web log free
December 04, 2025
kumar

kumar

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நாளை முதல் 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (02) ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பின்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 09ஆம் திகதி தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி மேல்மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று புதன்கிழமை (1) காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5 நாள் வேலையை வழங்க வேண்டும், மேலதிக நேர கொடுப்பணவை வரையறை இன்றி வழங்க வேண்டும், மின்சார கட்டண அதிகரிப்பை இரத்து செய், மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

சுகாதார தொழிற்சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தினால் தூர இடங்களில் இருந்து வைத்திய சேவைக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை விரைவாக வழங்காது விட்டால் அனைத்து அவசர சேவைகளையும் பகிஷ்கரித்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச் செயல் என கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்து ஜயசூரிய தீர்மானித்தார்.

இதன்படி, கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கட்சிக்குள் பல பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அபிப்பிராயத்தை துல்லியமாக பரிசோதிக்க பொதுத் தேர்தலை பயன்படுத்த முடியும் எனவும் அதன் பெறுபேற்றின் அடிப்படையில் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அந்த கலந்துரையாடல்களில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வரவு செலவுத்திட்டத்தை கட்சி ரீதியாக நீண்ட நேரம் ஆராய்ந்த பின்னர் தீர்மானம் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த முறை கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் உரிமையாளர்களும் போக்குவரத்து ஆணைக்குழுவும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போது கட்டணத்தை திருத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

அவருடன் இந்திய நாட்டின் நிதி அமைச்சின் 06 உயர் அதிகாரிகளும் ஒரு தூதுக்குழுவாக இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் இன்று (01) காலை 08.31 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறும் ‘நாம் 200’ என்ற நிகழ்வில் அவர் விசேட அதிதியாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்திய நிதி அமைச்சரை சந்தித்துள்ளனர். 

2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 14,401 எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 14,401 பேர், கம்பஹா மாவட்டத்தில் 13,958 பேர், களுத்துறை மாவட்டத்தில் 4,354 பேர் உட்பட 68,114 டெங்கு நோயாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, மேல் மாகாணத்தில் அதிகளவான 32,713 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், இது 48% என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 356 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அமைந்துள்ளதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

டீசல் ஒரு லிட்டரின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 351 ரூபாவாக காணப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் விலை 356 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சுப்பர் டீசலின் புதிய விலை 431 ரூபாவாகும். 

மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலையும் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 242 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 249 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை உயர்த்துவதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது போன்றவை பணம் கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(31) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரிவித்தார்.

தாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தலையீடும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.

வேலைநிறுத்தத்தின் மத்தியில் அத்தியாவசிய சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd