web log free
July 12, 2025
kumar

kumar

சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி பதவிக்கு சஜித் தகுதியற்றவர் என தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என எவரேனும் கூறினால் அது கட்டுக்கதை எனத் தெரிவித்தார்.

பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் அது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றி அறிக்கையொன்றை வெளியிடத் தயார் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகள் அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானது என இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றது. சம்பவத்தில் அதனை இயக்கிய பொறியியலாளர் மற்றும் பயிற்சியாளர் மரணமடைந்தனர். 

அமைச்சரவையின் ஒற்றுமையை உடைத்து கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியமைக்காக அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று அமைச்சரவை கூட்டத்தில் மன்னிப்பு கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது கருத்துக்களை அமைச்சர் அங்கு முன்வைக்க உள்ளார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான ரொஷான் ரணசிங்கவுக்கும் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியமையினால் அமைச்சர் ரணசிங்க அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

கடும் வரட்சி காரணமாக வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளது.

வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் கிட்டத்தட்ட 106 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன.

ஏறக்குறைய அனைத்துமே காய்ந்து போனதுடன், வில்பத்வ தேசிய வனப் பூங்காவில் வசிக்கும் விலங்குகளுக்கு குடிநீர் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன.

இது தொடர்பில், வில்பத்துவ தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் சுரங்க ரத்நாயக்கவிடம் கேட்டபோது, தேசிய வனப் பூங்காவில் சுமார் 106 சிறிய ஏரிகள் உள்ளதாகவும் அவற்றில் ஐம்பது வீதமானவை கடும் வரட்சி காரணமாக வறண்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப் பட்டது. தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் 16 நிபுணர்கள் தயாரித்த அறிக்கை கொழும்பு மாநகரில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அன்றாட பாவனைக்காக பயன்படுத்தும் பெரும்பாலான உணவுப் பொருட்களை வீணடிப்பதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு நகரில் ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் அதேவேளையில் நாளாந்தம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியூர்களில் இருந்து கொழும்புக்கு வருவதாகவும் இந்த மக்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் வீணடிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் எந்தவொரு உணவுப் பொருளும் கொழும்பை அடையும் தூரம் ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.

இந்த ஆய்வின்படி, கொழும்பு மாவட்டத்தில் உணவு வீணாக்கப்படுவது தேசிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சுயேட்சை உறுப்பினர்களின் குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இதுவரை உருவாகியுள்ள மிகப்பெரிய கூட்டமைப்பாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா குறிப்பிடுகின்றார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு மேலதிகமாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பல அமைச்சர்கள் மற்றும் குமார வெல்கம ஆகியோரும் இந்த கூட்டணி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் வாரத்தில் இது போன்ற இன்னும் பல குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எம்.பி. கூறினார்.

ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் நிமல் லான்சா மேலும் தெரிவித்தார்.

வெலிவேரிய நகரிலிருந்து குறுக்கு வீதியில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காரில் பயணித்த 24 வயதுடைய நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வலது கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலவேரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd