தர இலக்கத் தகடுகள் இன்றி காத்திருக்கின்றன. தினமும் பதிவாகும் புதிய வாகனங்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மோசடிகளை தடுக்கும் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கில், புதிய டிஜிட்டல் இலக்கத் தகடுகள் 7 பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொரட்டுவ பல்கலைக்கழகம் இதில் 6 அம்சங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள போதிலும், 7வது அம்சத்திற்கான சர்வதேச ஆய்வக சான்றிதழ் இதுவரை பெறப்படவில்லை. 25 வருடங்களாக நிலவி வந்த ஏகபோக உரிமை முடிவடைந்தமை, புதிய கொள்முதல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தோல்வியடைந்த நிறுவனங்களின் மேல்முறையீடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், உற்பத்தியாளருக்கு பணிகளை ஆரம்பித்து முதல் கட்ட இலக்கத் தகடுகளை விநியோகிக்க அதிகபட்சமாக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், “உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும், பெருமளவு நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை முழுமையாக விநியோகிக்க சில காலம் எடுக்கும்” என கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு, நிலவி வந்த அமைப்பை தொடர்வதற்காக அல்ல; நாட்டை அனைத்து துறைகளிலும் மாற்றி மக்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்கக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவே அதிகாரத்துக்கு வந்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா வேளாண் கல்லூரி பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது அவர் இதனை வலியுறுத்தினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போதைய கல்வி முறை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தாங்க முடியாத பெரும் சுமையாக மாறியுள்ளதாக கூறினார். ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பதிலிருந்தே அது ஒரு பெரிய போராட்டமாக மாறியுள்ளதுடன், மாணவர்களின் பள்ளிப்பைகள் மட்டுமன்றி கல்வியின் உள்ளடக்கம் மற்றும் கற்பித்தல் முறைமைகளும் தீவிரமாக மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யக்கூடிய விடயம் அல்ல என்றும், மனித வளம், அடித்தள வசதிகள் மற்றும் பாடத்திட்டங்களை உள்ளடக்கிய ஐந்து அல்லது பத்து வருடங்கள் நீளமான நீண்டகால திட்டமாகவே அது அமைய வேண்டும் என்றும் பிரதமர் நினைவூட்டினார்.
தற்போது மாணவர்கள் தொழில்முறை நிலைக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அவற்றை விரிவுபடுத்துவது அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளும் போது, இதுவரை அந்த அமைப்பின் மூலம் நன்மை பெற்ற குழுக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானதேயானாலும், அத்தகைய எதிர்ப்புகளால் அரசு எந்தவிதத்திலும் பின்னடையாது என அவர் வலியுறுத்தினார்.
சில தரப்பினர் கல்வி சீர்திருத்தங்களை விமர்சிப்பது நாட்டின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அல்ல; அரசை பலவீனப்படுத்தும் குறுகிய நோக்கத்தினாலேயே எனவும், அத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் போது அரசு மேலும் தைரியமடைவதாகவும் பிரதமர் கூறினார்.
எதிர்வரும் காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு, டிட்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் போது வழங்கப்பட்டதுபோன்று ரூ.50 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படமாட்டாது என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசின் வழக்கமான நடைமுறைப்படி, ஒரு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீடு அமைப்பதற்காக ரூ.12 இலட்சமும், நிலம் வழங்குவதற்காக ரூ.4 இலட்சமும் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டிட்வா புயலுக்குப் பிறகு தற்போது இடம்பெறும் நிலச்சரிவுகளுக்கு ரூ.50 இலட்சம் வீதம் வழங்கப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் இதுவரை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.16 இலட்சம் இழப்பீட்டு தொகை, இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ரூ.25 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் (NDCU) செயற்பாட்டு பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி 01 முதல் 09 வரை கடந்த 9 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 2,420 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.
அதிகமான டெங்கு நோயாளிகள் பதிவான மாகாணமாக மேற்கு மாகாணம் காணப்படுகின்றது. அங்கு மொத்தம் 1,317 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேலும் தென் மாகாணத்தில் 361 பேர், மத்திய மாகாணத்தில் 192 பேர், சபரகமுவ மாகாணத்தில் 165 பேர் மற்றும் கிழக்கு, வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் தலா 4% வீதம் டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, அதிகமான டெங்கு நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அங்கு 625 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 165 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் கம்பஹா மாவட்டத்தில் 393 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 128 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் டெங்கு நோயாளிகள் கணிசமான அளவில் பதிவாகியுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் 148 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 162 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
அதேபோல் கண்டி மாவட்டத்தில் 140 நோயாளிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 113 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக கூறினார்.
இந்த மாவட்டங்களில் டெங்கு நோயாளிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய அளவில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலவும் மழைவீழ்ச்சி மற்றும் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைமைகள் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளதாகவும், வானிலை ஆய்வு திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி எதிர்வரும் காலத்திலும் மழை தொடரக்கூடும் என்பதால் மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் வைத்தியர் எச்சரித்தார்.
எனவே கொசுக்கள் பெருகும் இடங்களை அழிப்பதுடன், கொசு வளர்ச்சியைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியம் எனவும், இது குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரகலய (போராட்ட) காலத்தில் மக்கள் கோரிய முழுமையான System Change நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் பாராளுமன்றத்தில் சுமார் மூன்று ஆசனங்களையே கொண்டிருந்த தேசிய மக்கள் சக்திக்கு (NPP) மக்கள் 159 ஆசனங்களை வழங்கியமை மிகப் பெரிய அரசியல் மாற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு முறை ஆயுதப் போராட்டங்கள் மூலம் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு, ஜனநாயகத் தேர்தல் வழியாக அதிகாரம் கிடைத்துள்ளமை கூட ஒரு வகையில் System Change-இன் ஆரம்பமாகக் கருதப்படலாம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் முடிவு, மக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி) முடிவுக்கு கொண்டு வரும் வகையிலேயே அமையும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
“இது இறுதியில் மேல்மட்டத்தில் இருப்பவர் எங்காவது செல்வதுடன் முடிவடையும். அதே நேரத்தில் ஜே.வி.பி-யையும் முடிவுக்கு கொண்டு வந்தபடியே இது நிறைவடையும். இதனால் நாடு மிகப்பெரிய ஆபத்துக்குள்ளாகும்,” என அவர் கூறினார்.
இந்த நிலை குறித்து தாம் மகிழ்ச்சியுடன் பேசவில்லை என்றும், ஜே.வி.பி போன்ற கட்சிகள் இல்லாமல் போனால் இடதுசாரி அரசியல் இயக்கங்களுடன் உற்சாகமாக பயணிக்க நினைக்கும் மக்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அவர்களும் இதேபோலத்தான். அவர்கள் செய்த செயல்களாலேயே மற்ற அனைவரையும் பாதிக்கிறார்கள். ‘இடதுசாரி அரசியல்’ என்ற கருத்தே முன்னோர் காலத்திலும் நினைக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடையும். மீதமுள்ளவர்கள் முழுமையான சரிவை சந்திக்க நேரிடும்,” என விமல் மேலும் தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
எவ்வாறு, யாரால் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள தற்போதைய கல்வி முறை குறித்து மகா சங்கத்தினரும் பொதுமக்களும் திருப்தியடையவில்லை என்றும், அது பெற்றோருக்கு பெரும் பொருளாதார சுமையையும் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கல்வியாளர்களால் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த மாற்றங்களை தற்போது அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளதாகவும், அதற்கு எதிராக அடிப்படை அற்ற பொய்யான தகவல்கள் மற்றும் அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிராமப்புற குடும்பங்களைப் பிடித்திருக்கும் வறுமையின் தீயச் சுழலிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படை வழி கல்வியே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, “வீட்டில் உள்ள ஒரு பிள்ளை கல்வி பெற்றால், முழு குடும்பமும் முன்னேறும்” என்ற பொதுவான கருத்தை நிஜமாக மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார்.
தற்போது ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதோ அல்லது உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகுவதோ கூட ஒரு குடும்பத்துக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையாக மாறியுள்ள நிலையை மாற்றி, உலகின் எந்த நாட்டுடனும் போட்டியிடக்கூடிய தரமான கல்வியை இலங்கை குழந்தைகளுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் என அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த புதிய மாற்றங்கள் மூலம் குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக கட்டியெழுப்பவும், சர்வதேச தரம் கொண்ட கல்வியைப் பெறவும் தேவையான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், இன்று (9) அனுராதபுரத்தில் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ‘திட்வா’ (Ditwa) புயல் காரணமாக முழுமையாக சேதமடைந்த ஒரு வீட்டிற்கு பதிலாக புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அரசால் ரூ. 50 இலட்சம் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நடைப்பெறுகிறது.
இதனடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் (National Disaster Relief Services Centre) இந்த திட்டத்திற்கான தொடர்புடைய சுற்றறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
ஒரு வீடு முழுமையாக சேதமடைந்ததாக அடையாளம் காணப்படுவது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கியுள்ள வரையறைகள் மற்றும் தொழில்நுட்ப அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரினி அமரசூரியாவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் வெறுப்பூட்டும், அவதூறான பிரச்சாரங்களையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாட்டின் அறிவுஜீவிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இணைந்த அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய தாக்குதல்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாகரிக வரம்புகளை மீறுகின்றன என்றும், அவை தொடர்பில் தங்களது ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பெரும்பாலானவை, கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற, தவிர்க்கக்கூடியதாக இருந்த ஒரு பிழை தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான பிழைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் நேர்மையான மற்றும் நியாயமான விமர்சனங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், தற்போது நடைபெறுவது பிரதமரின் தனிப்பட்ட மரியாதைக்கும் கௌரவத்திற்கும் சேதம் விளைவிக்கும் வகையிலான ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரமாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், சில தாக்குதல்கள் பெண்களுக்கு எதிரான பொறாமை மற்றும் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதாகும். பிரதமர் இவ்வாறு பாலின அடிப்படையிலான அவமதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுவது அருவருப்பானதாகும் என்றும், இது 1960களிலிருந்து இலங்கையின் பெண் அரசியல் தலைவர்கள் எதிர்கொண்டுவரும் வெறுப்புத் தாக்குதல்களின் தொடர்ச்சியே என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சமூகத்தின் பின்னடைந்த சில தரப்புகள் முன்னெடுக்கும் இவ்வாறான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என பொதுமக்களிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சில மதகுரு அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்தப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளமை குறித்து குடிமக்களிடையே கடும் ஏமாற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பாடப்புத்தகப் பிழை குறித்து அரசு பொறுப்பை ஏற்று காவல் விசாரணை ஒன்றை ஆரம்பித்தமை பாராட்டத்தக்கது என அந்த குழு குறிப்பிட்டுள்ளது. டாக்டர் ஹரினி அமரசூரியாவின் முன்மாதிரியான பாராளுமன்ற செயல்பாடுகளையும், அவரது அறிவார்ந்த தலையீடுகளையும் நினைவுகூர்ந்துள்ள அவர்கள், இவ்வாறான அவதூறு பிரச்சாரங்களை பொருட்படுத்தாமல் நிர்வாக ரீதியான குறைபாடுகளை திருத்தும் துணிச்சல் அவரிடம் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் ஜகத் வீரசிங்க, டாக்டர் ராதிகா குமாரசுவாமி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பேராசிரியர் நீரா விக்கிரமசிங்க உள்ளிட்ட நாட்டின் முன்னணி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் 58 பேர் இந்த இணைந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.