web log free
July 01, 2025
kumar

kumar

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்யத் தயாரானதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் நேற்று  (13) கையளித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் குருநாகலில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி ஜனாதிபதியை கொல்ல திட்டமிட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் குற்றம் சுமத்தினார்.

முன்னதாக, நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையின்படி நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகைகளை கையளித்த நீதிபதி, அவர்களின் கைரேகைகளை எடுத்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

2009 பெப்ரவரி 1ஆம் திகதிக்கும் 14ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குருநாகலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி ஜனாதிபதியைக் கொல்லத் திட்டமிட்டதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உண்மைகளை முன்வைத்ததுடன், தமது தரப்பினர் 13 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகளின்படி, தமது கட்சிக்காரர்களுக்கு பிணை வழங்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும், அவர்கள் 13 வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை தனித்துவமான விடயமாகக் கருதி, சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை மீதான உத்தரவை அக்டோபர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், வழக்கை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதனின் உணவு பாவனைக்கு தகுதியற்றது என தாம் கருதுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி உற்பத்தியில் இந்த நாட்டில் பயன்படுத்தப்படாத இரசாயனங்கள் மற்றும் தரக்குறைவான உரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எனவே, இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதர்களை விட விலங்குகளுக்கு ஏற்றது. எனவே கால்நடை தீவன பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உரிய வர்த்தமானி அறிவித்தலை நீக்கினால் அந்த அளவு அரிசியை கால்நடை பாவனைக்கு பயன்படுத்த முடியும் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்களுக்கு தேவையான அரிசியை வழங்குவதற்கு இந்நாட்டு விவசாயிகள் பலமடைந்துள்ளனர் என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் கூறியுள்ளார்.

இன்றைய ராசிபலன்9/14/2022

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றங்களும் வந்து போகும். நெருங்கியவர்களிடம் உங்கள் மனகுறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதைப் போல உபத்திரம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இதமாகப் பேசி கவர்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினை ஒன்று தீரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களை. தேடி வந்து பேசுவார்கள். இன்பம் பெறும் நாள்.

கடகம்

கடகம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கூடும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் முழுகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசால்அனுகூலம் உண்டு. அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

 

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இன்று (13) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருந்தது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம்(ஆகஸ்ட்) இறுதி பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சை பிரிவிற்கு 3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக குறிப்பிட்டிருந்தனர். இதனை அடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் மருத்துவ அறிக்கை பிரகாரம் செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் செப்டம்பர் 05 ஆந் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார் படுத்தபட்டிருந்தது.

இதற்கமைய 3 இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்திற்கு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸார் இன்று கல்முனை பகுதியில் உள்ள குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பிரதான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்று கைது செய்திருந்தனர்.

மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08, 13, 14 வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சம்பவத்தில் பொலிஸாரினால் சந்தேக நபராக இனங்காணப்பட்ட பிரதான பௌத்த மதகுரு கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த படுதல் தொடர்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் செயற்பட்டு வருவதுடன் கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஒரே ஒரு விஹாரையாக செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை விட மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமகி வனிதா பலவேகய தலைவருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ரணிலின் வெளியேற்றம் விரைவில் நிகழும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விட அது மிகவும் பயங்கரமாக இருக்கும். அவர் உடனடியாக நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம்” என்று ஹிருணிகா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"மக்கள் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கும் போது மற்றொரு போராட்டம் வழியில் உள்ளது. முக்கிய தொழிலதிபர்களின் வீடுகள் ஆதரவற்ற மக்களால் எரிக்கப்படும் மற்றும் பணக்காரர்களுக்கு சொந்தமான அனைத்து செல்வங்களும் ஆதரவற்றவர்களாகி வரும் ஏழைகளால் பறிக்கப்படும், ” என்று அவர் மேலும் கூறினார்.

"சில நாட்களுக்கு முன்பு பத்தரமுல்லையில் உள்ள ஒரு பணக்கார வீட்டில் இருந்து சில பொருட்கள் களவாடப்படடது போலவே பணக்காரர்களுக்குச் சொந்தமான சொத்துக்களையும் அபகரித்தல் ஏற்கனவே தொடங்கிவிட்டது," என்று அவர் கூறினார்.

பிரேமலால் ஜயசேகரவை இராஜாங்க அமைச்சராக நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்த ஹிருணிகா, இந்த நடவடிக்கையை ஐ.தே.கட்சியினர் எவ்வாறு வரவேற்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

"ஜனவரி 4, 2022 அன்று நடந்த பேரணியில் தொடங்கொட என்ற யூ.என்.பி ஆதரவாளரைக் கொன்றதற்காக ஜெயசேகர தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். மேலும் இந்த நடவடிக்கையை யூ.என்.பி. ஆதரவாளர்கள் எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில்  விக்கிரமசிங்க பங்கேற்பதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் (கட்சித் தலைவர்) கூட்டம் நாளை (14) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் அடுத்த வாரம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதேவேளை, அரசாங்கத்துடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழியர் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் விவாதம் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு, பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு உள்ளிட்ட பல குழுக்கள் இன்னும் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்களை அமைப்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் 19ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவுக்கு அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படவுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

உடவலவை தேசிய பூங்காவிற்கு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர விஜயம் செய்த போது, ​​மான் ஒன்று அவரது வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது.

பூங்காவில் வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதாலும், சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் வாகனம் மான் மீது மோதியதுடன் வாகனத்தின் கண்ணாடியும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய பூங்கா எல்லைக்கு வெளியே இவ்விபத்து நடந்ததாக கூறியுள்ளார்.

உடவலவ தேசிய பூங்கா வட்டாரத்தின் தகவல்களின்படி, பூங்காவிற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது .

மேலும், மாலை 6 மணிக்கு மேல் பூங்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 8 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் இரவு 11 மணியளவில் வாகனம் பூங்காவிலிருந்து வெளியே வந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் மீனவர்கள் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய துணைத் தூதரகத்தின் உதவியுடன் மிரிஹான முகாமிற்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து தமிழகத்திற்கு மீனவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகிற்கான உரிமை கோரிக்கை வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் உரிமையாளரால், உரிமை கோரிக்கை முன்வைக்கப்படாவிடில் படகு அரசுடமையாக்கப்படும் என நீதவான் உத்தரவிட்டார்.

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அதன் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய இந்தியாவின் நிலையான பார்வையானது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதாகும்" என்று பிரதிநிதி கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது கடனினால் இயங்கும் பொருளாதாரத்தின் வரம்புகளையும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"இலங்கை பிரஜைகளின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதும், அவர்களின் அதிகாரமளிப்பை நோக்கிச் செயற்படுவதும் இலங்கையின் சிறந்த நலன்களாகும், இதற்காக அடி மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு ஒரு முன்நிபந்தனையாகும்" என்று திங்கட்கிழமை (12) ஜெனிவா அமர்வில் இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

முன்கூட்டியே தேர்தல்களை நடத்தி மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளும் வளமான எதிர்காலத்திற்கான தமது அபிலாஷைகளை அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd