web log free
September 13, 2025
kumar

kumar

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டமைப்பில் இணைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குழுவினர் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்தக் குழு வந்தாலும் இல்லாவிட்டாலும், புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதில் சமகி ஜன பலவேக கட்சி உறுதியான நிலையில் உள்ளது.

டலஸ் அழகப்பெருமவுடன் இருக்கும் 13 பாராளுமன்ற உறுப்பினர்களில் 09 பேர் தமது கட்சியுடன் இருப்பதாக சஜித் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் 72ஆவது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் ஆசனமான ஹெட்டிபொலவில் ஆண்டு நிறைவு விழா நடத்த திட்டமிடப்பட்டு, அழைப்பு அட்டைகள் விநியோகிக்கப்பட்டதும், அது திடீரென கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, நீண்டகாலமாக மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இவ்வருட ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு, சிறிது காலம் கட்சியின் தலைவர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட 378 வகையான மருந்துகள் இதுவரை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த வருடம் உலக வங்கியின் உதவியுடன் 23 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 46.7 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு போட்டியாக ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் பலம் வாய்ந்த அரசியல் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திவாய்ந்த எம்.பி ஒருவர் வெளிநாட்டில் விமுக்தியை சந்தித்து இது குறித்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சந்திரிகா குமாரதுங்கவின் ஆசியும் கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை விமுக்தி குமாரதுங்க தெரிவிக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் திங்கட்கிழமை திருத்தியமைக்கப்படவுள்ளது.

இம்முறை எரிவாயுவின் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் எனவும் அறியமுடிகின்றது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தேவை அதிகரிப்பு காரணமாக இந்த நாட்டிலும் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், கடந்த விலை திருத்தத்தின் போது, உலக சந்தையில் எரிவாயு விலை குறைந்திருந்த வேளையில் இலங்கைக்கு பெருமளவு கேஸ் தருவிக்கப்பட்டதால் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். 

புதிய கூட்டணியின் செயற்பாடுகளை வழிநடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற புதிய கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஆகியோரின் முன்மொழிவுகளினால் இந்த நியமனம் உறுதிசெய்யப்பட்டதுடன் ஏனைய குழுவினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இதன்படி, புதிய கூட்டணியின் கட்சி விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் தீர்மானகரமான சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் அறிமுக பேரணியை வரும் ஜனவரி மாதம் நடத்த ஆயத்தம் செய்யப்பட்டு தற்போது தொகுதி அளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளக மோதல் என வெளியாட்கள் பேசினாலும் கட்சியில் அவ்வாறான நெருக்கடிகள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் கட்சிக்கு இல்லை.

அவர் மேலும் கூறுகையில்,

“ரகசிய விவாதம் அல்ல, 72வது ஆண்டு விழா பற்றிய விவாதம். கட்சி ஒற்றுமை மிகவும் நல்லது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகங்கள் மூலம் பேசினால் எமக்கு பிரச்சினையில்லை, தலைவர் இருக்கிறார், செயலாளர் இருக்கிறார், தேசிய அமைப்பாளர் இருக்கிறார், அனைத்தையும் இன்று மிகத் தெளிவாகக் காணமுடிகிறது. மூத்த துணைத் தலைவர்கள் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை பதவி நீக்கம் செய்ய எந்த முயற்சியும் இல்லை” என்றார்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது.

கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.

இதன்போது, மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சி நடவடிக்கைகளிலும் குறித்த கப்பல் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக Times Of India செய்தி வௌியிட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை துறைமுகங்களில் கடற்படை கப்பல்கள் மற்றும் உளவுக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் Times Of India தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 2, 3 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆயுதப் படையினரின் திறனை விருத்தி செய்வதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், இதற்கமைய இலங்கைக்கான 150 மில்லியன் டொலர் பாதுகாப்பு கடன் வசதியை இந்தியா நீடித்துள்ளதாகவும் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இந்த மாத தொடக்கத்தில் கொழும்பில் நங்கூரமிடப்பட்ட நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பலான SHI YAN 6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd