அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல் தடவையாக இன்றையதினம் (07) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தனவின் பெயரும் காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழியப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன அதனை வழிமொழிந்தார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.
குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குழுவில் தெரிவித்தார்.
அத்துடன், எந்தவித அரசியல், கட்சி பேதங்களும் இன்றி ஒரே குழுவின் உறுப்பினர்களாக அனைவருடனும் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் கோப் குழுவின் உறுப்பினராக செயற்பட்ட போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும், பரிந்துரைகளை செயற்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையியற் கட்டளைகளை திருத்துவதன் தேவையையும் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புற, லொஹான் ரத்வத்த, இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர திசாநாயக்க, ரவுப் ஹக்கீம், டிலான் பெரேரா, மஹிந்தானந்த அளுத்கமகே, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார ஜயமஹ, ஹேஷா விதானகே, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் குமார சுமித்ராறச்சி, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, எம். ராமேஸ்வரன், காமினி வாலேபொட, ராஜிகா விக்ரமசிங்க, மதுர விதானகே, (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்கும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ச செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார். தேசிய தேர்தல் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி உருவாகி வரும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
மேலும், எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்று கட்சிகள் விவாதிக்கும் நேரத்தில் இது நடைபெறுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக நாடு முழுவதும் அரசியல் பேரணிகளை இந்த குழு ஏற்கனவே நடத்தத் தொடங்கியுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், SLPP, ஒரு கட்சி என்ற வகையில், இதுவரை எந்த முறையான முடிவையும் எடுக்கவில்லை.
உள்ளக வட்டாரங்களின்படி, நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களுக்கும் இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அல்லது வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், மாலை அல்லது இரவில் ஏற்படக்கூடிய சில மழையைத் தவிர, முக்கியமாக வறண்ட வானிலை இருக்கும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தான் விற்பனை செய்யும் ஐந்து வகையான எரிபொருட்களாலும் இலாபம் ஈட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
லங்கா சுப்பர் டீசல் லீட்டருக்கு 78 சதம், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 61 சதம், ஓட்டோ டீசல் லீட்டருக்கு 60 சதம், ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு 15 சதம், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டருக்கு 14 சதம் இலாபம் ஈட்டுவதாக அமைச்சர் கூறுகிறார்.
95 ஒக்டேன் பெட்ரோல். 163.41 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 144.50 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெட்ரோல். 130.44 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 107.47 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 3.15 ரூபாவாகவும் வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
'மக்கள் வங்கி பணம் அனுப்பல் சேவை கோடி அதிர்ஷ்டம் -2023' இன் மாபெரும் சீட்டிழுப்பில் ரூபா. 10 மில்லியன், ரூபா. 3 மில்லியன் மற்றும் ரூபா. 2 மில்லியன் பரிசுத் தொகைகளுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு மக்கள் வங்கியின், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள் வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
2023 டிசம்பர் 10 முதல் 2023 டிசம்பர் 31 வரையிலான வாராந்த வெற்றியாளர்களும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான இலட்சாதிபதி;களும் நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமக்கும் தமது குடும்பங்களுக்கும் சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அயராது உழைக்கும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், பாராட்டுவதற்காகவும் மக்கள் வங்கி 'கோடி அதிர்ஷ்டம் 2023' சீட்டிழுப்பை ஆரம்பித்து.
கிளைவ் பொன்சேகா - மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர், அஸ்ஸாம் ஏ. அஹமத் - நிதித் தலைவர், நிபுணிகா விஜயரத்ன - பிரதிப் பொது முகாமையாளர் (வங்கி ஆதரவு சேவைகள்), ஈ.ஏ.எம். திஸாநாயக்க - பிரதம உள்ளக கணக்காய்வாளர், நாலக விஜயவர்தன - சந்தைப்படுத்தல் தலைவர், அருணி லியனகுணவர்தன - உதவிப் பொது முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், ரேணுகா அருணாச்சலம் - பிரதம முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், திலினி பெரேரா - சிரேஷ்ட முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், விபுல வர்ணகுல - சிரேஷ்ட முகாமையாளர், தகவல் தொழில்நுட்பம், நதீஷா தென்னகோன் - முகாமையாளர், வெளிநாட்டு நாணயக் கணக்கு மற்றும் சுதீர சமரசிங்க – மேல்மாகாண வருமான வரித் திணைக்களத்தின் சிரேஷ்ட மதிப்பீட்டாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால், சமூக வலைதளங்களுக்குச் சொந்தமான மார்க் ஜூக்கர்பெர்க்கின் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் நேற்று திடீரென முடக்கப்பட்டன.
பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்படுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
சமூக ஊடக தளங்களான Facebook, Messenger மற்றும் Instagram ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து Meta பங்குகளும் 1.5 சதவீதம் சரிந்தன.
ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம். சில மணி நேரம் கழித்து, 'மெட்டா' நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு, பிழையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் தங்கம் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியூடாக இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறினார்.
இருநாடுகளுக்கும் இடையிலான மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை இலங்கை கடலுக்குள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் தொலைபேசி கலந்துரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் செயற்பாடு நிறுத்தப்படுமென தமிழக அரசாங்கம் உறுதியளிக்கும் பட்சத்தில் மாத்திரமே மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட முடியும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
2022 மார்ச் மாதத்தில் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இறுதியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து GPS கருவிகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றத்திற்காக 5 இந்திய மீனவர்களுக்கு அண்மையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் பணிப்பகிஷ்கரிப்பையும் முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இலங்கை மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியிருந்தனர்.
இலங்கை மீனவர்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் உள்நுழையும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 12 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புதிய கூட்டணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைக்க எதிர்பார்த்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிமல் லான்சா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தவிர்த்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிசேன தனது கருத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்வதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன ஐக்கிய பெரமுனவின் கீழ் பரந்துபட்ட கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த பிரேரணையை கருத்தில் கொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி தனியான பயணத்தை மேற்கொள்வதாக புதிய கூட்டணியில் செயற்படும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் எதிர்கால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அறியமுடிகின்றது.