web log free
September 07, 2024
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி கூட்டம் இன்று (26) பிற்பகல் ஆரம்பமானது.

கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஆளும், எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நல்லிணக்கத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. எனினும், இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளவில்லை. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பங்குபற்றுவதாக அறிவித்திருந்தது. 

ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் தாம் கூட்டத்தில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், PLOTE எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கட்சி என்ற ரீதியில் தாம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ், உத்தர லங்கா சபாவ கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.

சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்தது.

மலையக தமிழர் பிரச்சினை பற்றி இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படாவிட்டால், அதில் ஏன் பங்கேற்க வேண்டும் என கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான செயற்பாட்டில், மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தாலும் ஜனாதிபதியிடமிருந்து அதிகாரபூர்வமான பதில் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கை குறித்து தமது கூட்டணி அதிருப்தியடைந்துள்ளதாகவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.

கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.

​அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.

 2022 ஜனவரி முதல் டிசெம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

 வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்லஸ் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவரது பதவி விலகல் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்வதால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுமா? என்பது தொடர்பில் அதன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேசப்பிரிய விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 104வது பிரிவை மேற்கோள்காட்டி அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்தாலும், அதனை பொருட்படுத்தாது செயற்படுவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, தான் பதவி விலகுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான தகவல்களுக்கு பதில் அளிக்க நேரத்தை செலவிடுவது கூட அர்த்தமற்றது என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரின் பதவி விலகல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக இருக்காது எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பி.எஸ்.எம். சால்ஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து   ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்தார்.

இதுவரை தமக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒரு உறுப்பினர் விலகுவது ஆணைக்குழு கூட்டத்திற்கு தேவையான முழுமைக்கு தடையாக இருக்காது எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் ,அனுமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி சில வெறுக்கத்தக்க சம்பவங்கள் வேட்பாளர்கள் தெரிவுகளில் போது இடம்பெற்றுள்ளதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் சேவை குறித்து எவ்விதத்திலும் கண்டு கொள்ளாமல் நாட்காலிகளை சூடாக்கிக்கொண்டிருந்த பழைய முகங்களை சில கட்சிகள் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கவுள்ளதாக பெரும்பாலான மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாம் தெரிவு செய்து அனுப்பும் வேட்பாளர் எப்படியானவர் என்பது குறித்த தெளிவுகள் அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ளன. அதாவது குறித்த நபர் உள்ளூராட்சி மன்றங்களுக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது அதையும் தாண்டி பாராளுமன்றத்துக்கோ செல்லும் வரையில், அவர் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்றவராகவே இருப்பார் என்பதில் சந்தேகங்களில்லை.

ஆனால் உள்ளே சென்ற பிறகு அவரின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களே இங்கு முக்கியமானவை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே மக்கள் சேவையில் தம்மை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

எதிர்கட்சி வரிசைகளில் இருந்தாலும் கூட மக்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்கின்றனர். விவாதங்களை முன்னெடுக்கின்றனர். மீண்டும் தேர்தல் வரும் போது தைரியமாக மக்கள் முன் சென்று வாக்கு கேட்கின்றனர்.

ஆனால் ஆளும் தரப்பிலிருந்து கொண்டு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உறுப்பினர்களில் அதிகமானோர் முதலில் தாம் கரையேறும் வழிகளையே பார்க்கின்றனர். மக்களைப் பற்றிய சிந்தனை அவர்களுக்கு அடுத்த தேர்தல் வரும் வரை தோன்றுவதில்லை. காரணம் அவர்கள் அதிகார பீடத்துக்கு சென்றதன் நோக்கம் அதுவல்ல.

அடுத்த தேர்தலில் தம்மால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் அவர்கள் இயன்ற வரை தமக்கும் தமது உறவினர்களுக்கும் சொத்துகளை சேர்த்து விட்டு பின்பு கட்சி பணிகளில் தம்மை இணைத்துக்கொள்வர். கட்சிகளின் தலைமைத்துவங்கள் இதை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் உறுப்பினர்கள் அடிக்கும் கொள்ளைகளில் அவர்களுக்கும் பங்கில்லாமலில்லை.

மக்களோடு மக்களாக அவர்கள் அருகிலிருந்து அரசியல் செய்யும் நிறுவனங்களாவே உள்ளூராட்சி சபைகள் விளங்குகின்றன. ஆனால் இப்போது சில உறுப்பினர்களின் செயற்பாடுகளால் அவை பாராளுமன்றம் அளவுக்கு மக்களிடமிருந்து தூரபோய்க் கொண்டிருக்கின்றன.

