web log free
July 27, 2024
kumar

kumar

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்கத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தனக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்துள்ளதாக இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

“நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு எனக்கு 24 மணி நேரமும் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாக ஒரு அழைப்பாளர் என்னிடம் கூறினார். எனக்கு எப்பொழுதும் பொது மக்களின் ஆதரவு இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என மீரிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

"SJB யில் இருந்து யாரும் இடைக்கால அரசாங்கத்தில் சேர மாட்டார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

பிரிட்டனில் பாராளுமன்ற அலுவல்கள் நேரத்தில், 'மொபைல் போனில்' ஆபாச படம் பார்த்த அமைச்சர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த 12 பெண் எம்.பி.,க்கள், அரசு தலைமை கொறடாவை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், பார்லி., அலுவல் நேரத்தில், அமைச்சர் ஒருவர் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்ற பழமைவாத கட்சியின் கொறடா கிறிஸ் ஹீடன் ஹாரிஸ், அவற்றை பார்லி., குறை தீர்ப்பு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

''இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஹீடன் ஹாரிஸ் உறுதி அளித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால், அடுத்த நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் அதிகாரிகள் தாக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அங்கு தற்காப்புக்காகவே செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் வாகனங்களில் போடப்பட்டிருந்த தடைகளை அகற்ற பொலிஸாருக்கு போராட்டக்காரர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கை ஒன்றே மேற்கொள்ளப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

இலங்கை நாட்டில் தவறான கொள்கை முடிவின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து விட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது.

அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, பால், டீ உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது.

இலங்கையில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்பட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.

ஆனாலும் இலங்கை அரசு பதவி விலகாமல் போராட்டக்காரர்களை சமாளித்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.

மத்திய அரசு இலங்கைக்கு உதவி செய்யும் அதே நேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்த அந்த தீர்மானம் வருமாறு:

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது.

இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. எனினும் இது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். அதன் பிறகு அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவினத் தலையீடுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ராஜினாமா செய்துவிட்டு புதிய பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிகிறார்.

சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை எனவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான இன்றைய சந்திப்பு மிகவும் காரசாரமான வடிவம் பெற்றுள்ளது.

கடும் வாக்குவாதத்திற்கு இடையே குழு கூட்டம் முடிந்தது. முக்கியமாக இடைக்கால அரசு குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இடைக்கால அரசாங்கம் தேவை இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, மொட்டுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும பிரதமராவதற்கு சதி செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள டலஸ் அழகப்பெரும, தான் எந்தவொரு சதிச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குடும்பப்பிரச்சினை எனவும் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குடும்பக் கதைகள் தேவையற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் ஒருபோதும் பிரதமரை பதவி விலகுமாறு கோரவில்லை எனவும், தனது சகோதரர் தன்னை விட பெரியவர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

113 இல் பிரச்சினை இல்லை எனவும், 113ஐ காட்டினால் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனக்கு 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகக் கோரி மாத்தறையிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 'கொடகோகம காலி கிளை' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு கிராம திறப்பு விழாவில் ஓமல்பே சோபித தேரரும் கலந்துகொண்டார்.

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் வடிவமைப்பும் இருந்தது.

நாட்டு மக்கள் கஸ்டத்தில் இருக்கும் போது அரசாங்கம் இரண்டாகப் பிரிந்து பெரும்பான்மை தேடி அரசியல் செய்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு, நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதிலும் எதிர்கட்சி ஆர்ப்பாட்ட பேரணி செய்வதிலும் இருக்கும் நிலையில் ஆளும் கட்சி இரண்டாகப் பிரிந்து பெரும்பான்மை கட்டியெழுப்ப முயற்சித்து கொண்டிருக்கிறது. ஆனால் நாடு கஸ்டத்தில் இருக்கிறது. நாங்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறோமா அல்லது மாற்று நிகழ்த்தி நிரலில் வேலைபளுவாக இருக்கிறோமா? என்று நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.