web log free
November 29, 2023
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய துலாஞ்சலி பிரேமதாச, சம்பவம் இடம்பெற்ற போது அப்போதைய பிரதமரின் வீட்டிற்கு அருகில் தான் இருந்ததாகவும், விசாரணைகளுக்கு உதவுவதற்காக வாக்குமூலமொன்றை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 5 வது பாதையில் உள்ள தனியார் இல்லம் ஜூலை 9 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல அரச நிறுவனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து எரிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் மட்டங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச் செய்தி வெளியாகியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ranil wickremesinghe and Gotabaya Rajapaksa

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, கோட்டாபயவின் வருகை பிற்போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும், அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவுடன் தொலைபேசியில் உரையாடிய ரணில்! இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட முடிவு | Gotabaya Rajapaksa Visit To Sl Politic Crisis

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தது.

மக்களின் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.

கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கோட்டாபய சிங்கப்பூரில் ஒரு மாதம் அளவில் தங்கியிருந்தார். பின்னர் சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்த நிலையில் அங்கிருந்து தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார். 

கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது எதிர்வரும் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருக்கிய தரப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்றை ​பொலிஸார் சுற்றிவளைத்ததுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த விடுதியில் இருந்து ரி56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளர் (ஓய்வுபெற்ற இராணுவ வீரர்) மேலும் ஒரு ஆண் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த விடுதியில் பொலிஸார் சோதனை செய்தால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சுட்சுமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதி ஓய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உத்தேச சர்வகட்சி அல்லது தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிக அமைச்சுப் பதவிகளைக் வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு கூடுதலான அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் கோரப்பட்ட போது, ​​சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியில் இணையவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தாமல், கட்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் தமக்கு உடனடியாக இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்னும் பதினைந்து நாட்களில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கருதுகின்றார்.

இதேவேளை, இம்முறை இராஜாங்க அமைச்சர்களின் நிறுவனங்களை வர்த்தமானியில் வெளியிடாதது தொடர்பான யோசனையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களின் நிறுவனங்களை தனித்தனியாக வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலையை பிரகடனப்படுத்தி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி:

வெள்ளை முட்டை ரூ 43

மஞ்சள் முட்டை ரூ 45

இன்று (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதுடன் அவர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் 'கொழும்பு நகர மையத்திற்கு' அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் நடித்த ‘தி கேம்’ படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியின் பின்னரே அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்காக தற்போது தேசியப்பட்டியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பெரும்பாலும் தம்மிக்க பெரேரா பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின் சிறிது காலத்தில் அவர் பிரதமராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

தற்போது தாய்லாந்தில் இருக்கும் அவர் அடுத்த சில நாட்களில் இலங்கை வர உள்ளார். 

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை (20) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9.00 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அதேவேளை கொழும்பு 4 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இருக்கும்.

அதனால் நுகர்வோர் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் தலைமறைவாக உள்ள பிரித்தானிய இளம் பிரஜையை உடனடியாக கைது செய்து மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு குடிவரவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவியுடன் அவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ள  கெல்லி ஃபேசர், தனது மீதான விசா மீறல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டவர் மற்றும் அவருக்கு இந்த நாட்டில் இருந்து உதவி செய்யும் உயர் அதிகாரிகள் பற்றிய மறைக்கப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வெளிநாடு செல்வதற்கான விமான டிக்கெட்டை பெறும் வரை மிரிஹான குடிவரவு முகாமில் தடுத்து வைக்குமாறும், கறுப்புப் பட்டியலில் சேர்த்து நாடு கடத்தப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.