web log free
July 12, 2025
kumar

kumar

இன்று (20) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கைது செய்ய சென்ற போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது மினுவாங்கொட, மஹகம, ஹொரம்பல்ல வீடொன்றில் பதுங்கியிருந்த பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 29 வயதுடைய சந்தேக நபரான மாணிக்குகே கசுன் லக்ஷித சில்வாவையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோமாகம பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேகநபர், டுபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரைச் சுட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் சுடப்பட்ட இடத்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் பயன்படுத்திய T-56 துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வகத்துடன் (SHOCO) இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பல திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது 27/2 இன்கீழ் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினை, கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், பெருந்தோட்டப்பகுதிகளில் மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ள விவகாரம் உள்ளிட்டவை தொடர்பில் அவர் முக்கிய பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

நிதி அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் மேற்படி கேள்விகள் தொடர்புபடுவதால் கல்வி அமைச்சு சார்ந்த விடயங்களுக்கு பதிலளிப்பதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு பிரதொரு நாளில் துறைசார் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் எனவும் சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

அவ்வேளையில் தோட்ட பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றிருந்தாலும், தோட்ட பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இன்னும் சட்டப்பூர்வமாக வழங்கப்படவில்லை என வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார். அத்துடன், மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படாமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், 

" தோட்டப்பகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் கதைப்பதற்கு ஒருநாள் தனியான விவாதம் அவசியம். தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இன்று பதில் வழங்காவிட்டாலும், ஒரு நாள் விவாதத்தை தாருங்கள்." - என்றார்.

இதற்கு பதிலளித்த பெருத்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, விவாதத்துக்குரிய சந்தர்ப்பத்தை வழங்க தயார் எனக் குறிப்பிட்டார்.

திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது தொடர்பான தீர்மானம் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படும்.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள்(OPD) இன்று(19) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் செயற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் G.விஜேசூரியவிடம் வினவிய போது, பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறினார். 

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெறும் எனவும் அவர் கூறினார்.

கொக்கல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இறந்தவரின் வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் சுட்டனர்.

62 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ச அல்ல என்றும் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் அதிலிருந்து அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு எக்காலத்திலும் அநீதி இழைக்கப் போவதில்லை எனவும், அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் பூரண ஆதரவைப் பெற வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இலங்கை இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் நேற்று (17) கையளிக்கப்பட்டது.

அதிகாரப் பகிர்வு , வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பில் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் அவரது இந்திய விஜயத்தின் போது வலியுறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும் பொறுப்புகூறலையும் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வை நிராகரித்து, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு இலங்கை முயற்சிப்பதாக கடிதத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ் மக்களது பாதுகாப்பு, தனித்துவம் மற்றும் இருப்பு என்பன இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட விடயம் அல்லவெனவும் இரா.சம்பந்தன் பாரத பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழ் கட்சிகள் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை கடந்த 10 ஆம் திகதி கையளித்திருந்தது.

இதேவேளை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மற்றுமொரு கடிதத்தை 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிக்கும் நோக்கில், கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்தனர்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதாக அமைச்சர் நசீர் அஹமட் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். 

அமைச்சர் நசீர் அஹமட் அவ்வாறு கருத்து வெளியிடுவது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரச அதிகாரிகளின் கோபத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளதென பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த முன்னாள் அரச அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இணையமொன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

எதிர்கட்சி சார்பில் (ஐக்கிய மக்கள் சக்தி) பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான நசீர் அஹமட் அமைச்சு பதவி எனும் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் உணர்வுமிக்க ஆதரவாளர்களையும் காட்டிக் கொடுத்து அரசாங்கத்தின் காலடியில் விழுந்து கேவலமான பிழைப்பு நடத்துவது போல் அரச அதிகாரிகள் செயற்படுவதில்லை என குறித்த அரச அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் நசீர் அஹமட்டால் காத்தான்குடியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அரச அதிகாரிகள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கிழக்கில் தான் வைப்பது தான் சட்டம் எனவும், கல்வி செயலாளர் திஸாநாயக்கவை இரவோடு இரவாக தூக்குவதாகவும், அவரை வீதிக்கு இறங்க விடாமல் செய்வதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நசீர் அஹமட் தனது எல்லையை மீறி வெளியிட்ட இவ்வாறான கருத்துக்கள் சிங்கள முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகவும், அவர் தனது அரசியலை தக்க வைத்து கொள்ள இவ்வாறு கருத்து வெளியிட்டமைக்கு எதிராக அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளதுடன், தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நசீர் அஹமட் தொடர்பில் மேலிடத்தில் முறையிட உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரச ஊழியர்களை இணைத்து கொண்டு பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் பிரபல அரச ஊழியர்கள் தொழிற்சங்க முக்கியஸ்தர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை எரித்து நாசம் செய்தமை தொடர்பிலான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க ஆரம்பித்துள்ளது.

அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆரம்ப கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி, அழிக்கப்பட்ட அசையா சொத்துக்களுக்காக கடந்த அரசாங்கத்தின் கிட்டத்தட்ட 15 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட 72 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அழிக்கப்பட்ட சொத்து வீடுகள் மற்றும் பொருட்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பல சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. குழுக்கள் மூலம் உரிய அறிக்கைகள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடும் போது பெறுமதியற்ற விலைகளை வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இடிந்த கட்டிடங்களுக்கு இழப்பீடும், இரண்டாம் கட்டமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும்.

சில அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக பெருமளவிலான காப்புறுதி இழப்பீடுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் விசாரணையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அழிக்கப்பட்ட தனது சொத்துக்களுக்கான நட்டஈடு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், அதனை ஒரு குழுவினர் பெற்றுள்ளதாகவும் தமக்கு தெரியவந்துள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(18) மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் கூறினார். 

எவ்வாறாயினும் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. 

கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd