ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடையே ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணை மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு புலனாய்வு நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த 5 அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படுகிறது.
அந்த அமைப்புகள்
ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் முகமதியா (JASM),
ஸ்ரீ லங்கா தௌஹித் ஜமாத் (SLTJ),
அகில இலங்கை தௌஹீத் ஜமாத் (ACTJ),
சிலோன் தௌஹித் ஜமாத்
ஐக்கிய தௌஹீத் ஜமாத் (UTJ)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த ஐந்து அமைப்புகளையும் மற்ற ஆறு அமைப்புகளையும் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை 2021 ஏப்ரல் மாதம் வெளியிட்டார்.
புலனாய்வு அமைப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்பதாக அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், தடை நீக்கப்பட்ட பிறகும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் நிதி மற்றும் கல்வித் திட்டங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மீண்டும் தடையை அமுல்படுத்த வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி தனது தலைமையைக் கோரினால், கட்சித் தலைவர் அதை ஒப்படைக்கத் தயார் என்றால் கட்சியைக் கைப்பற்றத் தயார் என்றும், கட்சியை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவேன் என்றும் கூறினார்.
எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பொது மக்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை தனியார் அல்லது அரச உரக் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யலாம் என மஹிந்த அமரவீர தெரித்தார்.
"குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருந்தூர்மலையில் வழிபடச் சென்ற தமிழ் மக்களுக்கு பிக்குகள், சிங்கள மக்கள் மற்றும் பொலிஸாரால் இடையூறு விளைவித்தனர்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "குருந்தூர்மலை விவகாரத்தை வைத்து ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர். இன்னொரு தரப்பினர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர். இவையிரண்டும் தற்போதைய நிலைமையில் தேவையற்றவை.
குருந்தூர்மலை வழிபாட்டிடம். அங்கு எவரும் சென்று வழிபடலாம். இந்தநிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பது எமது கடமை. சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் நாம் கலந்துரையாடித் தீர்வு பெற்றுக்கொடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போன்று நிதானமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
யாழ். முற்றவெளியில் இன்று (15.07.2023) இடம்பெற்ற தொழில் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டில் வாழ்கின்ற அனைவரும் தங்களுடைய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அதேவேளை, இனம், மொழி, மதம், நிறம் போன்ற அனைத்து விடயங்களையும் கடந்து இலங்கையர்களாக சவால்களை எதிர்கொள்ளுகின்ற போதே, நாட்டின் எதிர்காலத்தினை வளமானதாக மாற்றியமைக்க முடியும்.
இந்த நிலையில், மொழியின் பெயரால் அரசியல்வாதிகள் சிலரினால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் வெளியிடுகின்ற கருத்துக்கள் நிதானமானவையாக அமைய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் கதையொன்றை தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, குறித்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிடுகின்ற கருத்துக்கள் மிகவும் நிதானமானவை எனவும் அவ்வாறான பக்குவமே இந்த நாட்டிற்கு அவசியம் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான், தான் இராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளார்.
அதன்படி தமக்கு மீண்டும் எம்.பி பதவியை வழங்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும், பிரதிவாதிகளாக நிதி அமைச்சர், தேர்தல்கள் ஆணைக்குழு, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பெயரிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் எம்பி பதவியை ராஜினாமா செய்ததாகவும், தன்னிடம் வேட்புமனு பணம் பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும் தேர்தலில் போட்டியிட முன்வந்த அரசு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால் தனக்கு க்கு மீண்டும் எம்.பி பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது.
வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார்.
மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கான தீர்வாக 11 மாடிகளைக் கொண்ட சிறுவர் இதய நோய் பிரிவொன்றை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார்.
நானுஓயா, மஹாஎலிய தோட்டத்தில், கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை இட்டுள்ளது.
K. கிருஷாந்தன் என்பவரே குறித்த கோழியை வளர்த்து வருகின்றார்.
இது தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஜப்பானிய அரசாங்கத்தின் கடனுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் 28 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் களவாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கான்கிரீட் மூடிகளை இரவு நேரத்தில் ரகசியமாக உடைத்து கான்கிரீட் கவர்கள் உள்ளே இருந்த காப்பர் கம்பிகள் அகற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அதிவேக மின் கம்பிகளை கூட போதைப்பொருள் பாவனையாளர்கள் அறுத்துள்ளதாகவும், இதனால் அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகளை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த சாலையில் உள்ள பாதுகாப்பு வலைகளை கூட இரும்புக்காக வெட்டி விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை (11) ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் இது தெரியவந்துள்ளது.
இந்தப் பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றுமாறு குழுவின் தலைவர் சரத் வீரசேகர பரிந்துரைத்துள்ளார். இந்த நிலைமையின் அடிப்படையில் புதிய களனி பாலம் மற்றும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பாதுகாப்பை ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய களனி பாலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நவம்பர் 24, 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
கலபிட்டமட துனுமலையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கெப் வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சரத் வேரகொட என்ற நபரே உயிரிழந்துள்ளார். டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.