உலகளவில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான போர் மோதல்களின் பின்னர் உருவாகும் மீள்கட்டுமான பணிகளில், இலங்கைக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இப்போதே கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகளில், இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை இணைக்கும் வழிகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, குறிப்பாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் நபர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் சுமார் 6,000 பேர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர் என்றும், அவர்களின் சராசரி வயது சுமார் 42 ஆக இருப்பதால் அவர்கள் தொடர்ந்து பணியாற்றும் திறன் கொண்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
அதன்படி, ஓய்வு பெறும் இந்த நபர்களுக்காக கட்டுமானம் மற்றும் சுற்றுலா துறைகளை இலக்காகக் கொண்டு NVQ சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அவர்களுக்கு முறையான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்பும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் ஏப்ரல் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாட்டின் நுகர்வோருக்கு எவ்வித எரிவாயு (LPG) பற்றாக்குறையும் இல்லாமல் தேவையான வழங்கலை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சுமார் 42,000 மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்ட பெரிய கையிருப்பு தற்போது மாலத்தீவு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவாக இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த எரிவாயு கையிருப்பு, ஏப்ரல் மாதத்தில் நாட்டில் ஏற்படும் மொத்த தேவையையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் தேவையை கருத்தில் கொண்டு, சந்தையில் எந்தவித செயற்கை பற்றாக்குறையும் ஏற்படாதவாறு தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்ள நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் மாத தேவைக்கு அப்பாற்பட்டும், மே மாதத்திற்கான வழங்கல் திட்டங்களும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மேலும் 33,000 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஏப்ரல் 25ஆம் தேதி நாட்டை அடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமிட்ட வழங்கல் முறையின் காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களிலும் நாட்டில் எரிவாயு வழங்கல் நிலைமை ஸ்திரமாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குருக்கள்மடம் மனிதப்புதை குழியில் நேற்று (30) திங்கட்கிழமை முதலாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகின.
களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணி குழுவினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகரிகள், பொலிஸார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, உள்ளிட்ட பலர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இது தவிர, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியிருந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில்,புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள்,இவ்விடத்தில் வைத்து ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில்,நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இப்புதைகுழி நேற்று முதலாம் கட்டமாகத் தோண்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எரிபொருள் விலையை உயர்த்தாமல் வைத்திருக்க அரசு கடுமையான நிதிச் சுமையை ஏற்றுக்கொண்டு வருவதாக போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, நாட்டில் எரிபொருள் பயன்பாட்டின் பெரும்பங்கு தற்போது தனியார் துறையின் மூலம் நடைபெறுகிறது. இழப்பில் வியாபாரம் செய்ய தனியார் துறை முன்வராததால், தற்போதைய நிலைமையில் எரிபொருள் விலையை ரூ.140 முதல் ரூ.200 வரை உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும், அரசு மற்றும் தனியார் துறை இணைந்து அந்த சுமையை பகிர்ந்து கொண்டு, மக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.100 மற்றும் ஒரு லிட்டர் பெற்றோலுக்கு ரூ.20 இழப்பை அரசு ஏற்றுக்கொண்டு வருகிறது. இந்த சலுகை காரணமாக, மாதந்தோறும் அரசுக்கு சுமார் ரூ.20 பில்லியன் இழப்பு ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், போர் நிலைமை எப்போது முடிவடையும் என்பது தெளிவாக இல்லாததால், உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த இழப்பை தொடர்ந்து சுமந்து செல்லுவது சவாலானதாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியராக இருக்கு நாகமுத்து பிரதாபராஜா, நாட்டில் வெப்பநிலை செல்சியஸ் 43 டிகிரியைத் தாண்டக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அவரது விளக்கத்தின்படி, ஏப்ரல் 2 முதல் 15 வரை சூரியன் இலங்கைக்கு நேர்முகமாக மேலே நிலை கொள்ளும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில், சூரிய கதிர்கள் நேரடியாக விழுவதால், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
இதன் காரணமாக, தினசரி சராசரி வெப்பநிலை 38°C முதல் 42°C வரை இருக்கும் நிலையில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 43°C ஐ மீறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, மனித உடல் 40°C ஐ விட அதிகமான வெப்பநிலையை தாங்க முடியாது. அந்த அளவைத் தாண்டும் போது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) எனப்படும் தாப அதிர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த கடும் வெப்பநிலை காரணமாக,
மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் குடிப்பது, நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருக்காமல் தவிர்ப்பது, மற்றும் உடல் நலத்தை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் உஷண்மான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய கிழக்கு போரில் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்ற தமிழ் இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.
இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த விசாகன் சத்தியமூர்த்தி கடந்த 21 ஆம் திகதி மத்திய கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்.
இவருடைய இறுதி கிரியைகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetory யில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க இராணுவ வீரர்களால் இறுதி இராணுவ மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.
மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட முதல் தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரான பிரபாத் மதுசங்க என்ற மிதிகம சூட்டி இன்று (30) அதிகாலை ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
சர்வதேச பொலிஸாரால் 'சிவப்பு அறிவித்தல்' பிறப்பிக்கப்பட்டிருந்த இவர், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இவரைக் பொறுப்பேற்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மூன்று அதிகாரிகள் ஓமானுக்குச் சென்றிருந்தனர்.
அதிகாரிகளுடன் இன்று அதிகாலை 4.27 மணிக்கு ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து சலாம் எயார் (OV-437) விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.
இலங்கையில் இருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் ஓமானில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேகநபரைக் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் சிங்கள-தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்ததாவது, புத்தாண்டு காலத்தில் மக்களின் பயணம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையமாகக் கொண்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் நகரங்களுக்கு பொருட்கள் வாங்க வரும்வர்கள் அதிகரிப்பதால், அதனை சமாளிக்க சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.