மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று காலை முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர்.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.
அரச சேவையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால் அரச சேவையை பேணுவதற்கு மேற்கொள்ளப்படும் செலவில் சிக்கல் இருப்பதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி 'நில மேதுர' கட்டிடத்தில் உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) மாவட்ட செயலாளர்/அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அரச சேவையை ஒரே உறுதியுடன் கூடிய முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் முகவர் பதவியிலிருந்து மாவட்டச் செயலர் என பட்டங்களை மாற்றிய சேவை சுமார் 200 வருடங்கள் பழமையானது என்றும், நாட்டைப் புதிய பாதையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது என்றும், தற்போதைய நிலையில் திருப்தி அடைய முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இன்றுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே, அக்காலம்,ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை நாடளாவிய ரீதியில், தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 35,600 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெற்றுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பத்திரிகை ஆசிரியர்களிடம் உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.
இதுவரையில் வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் வாகன இறக்குமதி அவசியமான ஒன்று எனவும் வாகன இறக்குமதி அதிகமாக நடந்தால் வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் உயர்மட்ட நிர்வாகத்தினர் நேற்று மத்திய வங்கியின் தலைமையகத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து நாட்டின் நிதி மற்றும் பொருளாதார கல்வியறிவு குறித்து பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கூடுதல் எரிசக்தியை ஏற்றுமதி செய்வதே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட மின் இணைப்பு ஒப்பந்தத்தின் நோக்கம் என்பதை இது வலியுறுத்துகிறது.
“நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் கையெழுத்திடவில்லை. இந்தியாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், பல்வேறு எரிசக்தி திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்வதற்கு மட்டுமே இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எரிசக்தி ஏற்றுமதி திட்டம் நாட்டிற்கு ஒரு பொருளாதார நன்மையாகும்.
இலங்கையில் எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டு, பிம்ஸ்டெக் நாடுகளுக்கு அதிகளவு எரிசக்தி ஏற்றுமதி செய்யப்படும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் வரிசைப்படுத்தல் மற்றும் விநியோக செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி இலத்திரனியல் சாதனம் (APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் நாடு முழுவதும் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
உலகம் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இலங்கையை விட்டு வைக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு ஏற்றவாறு எந்தவொரு நிரப்பு நிலையத்தையும் அல்லது நிறுவனத்தையும் ஆதரிக்கிறார்.
மேலும், இலத்திரனியல் முறையின் ஊடாக எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பெற்றோலிய மொத்த விற்பனை நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆகிய இரண்டினதும் செயற்பாடுகள் நெறிப்படுத்தப்பட்டு இலகுவாகியுள்ளதாக கலாநிதி மயூர நெத்திகுமார மேலும் தெரிவிக்கின்றார்.
உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த நாட்டின் செல்வம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி மீண்டும் தெரிவித்தார்.
சாலு பலியே லெஞ்சின வேடத்தில் நடிக்கும் கலைஞரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை கூறினார்.
அவற்றை விரைவில் இலங்கைக்கு வர முடியும் என நம்புவதாகவும், எதிர்காலத்தில் நாட்டில் மாற்றம் ஏற்படும் எனவும் அங்கு தெரிவித்தார்.
இஸ்லாத்தை அவமதித்து மத நல்லிணக்கத்தை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (19) நீதிமன்றில் ஆஜராகாத பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலபதத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கொழும்பு குற்றப்பிரிவு இந்த பிடியாணை பிறப்பித்ததுடன், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜூலை 8, 2016 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஞானசார தேரர் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாகவும் சந்தேகநபர் தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான் சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பித்ததுடன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புத்தாண்டில் அதிரடி விலை குறைப்புடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை செல்லும் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவை சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பருவ நிலை மாற்றம் காரணமாக நவம்பர் 18ம் தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
நாகையில் இருந்து இலங்கை சென்றுவர 9,200 ரூபாய் என்று இருந்ததை தற்போது 8,500 ரூபாயாக விலை அதிரடியாக குறைத்துள்ளன.
அதோடு 10 கிலோ எடை வரை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் கப்பல் போக்குவரத்து சேவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முயற்சியால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கப்பல் சேவை ஜனவரியில் தொடங்கும் போது வாரத்தில் புதன் கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.