web log free
July 27, 2024
kumar

kumar

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ச அல்ல என்றும் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் அதிலிருந்து அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு எக்காலத்திலும் அநீதி இழைக்கப் போவதில்லை எனவும், அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் பூரண ஆதரவைப் பெற வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இலங்கை இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் நேற்று (17) கையளிக்கப்பட்டது.

அதிகாரப் பகிர்வு , வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பில் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் அவரது இந்திய விஜயத்தின் போது வலியுறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும் பொறுப்புகூறலையும் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வை நிராகரித்து, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு இலங்கை முயற்சிப்பதாக கடிதத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ் மக்களது பாதுகாப்பு, தனித்துவம் மற்றும் இருப்பு என்பன இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட விடயம் அல்லவெனவும் இரா.சம்பந்தன் பாரத பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழ் கட்சிகள் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை கடந்த 10 ஆம் திகதி கையளித்திருந்தது.

இதேவேளை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மற்றுமொரு கடிதத்தை 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிக்கும் நோக்கில், கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்தனர்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதாக அமைச்சர் நசீர் அஹமட் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். 

அமைச்சர் நசீர் அஹமட் அவ்வாறு கருத்து வெளியிடுவது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரச அதிகாரிகளின் கோபத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளதென பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த முன்னாள் அரச அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இணையமொன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

எதிர்கட்சி சார்பில் (ஐக்கிய மக்கள் சக்தி) பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான நசீர் அஹமட் அமைச்சு பதவி எனும் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் உணர்வுமிக்க ஆதரவாளர்களையும் காட்டிக் கொடுத்து அரசாங்கத்தின் காலடியில் விழுந்து கேவலமான பிழைப்பு நடத்துவது போல் அரச அதிகாரிகள் செயற்படுவதில்லை என குறித்த அரச அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் நசீர் அஹமட்டால் காத்தான்குடியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அரச அதிகாரிகள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கிழக்கில் தான் வைப்பது தான் சட்டம் எனவும், கல்வி செயலாளர் திஸாநாயக்கவை இரவோடு இரவாக தூக்குவதாகவும், அவரை வீதிக்கு இறங்க விடாமல் செய்வதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நசீர் அஹமட் தனது எல்லையை மீறி வெளியிட்ட இவ்வாறான கருத்துக்கள் சிங்கள முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகவும், அவர் தனது அரசியலை தக்க வைத்து கொள்ள இவ்வாறு கருத்து வெளியிட்டமைக்கு எதிராக அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளதுடன், தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நசீர் அஹமட் தொடர்பில் மேலிடத்தில் முறையிட உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரச ஊழியர்களை இணைத்து கொண்டு பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் பிரபல அரச ஊழியர்கள் தொழிற்சங்க முக்கியஸ்தர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை எரித்து நாசம் செய்தமை தொடர்பிலான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க ஆரம்பித்துள்ளது.

அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆரம்ப கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி, அழிக்கப்பட்ட அசையா சொத்துக்களுக்காக கடந்த அரசாங்கத்தின் கிட்டத்தட்ட 15 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட 72 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அழிக்கப்பட்ட சொத்து வீடுகள் மற்றும் பொருட்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பல சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. குழுக்கள் மூலம் உரிய அறிக்கைகள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடும் போது பெறுமதியற்ற விலைகளை வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இடிந்த கட்டிடங்களுக்கு இழப்பீடும், இரண்டாம் கட்டமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும்.

சில அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக பெருமளவிலான காப்புறுதி இழப்பீடுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் விசாரணையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அழிக்கப்பட்ட தனது சொத்துக்களுக்கான நட்டஈடு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், அதனை ஒரு குழுவினர் பெற்றுள்ளதாகவும் தமக்கு தெரியவந்துள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(18) மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் கூறினார். 

எவ்வாறாயினும் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. 

கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார். 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை நடுக்கணக்கு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

5 பிள்ளைகளின் தாயான 80 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று(17) காலை லிந்துலை - பம்பரகலை நடுக்கணக்கு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே குறித்த பெண் குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். 

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் பிரதேச மக்களால் லிந்துலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறான குளவிக் கொட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் தமக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டின் நிதி வங்குரோத்துக்கான காரணங்களை ஆராயும் பாராளுமன்றக் குழு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படுமாறு SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆற்றல் உள்ளவர்களையே சபாநாயகர் குழுவின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார் என்றார்.

“அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இவ்வாறான ஒரு தெரிவுக்குழு செயற்படுமானால், அது நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையையும் செய்யாது. நாடு திவாலானதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதனை நிறைவேற்றும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொறுப்புவாய்ந்த அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு உள்ளது” என்று காரியவசம் கூறினார்.

குழு சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை குழுவிற்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் முதிர்ச்சியடையாமல் நடந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்களின் வாழ்வில் விளையாடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத் தரப்பின் கோரிக்கையை அடுத்து இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினரும் இவ்விடயம் தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும் எம்.பி கூறினார். 

“எனினும், எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை குழுவுக்கு பரிந்துரைக்க ஒரு மாத காலம் தாமதம் செய்தனர். இந்த விவகாரம் நாடாளுமன்ற அலுவல் குழு கூட்டத்தில் பலமுறை எழுப்பப்பட்ட பின்னரே அவர்கள் தங்கள் வேட்பாளர்களை அனுப்பினர்,'' என்றார்.

கொழும்பு ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக கட்டிடங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகருக்கு மாற்றுவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்கு மேலதிகமாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, அமைச்சரவை செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய அலுவலகங்களும் கோட்டேக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பாதுகாப்பு அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க புராதன கட்டிடங்களை சுற்றுலா தலங்களாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பொலிஸ் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் பொலிஸ் பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்திய சம்பவத்திற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ எடுக்கும் போது பெண் சீருடை அணிந்திருந்ததாகவும், மற்றொரு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் அவரை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கான்ஸ்டபிள் தனது முன்னாள் காதலன் என்றும், தற்போது இருவருக்கும் இடையே அப்படி எந்த உறவும் இல்லை என்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் பொலீஸ்  கூறியுள்ளார்.

மேலும் இந்த கான்ஸ்டபிள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாக கூறப்படும் நான்கு மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாயில் இருந்து சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதி ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சிறுமிக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததுடன், மறுநாள் இந்த சுகவீனம் ஏற்பட்டதாக சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

இந்த சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.