எவ்விதத்திலும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயது, தேடிப்பார்க்காது தமக்குரிய சலுகைகளை மாத்திரம் மாத்திரம் குறியாகக்கொண்டு சில உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களினதும் உறுப்பினர்களினதும் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மீதான நம்பிக்கைகளை இழக்கச்செய்துள்ளது.

அவர்களை மீண்டும் தெரிவு செய்யும் வகையில் சில கட்சித் தலைமைகள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர்களை இடம்பெறச்செய்துள்ளது.

மேலும் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட ஐந்து வருடங்களாக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் நாட்காலிகளை சூடாக்கிச் சென்றவர்களும் எவ்வித பிரச்சினைகளுமின்றி மீண்டும் போட்டி போட தயாராகி வருகின்றனர்.

வேட்பாளர்களைத் தெரிவு செய்ய பல கட்சிகள் சமூக ஊடகங்களில் விண்ணப்பங்களை கோரியிருந்தன. நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் விண்ணப்பிப்போர் எவ்வாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்த எந்த கரிசனைகளையும் எந்த கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அது குறித்த அக்கறையை இப்போதுள்ள கட்சிகளிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையோர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் வலம் வரும் போது, உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தால் என்ன என்ற மன ஆறுதல் தான் இவற்றுக்கெல்லாம் காரணம். தேசிய கட்சிகள் அவ்வாறான கொள்கைகளில் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஏன் அந்த வழியை பின்பற்ற வேண்டும்?

நேர்மையான அரசியலையும் ஜனநாயக பண்புகளையும் நேசிக்கும் அதே வேளை அதன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இளைஞர்களும் கள அரசியலில் ஈடுபடாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஜனரஞ்சக அரசியலை முன்னெடுக்கும் பாரம்பரிய கட்சிகள் இந்த தவறுகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் செய்கின்றன. இதன் காரணமாகவே சில கட்சிகளையும் உறுப்பினர்களையும் குற்றப்பரம்பரையாகவே மக்கள் நோக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.

தேர்தல்கள் மற்றும் வாக்களித்தல் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை தோன்றுவதற்கு இவையே பிரதான காரணிகள். மேலும் நல்லாட்சி எண்ணக்கருக்கள், அது தொடர்பான சிந்தனைகள் உருவாவதையும் இவ்வாறான செயற்பாடுகள் தடுக்கின்றன. அரசியல் நிர்வாக கட்டமைப்பில் உள்ளூராட்சி நிறுவனங்கள் கீழ் மட்டத்திலிருந்து மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய அமைப்புகள். இவற்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் கட்சித் தலைவர்களா அல்லது வாக்களிக்கும் மக்களா ?

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை கோரி இலங்கை இராணுவத்துக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்க்குமாரும் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய விசாரணையில் ஆஜராகி இருந்தனர்.

மேலதிகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் ஆணைக்குழு முன்பாக மேன்முறையீட்டாளர் சார்பில் ஆஜராகி, சரணடைந்த புலிகள் தொடர்பான விவர பட்டியல் இராணுவத்திடம் இருப்பதாகக்கூறி ஆதாரங்களை முன்வைத்தார்.

இதன்போது, இராணுவம் சார்பில் இராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான ரவிந்திர பத்திரகே இணைய வழியில் ஆணைக்குழுவில் ஆஜரானமைக்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.

இதுவொரு முக்கியமான விசாரணை என்பதால் நேரடியாகவே ஆணைக்குழுவுக்கு முன்பு முன்னிலையாக வேண்டும் என இராணுவத்துக்கு உத்தரவிட்டது.

இதன்படி மார்ச் 28ஆம் திகதி இராணுவம் நேரடியாக ஆணைக்குழுவில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவலறியும் விண்ணப்பம் ஒன்றுக்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என RTI சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புலிகள் தொடர்பான தகவல்களை கோரும் இந்த விண்ணப்பத்துக்கு சுமார் 4 வருடங்களாக பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திலினி பிரியமாலியின் பாரிய பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன வெளிநாடு செல்ல விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வியாபார நோக்கத்திற்காக இந்தியா செல்லவிருப்பதாக அவரது சட்டத்தரணிகள்  நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்சேபனை காரணமாக  கோரிக்கையை நிராகரிக்க கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் இன்று (25) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தது

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நாளை (26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த சர்வகட்சி கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன். தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சித் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் தனது பிரதேச அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் தேர்தலுக்கான கூட்டங்களை ஒத்திவைக்குமாறு தங்கள் தொகுதிகளில் உள்ள கட்சி வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.