கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (20) கடும் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அப்பகுதி மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், வயோதிபர்கள், சிறு குழந்தைகள், வெளியூர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வெப்பமான காலநிலை தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி - ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி அக்குரணையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அக்குரணை நகரின் பாதுகாப்பு நேற்றிரவு முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 அவசர இலக்கத்திற்கு நேற்றிரவு அக்குரணை நகரில் சில நாசகார நடவடிக்கை இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதன் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.
தேவைப்பட்டால் அப்பகுதிக்கு மேலதிக இராணுவக் குழுக்களை அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழு ஹர்த்தால் நடத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி உரிமைகளை வேறு தரப்பினருக்கு வழங்குதல், வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனை, தொல்லியல் எச்சங்கள் என தமிழர்களின் நிலங்கள் சூறையாடப்படுவது உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து இந்த ஹர்த்தால் நடத்தப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மாகாணங்களில் முழு ஹர்த்தால் அன்றைய தினம் அனைத்து கடைகளையும் அடைத்து போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அரச ஊழியர்களும் இந்த முழு ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அன்றைய தினம் நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குழுவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் குழுவும் அதில் பிரதானமாக உள்ளதுடன், மற்றைய குழு ஜனாதிபதியுடன் பயணிப்பது பொருத்தமானது என்று கூறும் குழுவாகும்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, போயா தினத்திற்கு முன்னர் மொட்டு எதிர்க்கட்சிக்கு செல்ல தயார் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் மொட்டு எதிர்க்கட்சிக்கு செல்லும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (ஏப்ரல் 19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் TID முன் அழைக்கப்பட்டுள்ளார்.
காலி முகத்துவாரப் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, காலி முகத்திடலின் அழகைக் கெடுக்கும் அல்லது சேதப்படுத்தும் வகையிலான இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகள் இனிமேல் அந்தப் பிரதேசத்தில் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அதிகாரசபை செலவிடவுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் அந்த பகுதியில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர்செய்வதற்காக மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடல் பொதுமக்களுக்கு இலவச நேரத்துக்கும் விசேட சமய நடவடிக்கைகளுக்காகவும் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
நிலுவையில் உள்ள அமைச்சரவை மாற்றம், பதவி காலம் முடிந்த ஆளுநர்கள் நியமனம் மற்றும் தற்போது வெற்றிடமாக உள்ள 12 தூதுவர்களின் நியமனம் ஆகியவற்றை ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கத்தின் உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வட்டாரங்களின்படி, தற்போது பதவிக்காலம் முடிவடைந்துள்ள ஒன்பது ஆளுநர்களும் நீக்கப்பட உள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் நியமனம் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
மொட்டு கட்சி முக்கியஸ்தர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் 9 பேரில் ஐந்து பேரை மொட்டுவும் ஏனைய நால்வரை ஐ.தே.கவையும் நியமிக்க இணக்கம் காணப்பட்டது.
இதன்படி தற்போதுள்ள ஆளுநர்களில் ஐவரை நியமிக்குமாறு மொட்டு கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள ஆளுநர்களின் பெயர்கள் அன்றைய தினங்களில் ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டன.