web log free
July 27, 2024
kumar

kumar

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர் பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறினார்.

தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச ஜனாதிபதி மேலும் உத்தேசித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிற்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா பண்ணை ஒன்றை பராமரித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதி சபாநாயகருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியில் 2 ½ ஏக்கர் நிலத்தை சந்தேக நபர் குத்தகைக்கு எடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பண்ணை ஒன்றை பராமரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 4 ½ அடி உயரமுள்ள 18,956 கஞ்சா செடிகளை STF அதிகாரிகள் கைப்பற்றினர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட நான்கு இலங்கையர்களுக்கு கனடா நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

மற்றைய இருவரும் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சுமத்தி கனடா அவர்கள் மீது இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.

அவர்கள் கனடாவுடன் வணிக உறவுகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கனடாவில் ஏதேனும் சொத்து இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை பெறுவதைத் தவிர்க்குமாறு அமைச்சரவை வழங்கிய உத்தரவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை வேட்பாளர் பிணை வைப்புப் பணத்தைப் பெறுவதைத் தவிர்க்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க சென்றதாகவும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை சந்திக்க செல்லவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நேற்று தெரண 360 நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இ தனை தெரிவித்தார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியின் அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு கடப்பாடு இருப்பதாகவும் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தேர்தலுக்கான சூழலை தயார்படுத்தும் பொறுப்பு அவருக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசியதாகவும் அதனால் தான் ஜனாதிபதியை சந்திக்க சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொழும்பிலும் தெற்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாகாணத்தைச் சேர்ந்த பல இளம் பெண்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மேலதிக வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கொழும்பு மருதானையில் விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பெண்கள் குழுவினால் இது தெரியவந்துள்ளது.

மருதானையிலுள்ள விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 19 பெண்களை கைது செய்திருந்தனர் அதில் 11 பேர் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், ஆனால் குடும்பத்தை நடத்துவதற்கு பணம் அனுப்ப முடியாததாலும், வாழ்வதற்கு போதிய வருமானம் இல்லாததாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இளம் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்னிலங்கையில் இருந்து சில தரகர்கள் வடமாகாணத்திற்கு வந்து தனியார் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. தரகர்கள் இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பு மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று குறைந்த நேரத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக அவர்கள் கூறினர். 

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மற்றொரு புதிய கூட்டணி உருவாக உள்ளது. இம்முறை விமல் வீரவன்ச, அனுர பிரியதர்ஷன யாப்பா, டலஸ் அலகப்பெரும மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஹெலிகொப்டர் சின்னத்தில் இணைய தீர்மானித்துள்ளது.

புதிய கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என பெயரிடப்படவுள்ளது. 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து இன்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

புத்திக கருணாரத்ன என்ற 54 வயதுடைய இந்த பயணி இலங்கையின் பட்டகன பிரதேசத்தில் வசித்து வந்தவர்.

அவர் இன்று (10) அதிகாலை 02.18 மணியளவில் தனது தாயாருடன் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு தனது தாயாரை அழைத்து வரும் வேளையில் இன்று (10) அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் முகப்பு மண்டபத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். 

பயணியின் சடலம் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா, பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 94507 குமார ஆகியோரின் பணிப்புரைக்கமைய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக சேனாதீர அவர்களின் மேற்பார்வையில் இந்த மரணத்தின் பிரேதப் பரிசோதனை இன்று (10) நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. 

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கஞ்சா கடத்தல், புதையல் அகழ்வு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று (09) காலை மொனராகலைக்குச் சென்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தமது காவலில் எடுத்து நீண்ட நேரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேகநபர்கள் இந்த மோசடிகளுக்கு பிரதேசத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார உள்ளிட்ட 06 பேரை மொனராகலையில் உள்ள அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தின் கூரையில் மறைத்து வைத்திருந்த 15 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தவிர, அவரது பொலிஸ் சாரதி, கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் மற்றும் புதையல் வேட்டையாடும் ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இவர் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரத்தை எடுத்துச் செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த ஜீப்பை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி சோதனையிட்டனர்.

சந்தேக நபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நண்பர்கள் நால்வரும் ஜீப்பில் பயணித்த சாரதியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவுக்கு சொந்தமான மொனராகலை உத்தியோகபூர்வ இல்லத்தில் சோதனையிட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள், கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 550 கஞ்சா செடிகளை கண்டெடுத்துள்ளனர்.

15 கிலோ எடையுள்ள கஞ்சா கையிருப்பு உலர்த்துவதற்காக மேற்கூரையில் மறைத்து வைத்திருந்தது பின்னர் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியதில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் படல்கும்புர பகுதியில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணையில், சந்தேகத்திற்குரிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று காலை மொனராகலைக்கு சென்றிருந்தது.

அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.