ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கித்தாரி பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாட்டில் இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தில், இசைப்பிரியா கொல்லப்படுவதற்கு காரணமாகவிருந்தோரை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா கடந்த நாட்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்;
நான், இராணுவத் தளபதியாக கடமையாற்றியபோது பெரும் தொகையான மக்கள் சரணடைந்தனர்.
சரணடைந்த பொது மக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் 12,000 பேரும் சரணடைந்தனர்.
ஆனால், சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக இரு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இசைப்பிரியா தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்தன. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சிலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது.
அவர்களில் இசைப்பிரியாவையும் அழைத்து சென்றதாக குற்றச்சாட்டிருந்ததை நான் அறிவேன். அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த எந்தவிதாரண தொடர்பில் பேசப்பட்டது.
இது தவிர, வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த ஜகத் ஜயசூரியவால் பலர் கடத்தப்பட்டதாகவும் பல முரணான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவ சிப்பாய்கள் தெரிவித்திருந்தனர்.
அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்திலும் விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்தன. இசைப்பிரியாவின் சம்பவத்தின் போது நான் இராணுவத் தளபதியாக இருக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ தான், அப்போது ஜகத் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நிமியமித்தார். அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் இருப்பதால் அவரை நியமிக்க வேண்டாம் என்றேன்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி சிரித்துக் கொண்டு முரணான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நியமனம் கடிதம் வழங்கும் போது கூறினார்.
இவை அனைத்துக்கும் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ, அரசியல் அணிதிரட்டல் பிரதிச் செயலாளர் நாயகமாக (Deputy Secretary General of Political Mobilization) நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதே முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவியாகும்.
அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் ஆயிரம் கூட்டங்களுக்கு பொறுப்பாக ஹரின் பெனாண்டோ செயற்படுவார்.
பாதாள உலகக் கும்பல்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார்.
இலங்கை அரசியலிலும் பாதாள உலகக் கும்பல்கள் எவ்வாறு நுழைந்துள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆனந்த விஜேபால பின்வரும் கருத்தை வெளியிட்டார்.
“இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனை வழங்கப்படும். அவர்களுடன் தொடர்புடைய எந்த பொது நபரோ அல்லது அரசியல்வாதியோ தப்பிக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரையும் நாங்கள் கைது செய்வோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைமறைவாக உள்ள அனைத்து பாதாள உலகக் கும்பல்களையும் கைது செய்து சிறையில் அடைப்போம். இந்த நிர்வாகத்தின் போது பாதாள உலகக் கும்பல்களை ஒழித்து சிறையில் அடைப்போம்,” என்று அவர் கூறினார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்தும் பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 7:00 மணி முதல் நாளை மாலை 7:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் அமுலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஊவா பரணகம, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுநுவர, தெல்தோட்டை மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, புலத்கொஹுபிட்டிய,மாவனல்ல, ருவன்வெல்ல,அரநாயக்க, கேகாலை மற்றும் யட்டியந்தோட்டை மாத்தளை மாவட்டத்தின் யாதவத்த, அம்பாங்கங்கா கோரலே, உக்குவெல, பல்லேபொல மற்றும் ரத்தோட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த, வலப்பனை மற்றும் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, எஹலியகொட, கலவானை, இரத்தினபுரி மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் இன்று (18) 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (18) கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் '22 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை 360, 800 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்று '22 கரட்' தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை நேற்று 410,000 ரூபாவாக இருந்த '24 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
‘‘மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா’’ என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலி. வடக்கில் கடற்படையின் கட்டுப் பாட்டின் கீழுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படையினர் உள்ளார்களா அல்லது ஜனாதிபதி யாழ். மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறாரா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட் டியுள்ளார்.
இதுதொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்புத் தரப்பிடம் உள்ள மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும். அதனை எமது அரசாங்கம் செயற்படுத்தும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அதுமட்டுமல்லாது, ஜனாதிபதி வேட் பாளராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போதும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை தமது அரசாங்கம் பொறுப்பேற்றதும் படிப்படியாக விடுவிப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தார்.
ஆனால், இந்த அரசாங்கம் பொறுப் பேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் வலி. வடக்கு மக்களின் மிகக் குறுகிய ஏக்கர் காணிகளை மட்டும் விடுவித்துள்ளது.
கடந்த அரசாங்கங்களை விமர்சனம் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் வாக்கு களைப் பெறுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றிய நாடகமாகவே பார்க்க முடிகி றது. யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்க ளைக் கடந்துள்ள நிலையில் இன்றும் தமது பூர்வீக நிலங்களுக்குள் மக்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.
அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன் வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பினர் மக்களை ஒன்று திரட்டி தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தை நடத்திய நிலையிலும் தற்போது கடற்படை தமது தேவைக்காக தனியார் காணியை அபகரிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.
இந்த நாட்டின் அதிகாரம் மிக்க முப்படைகளையும் கட்டுப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருக்கின்ற நிலையில் அவரின் வாக்குறுதிகளை மீறி கடற்படை காணி பிடிப்பில் ஈடுபடுகிறதா?
இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகிறமை அனைவரும் அறிந்த விடயம். குறிப்பாக கூறப்போனால் வலி வடக்கு தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கட்டுமானங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஆகவே தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.இலங்கையை ஆட்சி பெளத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வராதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டிய சந்தேகத்தின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.