web log free
September 20, 2024
kumar

kumar

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மார்ச் மாத நாணயக் கொள்கை விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) முதல் இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.6 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு எதிர்வரும் காலாண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022ல் பதிவான 7.3 சதவீத எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2023 இன் இரண்டாவது ஆறு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட சாதகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கடந்த ஆண்டு (2023) ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக 2.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

இஸ்லாமியத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார். 

பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நீதி நடவடிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 10 பாதாள உலக குற்றவாளிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த 20 குழுக்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட 446 பாதாள உலக குற்றவாளிகளில் 80 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 80 பாதாள உலகக் குற்றவாளிகளில் 53 சந்தேகநபர்கள் அழைப்பாணையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அலவ்வ - வலகும்புர மாஓயாவில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

14 வயதான நான்கு சிறுவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர். 

நண்பர்கள் ஐவர் மாஓயாவில் குளிப்பதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அலவ்வ மற்றும் பொல்கஹவெல பகுதிகளை சேர்ந்த நால்வரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் சென்னையில் நடைபெற்ற 16வது எடிசன் விருது விழாவில், "ஐயோ சாமி" என்ற இலங்கைத் தமிழ்ப் பாடலைப் பாடிய விண்டி குணதிலக, 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடலுக்கான விருதை வென்றுள்ளார்.

விருதினை பெற்றுக் கொண்ட வின்டி குணதிலக்க நேற்று இரவு ஸ்ரீலங்கன் எயார் விமானமான UL 218 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்த விருது வழங்கும் விழா சர்வதேச திரைப்படங்கள் மற்றும் பாடல்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மார்ச் 24 அன்று இந்தியாவில் சென்னையில் நடைபெற்றது.

இப்பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இப்பாடலுக்கு இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் இவ்விருதுகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இணைந்து கொண்டனர். 

எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கான நீதி நடவடிக்கையை தொடர்ந்து அமுல்படுத்துவோம் என பொது பாதுகாப்பு அமைச்சர் திடிரான் அலஸ் கூறுகிறார்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை வழங்குமாறும், அவ்வாறான தகவல்களை வழங்குபவர்களை அடையாளம் காண முடியாது எனவும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் இவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு ’விசா’ எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூன்று பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

பல வருடங்களாக விசாரணை நிறைவடையாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை விரைந்து முடித்து அந்த அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவிடம் பொலிஸ் மா அதிபர் உரிய பணியை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளினால் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியமும், கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்காமல் போனமை தெரியவந்துள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு ஒழுக்காற்று விசாரணைகளை விரைந்து முடித்து நீதி வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்வேறு அதிகாரிகளின் நிர்வாகத்தின் போது சிறு தவறுகளுக்கும் அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படுவதால் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை இழந்த அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோர் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகார செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கும், இந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி வாங்க்கும் இடையில் விசேட இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு 7இல் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் இந்த இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், மதிய உணவு உண்ணும் போது சில விடயங்களை கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதர் முதலில் புறப்பட்டு சென்றார்.

10 நிமிடங்களின் பின்னர் சஜின் வாஸ் குணவர்தன அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.